ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்க வேண்டும்! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

viduthalai
3 Min Read

சென்னை, பிப்.19- தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஜன.31ஆம் தேதியிட்ட தங்களின் கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் மய்யம் (Mission Saksham Anganwadi & POSHAN 2.0), மகளிர் சக்தி இயக்கம் (Mission Shakthi) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் (Mission Vatsalya) போன்ற ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு ஜன.29ஆம் தேதி நிலவரப்படி ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நேர்வுகளில், ஒன்றிய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. நிதியாண்டின் முடிவுக்குள் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்துக்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்னும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 304 கோடியில், ஒன்றிய அரசின் பங்குத் தொகையான ரூ.184 கோடி இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலவில்லை. இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை (Single Nodal Agency) கணக்குகளில் உள்ள ரூ. 576.22 கோடியில் இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை ஒன்றிய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும்

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவிக்க வேண்டும்.” இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பெண்களே ஓட்டுநராக இருக்கும்
‘பிங்க்’ ஆட்டோ சென்னையில் அறிமுகம்

சென்னை, பிப். 19- சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமூகநலத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆட்டோ வாங்குவதற்காக அரசு மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்படும்.

ஆட்டோ ஓட்ட பயிற்சி

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திட்டத்துக்கேற்ப மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, இது தொடர்பாக கருத்து கேட்பதற்காக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. .

பெண்களே ஓட்டுநர்

இது தொடர்பாக அரசிதழில் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் கூறியிருப்பதாவது: சமூகநலத் துறையின் பிங்க் ஆட்டோ திட்டத்தின் கீழ் பெண்களே உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் இருக்கும் ஆட்டோவே பிங்க் ஆட்டோ எனப்படும். இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் பிங்க் நிற சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவுக்கு முழுமையாக பிங்க் நிறம் பூசப்பட வேண்டும்.

அவசர காலங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் கருவிகள் (ஜிபிஎஸ், விஎல்டிடி) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆட்டோவுக்கான உரிமத்தை 5 ஆண்டுகள் வரை பெயர் மாற்றம் செய்ய இயலாது. இந்த வரைவு திருத்தங்கள் மீது 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *