ராமேசுவரம், பிப்.17- இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தைக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை கடற் படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று (16.2.2025) ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர்
கனிமொழி
எம்.பி. பேசியதாவது:
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை விளக்கியும், ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போது, மீனவர் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார்.
பேச்சு வார்த்தை
வெளிநாடுகளில் இரு நாட்டு எல்லைகளில் மீனவர் பிரச்சினை சார்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, இரு தரப்பினரும் பாதுகாப்பாக மீன் பிடிக்கின்றனர்.
அதே போல, இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனாலும், இதுவரை மீனவர் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர், விரைவில் ஒன்றிய அரசின் இந்தப் போக்கை சரி செய்து, மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பார். இவ்வாறு கனிமொழி பேசினார்.
ஊடகங்கள் முடக்கம்
பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறும் போது, கேள்வி எழுப்பிய போது, “பாஜக ஆட்சியில் ஊடகங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.
எதிர் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றிய அரசு, ஊடகங்களை முடக்கி வருகிறது. கருத்து சுதந்திரத்தை மெல்ல மெல்ல அழிக்க வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் எண்ணமாக உள்ளது” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மீனவப் பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசுராஜா, ராயப்பன், சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.