சென்னை- ராணி மேரி (தன்னாட்சி) கல்லூரி வரலாற்றுத் துறை கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் சிறப்புரை

viduthalai
15 Min Read

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும் ‘சமத்துவம்’ திராவிடக் கருத்தியலின் பிரதிபலிப்பே! அறிவியல் மனப்பாங்கினை வளர்த்திடும் அடிப்படைக் கடமையினை ஆற்றிட மாணவர் சமுதாயம் முன்வரவேண்டும்! சென்னை இராணிமேரி (தன்னாட்சி)

சென்னை- ராணி மேரி (தன்னாட்சி) கல்லூரியின் வரலாற்றுத் துறையும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் (Dravidian Historical Research Centre) இணைந்து ‘திராவிடக் கருத்தியலும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கினை நடத்தினர். 12.2.2025 அன்று கல்லூரியின் பொன்விழா அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கினை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் உமா மகேசுவரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவருமான பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் உரையாற்றினார்.

இரண்டு அமர்வுகள்

தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து கருத்தரங்கின் முதல் அமர்வில், ‘திராவிடக் கருத்தியலும், பிரிட்டிஷ் இந்தியச் சட்டங்களும் – சுதந்திரத்திற்கு முன்பு’ என்ற தலைப்பில் உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளருமான அ.அருள்மொழி உரையாற்றினார்.

அடுத்த அமர்வில், ‘திராவிடக் கருத்தியலும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும்’ (சுதந்திரத்திற்குப் பின்) என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் ராமு மணிவண்ணன் அவர்களும், சென்னை – விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறையின் மேனாள் தலைவரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களும் உரையாற்றினர்.

தொடக்க நிகழ்ச்சியின் இணைப்புரையினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைச் செயலாளர் முனைவர் அ.ரஷீத்கான் அவர்களும், நன்றியுரையினை சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் இணைப் பேராசிரியரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளருமான முனைவர் வெ.மாரப்பன் அவர்களும் வழங்கினர். கருத்தரங்க நிகழ்வுகளிடையே வரலாற்றுத் துறை சார்பாக நடத்தப்பட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பெற்றன.

கருத்தரங்க நிகழ்ச்சிகளை வரலாற்றுத் துறையின் பொறுப்புத் துணைத் தலைவர் முனைவர் கமலா தேவி அவர்கள் ஒருங்கிணைத்து, அவருக்கு ஒருங்கிணைப்புப் பணியில் உறுதுணையாக இருந்த வரலாற்றுத் துறையின்இணைப் பேராசிரியரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் இணைச் செயலாளருமான முனைவர் மு.தேன்மொழி அவர்கள் நன்றியுரை கூறினார். கருத்தரங்க நிகழ்வுகளின் இணைப்புரையினை வரலாற்றுத் துறை மாணவி ரோஜா அவர்கள் வழங்கினார்.

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியரின் தொடக்கவுரை
கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதன் சுருக்கம் பின்வருமாறு:

118 ஆண்டுகள் கல்வி புகட்டி வரும், கல்லூரி முதல்வர் குறிப்பிட்டதைப் போல தமிழ்நாடு அரசு நடத்தி வரும் முதல் பெண்கள் கல்லூரியும், எறக்குறைய 5000 பெண்கள் உயர்கல்வி பயிலும், 750 பெண் ஆசிரியைகள் கல்வி புகட்டி வரும் ராணி மேரி (தன்னாட்சி) கல்லூரியில் முதல்முதலாக உரையாற்றிடும் வாய்ப்பு பெற்றதற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1950களில் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராகப் பயின்ற காலத்தில் இதே கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை ராஜேஸ்வரி அவர்கள் எழுதிய, ‘சூரியன்’ எனும் புத்தகத்தை பல்கலைக்கழக நூலகத்தில் படித்த நினைவு எனக்கு வருகிறது.

தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, அவர் காண விரும்பிய சமூக மாற்றம் என்பது இந்த கல்லூரியில் நடைபெற்றுள்ளது. பெண்களுக்கு கல்வி எதற்கு? என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையிலிருந்து பெண்களுக்கான தனிக் கல்லூரி, பெண் ஆசிரியப் பெருமக்கள், பெண் மாணவர்கள், முழுவதும் பெண்களாலேயே கல்வி நிர்வாகம் செய்திடக்கூடிய நிலைமைகள் பெரியார் காண விரும்பிய சமூக மாற்றமாகும். இங்கு கல்வி பயின்ற, பயிலும் மாணவியர் புத்தகங்களை மட்டும் படிப்பவர்கள் அல்ல; புத்துலகம் படைத்து வரும் ஏவுகணைகள் ஆவார்கள்.

உறுதிமொழி – அரசமைப்புச் சட்டம்

இந்த நாட்டில் ஊராட்சி மன்றங்களிலிருந்து தொடங்கி மாவட்ட பஞ்சாய்த்து நிலை; மாந்ல சட்டமன்றங்கள், நாடு முழுமைக்குமான நாடாளுமன்றம் ஆகியவற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அனைவரும் பதவி ஏற்றிடும் பொழுது ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதுதான்’ உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். அதன் பொருள் அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நடந்திடவும், அதன் நோக்கங்களை நிறைவேற்றிடும் வகையில் பணியாற்றிடவும் உறுதி எற்றுக் கொள்வதாகும்.

அந்த அரசமைப்புச் சட்டத்தில் யாருமே மாற்றம் செய்ய முடியாத சில அடிப்படைக் கட்டுமானப் பிரிவுகள் உள்ளன. அத்தகைய பிரிவுகளில் முதன்மையானதாக, சட்டத்தின் முகப்புரை (Preamble) உள்ளது. அந்த முகப்புரையில் உள்ளடக்கமே திராவிடக் கருத்தியலின் சாரமாக உள்ளது. ‘இந்திய நாட்டு மக்களாகிய நாம் (We the people of India) எனத் தொடங்கும் முகப்புரை, நடைமுறையில் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் களங்களில் நீதி வழங்குவதை உறுதி செய்வதுடன். சுதந்திரம்; சமத்துவம், சகோதரத்துவம் – இவற்றையும் மக்களிடையே உறுதி செய்திடுவதாக உள்ளது.

‘அனைவரும் சமம், அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதான் திராவிடக் கருத்தியலின் மய்யமாகும். இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்க வரைவுக் குழுவின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுவார்; “முகப்புரையில் உள்ள ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகிய மூன்றும் பலர் நினைப்பதைப் போல, பிரெஞ்சுப் புரட்சியின்பொழுது பரவலாக நிலைபெற்ற கருத்தியலிலிருந்து எடுக்கய்பபட்டது அல்ல; அவை அனைத்தும் நம் நாட்டின் முதல் பகுத்தறிவாளராக விளங்கிய புத்தரின் போதனைகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும்” என்பார்.
காலாவதியானதை கைவிட வேண்டும்.

தமிழ்நாடு

எழுத்தறிவுள்ளவர்களை ஆங்கிலத்தில் ‘literate’ என்றும், எழுத்தறிவில்லாதவர்களை ‘Illiterate’ எனக் கூறுவார்கள். ஆனால், அறிஞர் ஆல்வின் டோப்ஃளர் (Alvin Toffler) குறிப்பிடுவார். “The Illiterate of the 21st Century will not be those who cannot read and write but those who cannot learn, unlearn and relearn” (21ஆம் நூற்றாண்டில் எழுத்தறிவற்றவர்கள் என்பது படிக்க எழுதத் தெரியாத மக்களை மட்டும் குறிக்காது; கூடுதலாக கற்றுக்கொள்ள முடியாதவர்களையும், கற்றுக்கொண்ட சிலவற்றை கழற்றிவிட்டு அதற்குப் பின் மறுபடியும் கற்றுக் கொள்ளத் தெரியாதவர்களையும் சேர்த்துக் குறிக்கும்.)

அந்த வகையில் தனி மனிதருக்கு தவறு, சமுதாயத்திற்கு தீங்கிழைக்கும் எனக் கருதியவற்றை கடைப்பிடிக்கப்படுவதை புறந்தள்ள வேண்டும். மருந்து கடைக்குச் சென்று மருந்து வாங்குகிறோம். அதில் காலாவதி நாள் என்பதாக ஒரு குறிப்பு ஒட்டப்பட்டிருக்கும். காலாவதியான மருந்தை வாங்குவது எவ்வளவு முட்டாள்தனமானதோ, அதைப் போல காலாவதியான கருத்துகளை, பழக்க வழக்கங்களைக் கைவிடாததுமாகும். இதைத்தான் திராவிடக் கருத்தியல் வலியுறுத்துகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டமானது, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை உரிமையைப் போலவே அடிப்படைக் கடமைகளை வலியுறுத்துகிறது. கடமையை மறந்த, கடமையை மறுத்த நிலையில் உரிமை கோருவதில் நியாயம் இருக்காது; அது நிலைத்திடவும் முடியாது. சட்டப் பிரிவு 51A. குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைக் கடமையைக் குறிப்பிடுகிறது. அவற்றுள் துணை பிரிவு 51A(h) கூறுகிற அடிப்படைக் கடமையாவது:

It shall be the duty of every citizen of the country to develop scientific temper, humanism and spirit of inquiry and reform. (அறிவியல் மனப்பாங்கினை, மனித நேயத்தை வளர்ப்பதுவும், அதைப் போலவே கேள்வி கேட்டு தெளிவு பெறக்கூடிய பண்பினையும், சீர்திருத்தப் பண்பினையும் வளர்ப்பதுவும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்.)

இந்த அடிப்படைக் கடமையை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறுவதற்கு முன்பிருந்தே திராவிடக் கருத்தியலில் இது இடம் பெற்று மக்களிடையே பரப்பி வருகிறது திராவிட இயக்கம்; அதன் தத்துவத் தலைவராக இருக்கக் கூடியவர் தந்தை பெரியார்.

அனுமார் வழிபாட்டால்
அமெரிக்க செல்ல விசா கிடைக்குமா?

நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள், அவை செய்தியாக ஊடகங்களில் வெளிவருகின்ற நிலைமைகள் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும்அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பதாக இல்லை. இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு தமிழ் நாளிதழில் வெளிவந்த செய்தி இது.
அண்மையில் அமெரிக்க நாட்டில் டிரம்ப் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நிலையில் சட்ட விரோதமாக அமெரிக்க நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், சட்டரீதியாக (இரண்டு நாட்டு சட்டங்கள்) அமெரிக்கா சென்றிட ‘விசா’ வழங்குவது குறித்து எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தினை அமெரிக்க அரசு வலியுறுத்திடவில்லை.

இந்த நிலையில் கல்வி கற்றிடவும், முறைப்படி நம் நாட்டிள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியிட மாறுதலில் சென்றிடவும், அமெரிக்க நாட்டு நிறுவனத்தில் பணியாற்றிடும் உத்தரவு பெற்ற நிலையிலும் – சுற்றுலா சென்றுவர உள்ள ‘விசா’ பெறுவதிலும் இதுவரை எந்தப் புதிய அறிவிப்பும் வெளிவரவில்லை.

விசா வழங்குவது என்பது விசாவிற்கு விண்ணப்பிப்பவர் தகுதியும், விசா வழங்கிடும் நாட்டு விதிகளின்படியும் நடைபெறுவதாகும். தேவையில்லாமல், எந்தவித அறிவியல் சிந்தனையும் இல்லாமல், குஜராத்தில் உள்ள அனுமன் கோவில் ஒன்றில் ‘விசா’ கிடைப்பதற்கு வேண்டிக் கொள்ள பக்தர்கள் கூட்டம் பெருகிவருகிறது என்பதாக அந்த நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
இது அறிவியல் மனப்பாங்கினை மூட்டை கட்டி ஓரங்கட்டும் செயலன்றி வேறென்ன? செய்தி ஊடகங்கள் இதை பரப்பிடுவது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமைக்குப் புறம்பானவை அல்லவா? ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர் இதனைக் காணாமல், கவனத்தில்

கொள்ளாமல் இருப்பது நியாயமா?

