புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடி நிவாரண நிதி, வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது தமிழ்நாடு அரசு அறிக்கை

viduthalai
2 Min Read

சென்னை, பிப். 19- தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உட்பட 18 மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 5 லட்சத்து 18,783 விவசாயிகள் பயன்பெறுவர். இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புயலால் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதோடு வீடுகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்தன.

வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகின. தமிழ்நாடு அரசு ஃபெஞ்சல் புயலை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்தது. தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஒன்றிய அரசும் பெஞ்சல் புயலை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்தது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமான ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், புயலால் பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க பல்வேறு துறைகளுக்கு ரூ.80 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவித்தும், சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.500 கோடி நிவாரணம்

அத்துடன் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுத்து, மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500-ம், நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000-ம், நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500-ம் நிவாரணம் என்ற அடிப்படையில் விரைந்து நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி, ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை உட்பட 18 மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான 3.23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 லட்சத்து 18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.498.8 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணையும் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *