சென்னை,பிப்.19- என்றோ அரசு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க தவறும் பட்சத்தில் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை சமூகநீதி மாணவர் இயக்கம் முன்னெடுக்கும் என்று மாநில செயலாளர் கோவை அம்ஜத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பி.எம்.சிறீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவ பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
யுஜிசியின் புதிய விதிமுறைகளை கொண்டு வந்து மாநில உரிமைகளை பறிப்பது, ஆளுநர்களை வைத்து மாநில அரசை இயங்காமல் தடுக்க சதி செய்வது, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்துவது, புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மாநில கல்வி கொள்கைகளுக்கு வேட்டு வைப்பது, நீட் போன்ற நுழைவு தேர்வுகளை கொண்டு வந்து கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை தடுப்பது போன்ற தனது திட்டங்களை ஏற்காத மாநிலங்களை ஒன்றிய அரசு திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த அடாவடித்தனங் களை தமிழ்நாடு மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். எனவே ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை எஸ்எம்ஐ முன்னெடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.