உறவுகளும் – உணர்வுகளும் (2)

viduthalai
3 Min Read

நேற்றைய (13.2.2025) வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் கொள்கை உறவுகளைச் சந்தித்து, கலந்துரையாடி, நலம் விசாரித்து மகிழ்ச்சி அடைவதில் ஏற்படும் ஈடில்லா இன்பம் குறித்துப் பெரும் புலவர் நன்னன் அவர்களது எடுத்துக்காட்டான பகுத்தறிவுக் குடும்பம் பற்றி எழுதியிருந்தோம்.

அதுபோல இரண்டு, மூன்று நாள்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு – உரையாடல் காரணமாக ஒரு சொல்லொணா மகிழ்ச்சி – மன நிம்மதி எனக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டுத் தலைநகரமான பாரீசில் (பிரெஞ்சு மொழியில் ‘பரி’ பரி என்றே அழைப்பர்) பல ஆண்டுகளாக வாழும் பகுத்தறிவு சுயமரியாதை கொள்கை கொண்ட குடும்பத்தினைச் சார்ந்த ‘மதாம்’ (Madam) தோழர் திருமதி சுசிலா எத்துவால் அவர்கள்;

தோழர் ‘மாசி’ எந்துவால் பிரெஞ்சு இராணுவத் தில் பணிபுரிந்தவர்.

புதுச்சேரிக்காரர். புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த கால கட்டத்திலேயே அங்கிருந்து பல குடும்பங்கள், இராணுவம், தொழில், வணிகம் என பணிகள் மூலம் பாரிசுக்கும் மற்ற பிரெஞ்சு காலனி ஆதிக்கப் பகுதிகளுக்குமாகச் சென்று குடிஉரிமை பெற்றார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் ‘குடிஅரசு’ மூலம் தந்தை பெரியார் தொண்டராகி. அவர் தலைமையிலே பல ஆண்டுகளுக்கு முன் திரு. மாசி எத்துவால் அவர்கள் சுசிலா அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.
தந்தை பெரியார் தலைமையில் திருமணம் நடந்தது முதல் இந்த அம்மையாரும் சுயமரியாதைக் கொள்கை வயப்பட்டு விட்டார்.

தோழர் திரு. எத்துவால் அவர்கள் மறைந்து விட்ட நிலையிலும் – அதன் பிறகும்கூட சுசிலா அம்மையார் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள், திராவிடர் கழகக் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டு வருபவர்.

அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து உறவுகள் நண்பர்களோடு பழகி, நலம் விசாரித்துச் செல்வர். ‘மதாம் சுசிலா’ அவர்களை – எத்துவால் என்று பாரிஸ் நண்பர்கள் அவரை அவ்விதம் அழைத்துக் கலந்துரையாடுவர். சிறந்த தமிழ் உணர்வாளர். எந்த இடத்திலும் கொள்கைப் பிரச்சாரம் – குறுக்கு கேள்விகளைக் துணிந்து தயவு தாட்சண்யமின்றிக் கேட்பார்; வழ வழா கொழா கொழா பேச்சு இன்றி, கொள்கை பற்றிய விவாதங்களில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கண்டிப்புடன் விவாதிப்பார்.

மற்றபடி எல்லோருக்கும் உதவும் பரோப காரியாக அங்கே இருந்திருக்கிறார்; அவரிடம் உதவி பெற்றவர் பலர் இவரிடம் நன்றி காட்டாமல் எதிர்த்தும் பிரச்சாரம் செய்வர்.

அவரோ எது பற்றியும் கவலைப்படாமல் ‘‘தந்தை பெரியார் வழியில் ஏதோ செய்தோம் – பயனடைந்தார் மறந்துவிட்டுத் தூற்றுகின்றனர் – பரவாயில்லை’’ என்ற பக்குவச் சிந்தனைத் தெளிவுடன் சமாதானத்தைச் சொல்லிக் கொண்டு, சொந்தக்காலில் இரண்டு பிள்ளைகளை வளர்த்து, சுயமரியாதை வாழ்வு வாழும் எங்களது கொள்கை உறவு – குடும்பத் தோழர்.

கரோனா காலத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகும்கூட தொலைபேசித் தொடர்பேதுமின்றி அல்லது சந்திப்பும் ஏதும் இல்லாததால் ‘‘அவர் இருக்கிறாரா? இல்லையா’’ என்ற மனக் கலக்கம் குடும்பத்தவர் அனைவருக்கும் ஏற்பட்டு நான் உள்பட கவலையோடு இருந்தோம்.

எனது வாழ்விணையர், பல நண்பர்கள் மற்றும் புதுச்சேரி கழகத் தலைவர் சிவ. வீரமணி அவர்கள் மூலம் விசாரிக்கலாமே என்று முடிவெடுத்து, அவரது முயற்சியில் அவரும், சுசிலா அவர்களிடம் பேசி ‘‘ஆசிரியர் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசுங்கள்’’ என்றதும் உடன் பேசினார்!

எங்கள் அனைவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி – இன்ப அதிர்ச்சி – நெகிழ்ச்சி மிக அதிகம்.

அவ்வளவு பாசத்தோடும், பரிவோடும் பழகிடும் பெரியார் கொள்கைப் பற்றாளர் – தயாளர் – பிறர்க்கு உதவி செய்ய சளைக்காத – நற்பண்புள்ளவர், அவர் துணிவுடன் உலக நாடுகளுக்குச் சென்று திரும்பி சில ஆண்டுகளுக்குமுன் உடல் நலக் குறைவு ஏற்பட்டு பிறகு நன்கு தேறி வந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.

அப்படிப்பட்ட அந்தத் தோழரின் குரல் கேட்டவுடன் எல்லையற்ற மகிழ்ச்சி – குடும்பத்தினர் அனைவருக்கும்.
கொள்கைக் குடும்பப் பாசம் எவ்வளவு நம்மை இணைத்துப் பிணைக்கிறது பார்த்தீர்களா!
எந்த தனிப்பட்ட லாபமும் இல்லை. ஆனால் எத்தனை உறவுகளிலும் இந்த அறுபடா உறவுக்கு ஈடு ஏது? இணை ஏது?
முதுமையில் இப்படி ஒரு முத்திரை உறவுச் சந்திப்பு, உரையாடல் தான் எத்தனைஇழந்த சத்துகளை பல பாச உணர்வின் வற்றாத ஊற்றாக ஊறித் திளைத்து நமக்கு எல்லையற்ற இன்பத்தைத் தருகிறது.
இதுதான் கைம்மாறு வேண்டா கடப்பாடு.

என்னே நட்புறவின் பலமும் விளைவும் மகிழ்ச்சியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *