சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானங்கள் (1)

Viduthalai
4 Min Read

15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானத்தைச் சேர்த்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றுள் ஆறு தீர்மானங்கள் சமூகநீதி தொடர்பானவை –
பிறப்பின் அடிப்படையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், கல்வி கற்க அவனே உரிமையுடையவன் என்றும், சூத்திரன் என்பவன் பிர்மாவின் காலில் பிறந்தவன் என்றும், அவன் பிறவி அடிப்படையில் கல்வி கற்க உரிமையற்றவன் என்றும், சூத்திரனுக்குக் கீழே பஞ்சமன் என்றும், அவன் அவர்ணஸ்தன் என்றும் எல்லா வருணங்களிலும் பிறந்த பெண்களும் அடிமைகளே என்றும் ஆக்கப்பட்ட சமுதாயத்தில் சமூகநீதி என்ற கோட்பாடு மிக முக்கியமான – தேவையான ஒன்று என்பதில் யாருக்கும் அய்யப்பாடு இருக்க முடியாது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சி தோன்றியதற்குப் பிறகு இந்தத் திசையில் – கவனம் செலுத்தப்பட்டது.
டாக்டர் சி. நடேசனார், பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் என்னும் முப்பெரும் திராவிட இனத் தலைவர்களின் ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனையின் அடிப்படையில் இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களிலும் இச்சங்கத்தின் மாநாடுகள் நடத்தப்பட்டு பார்ப்பனரல்லாத மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாண்டேகு – செம்ஸ்போர்டு அறிக்கையைத் தொடர்ந்து 1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 98 இடங்களில் வெற்றி பெற்ற நீதிக்கட்சியின் அமைச்சரவை – வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும்.
அந்த ஆட்சியில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டம் 1920இல் ஏப்ரல் முதல் தேதி நிறைவேற்றப்பட்டது. 1921 முதல் 1927ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வகுப்புவாரி உரிமைக்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
ஆனால் 1928ஆம் ஆண்டில்தான் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் பிரதமராக இருந்த அமைச்சரவையில் இடம் பெற்ற எஸ். முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட வகுப்புரிமைக்கான அரசாணைதான் (G.O.Ms No.1980 Education Dated 15.9.1928) உறுதி செய்யப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது.
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த பார்ப்பன சூழ்ச்சியும் நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான பானகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோதுதான் நீக்கப்பட்டது.
சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவ வழி செய்ததும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆதிதிராவிட சமுதாய மாணவர்களை சேர்க்கும் பள்ளி களுக்குத்தான் கல்வி மான்யம் அளிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்ததும் நீதிக்கட்சி ஆட்சிதான்.

இதற்கிடையில் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டு காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தந்தை பெரியார் தான் வகித்த 29 பதவி களையும் தூக்கி எறிந்து காங்கிரசில் அய்க்கியமானார் 1919 முதல் 1925 வரை நடைபெற்ற ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் பார்ப்பனரல்லாதாருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு தேவை என்கிற வகுப்புரிமை தீர்மானத்தை தந்தை பெரியார் முன்மொழிந்தார் என்றாலும் பார்ப்பனர்களின் ஆதிக்கக் கூடாரமாக இருந்த அன்றைய காங்கிரஸ் அதனை ஏற்கவில்லை என்ற நிலையில் காங் கிரசைவிட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார்.
எவ்வளவோ தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் உடைத்தெறிந்து இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 69 விழுக்காடு இடஒதுக்கீடும், ஒன்றிய அரசைப் பொறுத்த வரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும், பட்டியலின மக்களுக்கு 15 விழுக்காடும், பழங்குடியின மக்களுக்கு 7.5 விழுக்காடு என்ற நிலையும் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கும் அவ்வப்போது தூக்குக் கயிறுகள் தலைக்கு மேல் தொங்கும் நிலை! அதுவும் இந்திய ஒன்றிய ஆட்சி பிஜேபி தலைமையில் வந்தாலும் வந்தது, சமூகநீதியின்மீது நேரிடையாகக் கை வைக்க முடியாது என்ற நிலையில் கொல்லைப்புறம் வழியாக ‘நீட்’ தேர்வு என்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கு (EWS) 10 விழுக்காடு என்றும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு இடஒதுக்கீட்டின் ஆணி வேரைப் பதம் பார்த்து வருகிறது.
போதும் போதாததற்கு நீதிமன்றங்களும் இதற்கு ஒத்துப் போகும் ஆபத்தான நிலையில் – ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர்.
அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் இடம் பெறாத இடஒதுக்கீட்டின் உச்ச அளவு விழுக்காட்டிலும் உச்சநீதிமன்றம் கை வைத்து விட்டது.

50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு செல்லக் கூடாது என்று இந்திரா – சகானி வழக்கில் ஓங்கி அடித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது.
இடஒதுக்கீட்டுக்குச் சவால்கள் தோன்றியிருக்கும் இக்கால கட்டத்தில்தான் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
படித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது, இந்த அறியாமையைப் பயன்படுத்தித்தான் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வஞ்சக முறையில் கொல்லைப் புறமாகப் புகுந்து சமூகநீதிக்குச் சாவுக் குழியை வெட்டி வருகிறார்கள்.
பெரும்பான்மையான மக்களுக்குப் பெரும்பான்மை யினரால் ஆளப்படுவதுதான் ஜனநாயகம் என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவோம்.
சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் வெளிப்படுத்தி ஒன்றிணைந்து போராடுவோம் – வெற்றி பெறுவோம்! சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக் குழு தீர்மானத்தின் உயிர்த் துடிப்பு இதுதான்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *