சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானங்கள் (2)

Viduthalai
3 Min Read

கடந்த 15ஆம் தேதியன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் ஆறு தீர்மானங்கள் சமூகநீதித் தொடர்பானவை!
எவற்றையெல்லாம் காரணங்களாக்கி, இடஒதுக் கீட்டை எதிர்த்து வந்தார்களோ அவர்களே பிற்காலத்தில் அந்தக் காரணங்களை நியாயப்படுத்தி, சட்டம் இயற்றி செயல்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
இடஒதுக்கீடு எந்தக் காரணத்துக்காக கொண்டு வரப்பட்டது.
ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப் பட்டவர்களைக் கை தூக்கி விடுவதற்கான ஏற்பாடு இது.
பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் உதவி செய்வதை எவராவது மறுப்பார்களா? காரணம் பொருளாதாரத்தில் அடித்தளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

அதே போல கல்வியில் பல தலைமுறைகளாக உரிமை மறுக்கப்பட்டவர்கள் – அதுவும் சாஸ்திர ரீதி யாகக் கல்வியிலிருந்து புறந் தள்ளப்பட்டவர்களுக்கு சமுதாயத் துறையில் கீழ்ஜாதி என்று அடித்துத் தள்ளப்பட்டவர்களுக்கு, அந்தக் கல்வியையும் சமூக அடிப்படையையும் காரணியாகக் கொண்டு, கொண்டு வரப்பட்டதுதான் இடஒதுக்கீடு.
தொடக்க முதலே இதனை எதிர்த்து வந்த பார்ப் பனர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் (ஆர்.எஸ்.எஸ். என்றாலும் சரி, சங்பரிவார் என்றாலும் சரி, பிஜேபி என்றாலும் சரி இவை சமூகநீதிக்கு எதிரான சிந்தனை உடையவை. ஏன் கொள்கையாகவே கொண்ட வர்களாயிற்றே!) வந்த நிலையில், இடஒதுக்கீட்டின் ஆணி வேர்களை வெட்டும் வேலையில் வஞ்சகமாக, தந்திரமாக இறங்கி விட்டனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. சட்டப்படி, நியாயப்படி அவர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
கடும் போராட்டங்களையும் மாநாடுகளையும் (மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம்). நடத்தியதற்குப் பிறகு வாராது வந்த மாமணியாம் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்த நிலையில் முதன் முதலாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது.

வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு வெளியி லிருந்து ஆதரவு கொடுத்து வந்த பிஜேபி, பிற்படுத் தப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு துறைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்தார் என்பதற்காக அந்த ஆட்சியைக் கவிழ்த்தனர்.
இதனைத் தன் வாழ்க்கை வரலாற்று நூலில் அப்பட்டமாகவே ஒப்புக் கொண்டவர் எல்.கே. அத்வானி.
அகில இந்திய மருத்துவக் கல்விக்கு எம்.பி.பி.எஸ்.எஸில் 15 விழுக்காடு இடங்களை தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.
மருத்துவ முதுநிலைப் படிப்பில் 50 விழுக்காடு இடங்களை அளித்து வருகிறோம். அதற்கு இடஒதுக்கீடு கிடையாது என்றது ஒன்றிய பிஜேபி அரசு; உச்சநீதி மன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி அந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுத்துள்ளோம். தி.மு.க. அரசுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு.
ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; அகில இந்திய அளவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இதன் மூலம் பயன் அடைந்திருக்கின்றனர்.
மருத்துவக் கல்லூரியில் சேர ‘நீட்’ என்ற ஒரு தேர்வு – ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குறி பார்த்துக் குத்தும் குரூரமான ஏற்பாடு இது.

காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது என்று கரடியாய்க் கத்தினார்கள். உண்மை என்னவென்றால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ‘நீட்’ செல்லாது – என்று தீர்ப்பு கிடைக்கப் பெற்றது. அதற்கு மேல் காங்கிரஸ் தலைமையிலான (UPA) அரசு மேல் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. உண்மையிேலயே அதனை தாக்கல் செய்தது மோடி தலைமையிலான அரசு தான் (NDA).
பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கும் (பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கு) 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதே!
இருந்தாலும் பெரும்பான்மைப் பலம் நாடாளு மன்றத்தில் இருக்கிறது என்கிற காரணத்தால் அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அதன் பலன் யாருக்குப் போய்ச் சேர்ந்தது?

எடுத்துக்காட்டாக ஒன்று பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் (Cleark) தேர்வுக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரியுமா?
தாழ்த்தப்பட்டோருக்கு – 61.25
பழங்குடியினருக்கு – 53.75
பிற்படுத்தப்பட்டோருக்கு – 61.25
பொருளாதாரத்தில் நலிந்ததாகக் கூறப்படும் உயர்ஜாதி பார்ப்பனருக்கு – 28.5
புரிகிறதா? பழங்குடியினரைவிட உயர் ஜாதியி னருக்கு – குறிப்பாகப் பார்ப்பனருக்கு இவ்வளவுக் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் வேலை உறுதி – சூட்சமம் புரிகிறதா?
அடிப்படையான இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டுதான் சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் சமூகநீதிக்கு முக்கியத்துவம் – கொடுத்துத் தீர்மானங்கள் தீட்டப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *