சென்னை,பிப்.19- அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரம் டிஅய்ஜி மீதான பாலியல் புகார் விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை கருத்தில் கொண்டு பல்வேறு பரிந்துரைகளை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வழங்கியிருந்தார்.
அந்த வழக்கு நேற்று முன்தினம் (17.2.2025) மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் போஷ் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில்தான் சட்டத்தை அமல்படுத்த முடியும். இதுகுறித்து அரசின் விளக்கத்தை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்கிறேன் என்றார்.
விழிப்புணர்வு
காவல்துறை இயக்குநர் சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி, நீதிமன்ற உத்தரவின்படி போஷ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காவல் துறையினரிடமிருந்தும் பெறுவதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும்.
இப்போது பெண்களிடையே நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் இடங்களில் மட்டுமின்றி மற்ற வகைகளிலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற பாலியல் புகார்களுக்கு தைரியமாக புகார் கொடுக்க முன்வருகிறார்கள். காவல்துறையும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, சமீபத்தில் கூட காவல் துறையில் டி.அய்.ஜி அந்தஸ்தில் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி மீது வந்த புகாரை அடுத்து உடனடியாக அவரை தமிழ்நாடு அரசு தற்காலிக பணி நீக்கம் செய்ததை படித்தேன் என்றார்.
கடும் நடவடிக்கை
இதையடுத்து, அசன் முகம்மது ஜின்னா, காவல்துறை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி மீது முறையாக புலன்விசாரணை செய்து 3 ஆண்டு காலம் சிறைத் தண்டனை பெற்று தந்துள்ளோம். மேலதிகாரிகள் மீது புகார் தெரிவித்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் பெண்கள் தற்போது புகார் கொடுக்க முன்வருகிறார்கள். அதுமட்டுமின்றி பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுகிற ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டுமின்றி அவர்களுடைய கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராட்டு
அரசின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தற்போது பெண்கள் அச்சமின்றி புகார் தெரிவிக்க முன்வருகிறார்கள் என்றார். அப்போது நீதிபதி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் காவல்துறையினர் எடுத்த விரைவு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
டி.அய்.ஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி என்று கூட பாராமல் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. ஒன்றிய, மாநில அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள் அச்சமின்றி தைரியமாக வேலைக்கு செல்லுகிற நிலையை உருவாக்க வேண்டும்.
பாலின உணர்திறன் மேம்பட அதற்கென நிதியினை ஒதுக்கிட வேண்டும். வேலைசெய்யும் இடங்களில் அமைந்திருக்ககூடிய அனைத்து உள் புகார் குழு விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
போஷ் சட்டத்தின் அடிப்படையில் விதிகளை குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.