திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் (19.2.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாதாரான இரண்டு அர்ச்சகர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாக வந்த ஒரு செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்படிப்பட்ட ஒருநிலை இருந்தால் அந்த இரண்டு அர்ச்சகர்களும் கலந்து கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவர் என்று தெளிவுபடுத்தி இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிடும் அரசு இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு! அந்த அறிக்கையின்படி, பார்ப்பனரல்லாத அந்த அர்ச்சகர்கள் இருவரும், கோவில் குடமுழுக்கில் பங்கேற்றிருப்பதை வரவேற்பதுடன் – சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட (15.2.2025) தீர்மானங்கள்படி– பழனி, முருகன்கோயிலில் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி அர்ச்சகர்களும் பூஜை செய்திடவும், சிதம்பரம் நடராசன் கோயிலில் மூடப்பட்ட தெற்கு வாயிலைத் திறந்து தீண்டாமை ஒழிப்பினை தீவிர செயலாக்குதலுக்கு உட்படுத்திட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசையும், இந்து அறநிலையத்துறையை கேட்டுக் கொள்கிறோம்.
வயலூர் முருகன் கோயில் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் உடனடி நடவடிக்கைக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
19.2.2025