பிரக்கியாராஜ், பிப்.17 உத்தரப்பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரையிலான 45 நாள்களுக்கு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பஞ்சதத்துவ பவுண்டேசன் என்ற பெயரிலான என்.ஜி.ஓ. அமைப்பின் நிறுவனர் மற்றும் தண்ணீர் மனுஷி என அழைக்கப்படும் ஷிப்ரா பதக் அங்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதன்படி, நாக சாதுக்கள் என்பவர்கள் இதில் கலந்து கொண்டு ஆறுகளை பாதுகாப்போம் மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதேபோன்று ஆண்டுதோறும் ஒரு மரக்கன்று நடுவோம் என்றும் அதனை பாதுகாப்போம் என்றும் அவர்கள் உறுதிமொழியாக எடுத்து கொண்டனர்.
பாவங்களை செய்து செல்வதா?
நிகழ்ச்சியில் பேசிய அம்ரிதேஷ்வர் மகாதேவ் பீடாதீஷ்வர் சகதேவானந்த் கிரி கூறும்போது, ‘‘மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும், தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். அன்னை கங்கையின் கண்ணியம் பராமரிக்கப்பட வேண்டும். இது அவர்களுடைய கடமையாகும்’’ என கூறினார். ‘‘சமூக மக்கள் அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை மறந்து வருகின்றனர் என்பது பெரிதும் வருந்தத்தக்கது. மக்கள் பாவங்களை கழுவுவதற்காக வருகின்றனர். ஆனால், பாவங்களை செய்து விட்டு செல்கின்றனர்’’ என வேதனையை வெளிப்படுத்தினார். ‘‘இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. ஆனால், மதுபாட்டில்கள், ஆடைகள் மற்றும் அசிங்கங்கள் (பயன்படுத்தப்பட்ட ஆணுறை) என்பன பல்வேறு இடங்களிலும் பரவி காணப் படுகின்றன’’ என்று குறை கூறினார்.
குப்பைகளைத்தான் குவிக்கின்றனர்
இதேபோன்று ஷிப்ரா பதக் கூறும்போது, கோடிக்கணக் கான மக்கள் பாவ விமோசனம் பெறுவதற்காக கும்பமேளா வுக்கு வருகிறார்கள். கங்கையில் குளித்த பின்னர், அவர்கள் குப்பைகளை விட்டு விட்டு செல்கிறார்கள் என்று குமறினார்.