அங்கன்வாடி மய்யங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை!

2 Min Read

சென்னை,பிப்.22- தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அங்கன்வாடி மய்யங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும். இதற்காக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மய்யங்களில் முன்பருவ கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி மய்யங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து முதல் வகுப்போ அல்லது பிற வகுப்புகளிலோ அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவி தொகைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மய்யங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற வைக்க வேண்டும்.

2025-2026ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *