விகடன் இணையதளம் முடக்கம்
தொல். திருமாவளவன் கண்டனம்
சென்னை, பிப்.17 ‘விகடன் இணையதளம்’ முடக்கப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர். அது வருமாறு:
கருத்து சுதந்திரம்
நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தமிழ் வார இதழான ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் ஆகியவை கருத்துச் சுதந்திரத்தை உறுதியாகப் பற்றி நிற்கும் ஒரு ஊடகமாகும். 15.2.2025 அன்று இரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயனர்கள் விகடன் இணையதளத்தை அணுக முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விகடன் இணைய தளம் முடக்கப்பட்டது குறித்து இதுவரை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய கேள் விகளை எழுப்புகிறது. சட்டத்துக்குப் புறம்பாக விகடன் இணைய தளம் முடக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசின் பாசிச போக்கையே காட்டுகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கேலிச் சித்திரம்
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி, ‘விகடன் பிளஸ்’ என்னும் விகடனின் இணைய இதழின் அட்டையில் ஒரு கேலிச் சித்திரம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவிலிருந்து கைகளிலும், கால்களிலும் விலங் கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் பிரதமர் மோடி கவுனம் காத்ததை விமர்சித்து அந்த கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. உண்மையில் அந்த கேலிச் சித்திரம் கோடிக் கணக்கான இந்திய மக்களின் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது.
அதனால் அது சமூக வலை தளங் களில் அதிக அளவில் பகிரப் பட்டது. இது பாஜக ஆதரவாளர் களுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணா மலை விகடனுக்கு எதிராக ஒன்றிய அரசிடம் முறையிட்டதாகவும், அதற்குப் பின்னரே விகடன் இணைய தளம் முடக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சிக் காரர்களே அரசாங்கத்தின் இணை அதிகார அமைப்பாகச் செயல்படும் இந்தப் போக்கு இந்திய சனநாயகம் குறித்த மிகப்பெரிய கவலையைக் கிளப்புகிறது.
இணையதளம் முடக்கம்
இணையதளங்களை முடக்கும் நடவடிக்கைகள், தகவல் தொழில் நுட்பச் சட்டம் (IT Act), 2000- இன் 69A-பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டத்தின் விதிகள் IT (Procedure and Safeguards for Blocking) Rules, 2009 கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த சட்டத்தின் பிரிவு 69A(1) இன்படி ஒரு இணையதளம் முடக்கப்படுவதற்கு முன்பு அதில் வெளியான செய்தியானது தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவுகள், போன்றவற்றுக்கு எதிராக அது இருக்கிறது என்பது குற்றம் சாட்டப்படுபவருக்கு எழுத்து பூர்வமாகத் தரப்பட்டிருக்க வேண்டும்.விதி 8இன் படி, இணையதளத்தை முடக்கும் முன், பாதிக்கப்பட்ட தரப்புக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் விளக்கம் தருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தடை விதிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை வெளிப் படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றத்தை நாட முடியும். ஆனால், விகடன் குழுமத்துக்கு அப்படி எந்தவிதத் தகவலும் கொடுக்கப்படவில்லை. இது சட்டத்தை மீறிய செயலாகும்.
விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது, ஊடக சுதந்தி ரத்திற்கும், மக்களாட்சித் தத்துவத் திற்கும் எதிரானதாகும். எனவே, ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உடனடியாக இணைய தள முடக்கத்தை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.