சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
சென்னை, பிப். 18- விகடன் இணையதளம்
முடக்கப்பட்டது, கருத்துரிமைபறிப்பு என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.மணிமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–
இந்தியர்களை கை கால்களில் விலங்கிட்டு அமெரிக்க அரசு நாடு கடத்திய விவகாரத்தில், அமெரிக்காவின் அவமதிப்பை சகித்துக் கொண்ட ஒன்றிய அரசை விமர்சித்து விகடன் கார்ட்டூன் வெளியிட்டது.
இதற்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த
நடவடிக்கையை சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.