வல்லம்,பிப்.18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் சமுதாய வானொலி மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி சமுதாய வானொலிகளின் கூட்டமைப்பு சார்பாக உலக வானொலி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சமுதாய வானொலிகளின் கூட்டமைப்பு துணைத்தலைவர் முனைவர் சந்திரசேகரன் காயத்ரி மற்றும் உஸ்மான் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் சமுதாய வானொலிகள் எவ்வாறு செயல்படவேண்டும், காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமுதாய வானொலிகள் திறம்பட செயல்பட வேண்டும், மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வானொலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன போன்ற கருத்துகள் மாணவர்களிடையே பகிரப்பட்டன. மாணவர்கள் சமூக ஊடகங்கள் மீது உள்ள ஆர்வத்தையும் அவர்களின் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள ஒரு மாபெரும் கருவியாக சமுதாய வானொலி செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதில் பல்வேறு சமுதாய வானொலிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வானொலிகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கல்வி புல முதன்மையர் பேரா. வயலட் ஜுலி தமது உரையில் பெரியார் சமுதாய வானொலி 90.4, 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்கிவருவதாக தெரிவித்தார். சமுதாய வானொலியின் முக்கியத்துவத்தையும் அவற்றின் சேவைகளையும் எடுத்துரைத்தார்.
இதன் தொடர்ச்சியாக சந்தோஷ் குமார் (ரேடியோ ஜாக்கி துபாய்) மற்றும் முனைவர் விஜயராகவன், (ஒருங்கிணைப்பாளர் அரசு சமுதாய வானொலி) ஆகியோரின் மூலம் மாணவர்களுக்கு ரேடியோ ஜாக்கி நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. உலக வானொலி தின போட்டிகளில் பங்குபெற்று சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை பெரியார் சமுதாய வானொலி துணை இயக்குநரும் தமிழ்நாடு புதுச்சேரி சமுதாய வானொலிகளின் கூட்டமைப்பின் துணை தலைவரும் ஆன முனைவர் ச.நர்மதா அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.