இப்படிப்பட்ட செய்திகளை மாணவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாற்றம் வேண்டிட நினைப்பார்கள். அதனை எதிர்த்திடும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் நடைமுறையினை ஏற்றிடும் மனநிலையில்தான் இருப்பார்கள். மாணவர்கள் நினைத்தால் இதில் உள்ள, சமுதாயத்தில் புரையோடியுள்ள, அறிவியலுக்குப் புறம்பான நிலைகளை புறந்தள்ளிட, கருத்தியல் மாற்றத்தினை ஏற்படுத்திட முடியும். மாணவர்களிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது.

மனிதர்களிடையே நிலவிடும் பேதம் அகற்றப்பட வேண்டும். 1+4 ஜாதிப் படிநிலை முறையினை வலியுறுத்திடும் மனுஸ்மிருதி மறுக்கப்பட் வேண்டும். சமத்துவம் ஏற்பட எடுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மனுஸ்மிருதி. 1+4 ஜாதிப் படிநிலைக்கும் கீழான நிலையில் பெண்களை வைத்துள்ளது மனுஸ்மிருதி. இந்த இழிநிலையினை மாணவியர் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று இந்த பெரிய அரங்கத்தில் ஏறக்குறைய 300 மாணவியருக்கும் மேலே அமர்ந்து இந்த உரையினை கேட்பதற்கு அறிவியல் கருவியான ஒலிபெருக்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியினை ஒளிப்படம் எடுத்தும், நேரலையின் மூலம் பலரும் பார்த்திடும் வகையில் உள்ளதும், அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்டது. அதன் முழுப் பயனை பெற்றிட அடுத்த கட்ட வளர்சசிக்கு சென்றிட, அறிவியல் மனப்பாங்கினை ஒவ்வொரு வரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

திராவிடர் – ஆரியர் என்பது இரத்த பரிசோதனையால் வந்ததல்ல. பண்பாட்டு அடிப்படையில்தான் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. திராவிடம் என்பது சமத்துவத்தை, சுயமரியாதையை காப்பாற்றுவதை, பகுத்தறிவுச் சிந்தனையுடன் செயல்பட வைப்பது, மற்றது மனிதரை பேதப்படுத்திப் பார்ப்பது. திராவிடப் பண்பாடு தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டியது. அந்தப் பணியினை திராவிடர் இயக்கங்களது படையினர் நடத்திச் செல்லப்படும் பொழுது முதல் நிலையில் உள்ளவர்களை ‘sappers and miners’ என்பார்கள். அதாவது படையினர் செல்லுவதில் உள்ள தடங்கல்களை தகர்த்திடுபவர்கள் எரிப்பவர்கள் என்று பொருள். அதைப் போல சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு, சமத்துவத்திற்கு, சம வாய்ப்பு கிடைப்பதற்கு உள்ள தடங்கல்களைத் தகர்த்து எரியும். “sappers and miners” ஆக திராவிட இயக்கம் செயல்பட்டு வருகிறது.

பெண்கள் மணமாகி கணவரின் இல்லத்திற்குள் நுழையும்பொழுது ‘வலது காலை முதலில் எடுத்து வை’ என அழுத்தம் தரப்படும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.

அறிவியல் மனப்பாங்கு நிறைந்தவர்களாய் அறிவியல் வளர்ச்சியுடன், மூடநம்பிக்கைகளைக் களைந்து முன்னேற்றம் காண மாணவியர் முன்வர வேண்டும்.

– இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

கல்லூரி முதல்வரின் வரவேற்புரை வரவேற்புரையாற்றிய கல்லூரின் முதல்வர் பேராசிரியர் முனைவர் உமா மகேஸ்வரி அவர்கள் குறிப்பிட்டதாவது:

இயற்பியல் பேராசிரியரான எனக்கு திராவிடம் குறித்த பல புத்தகங்களைப் படித்ததின் மூலம் திராவிடக் கருத்தியலைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அறிஞர் அண்ணாவிடம் “திராவிடம் என்பது எங்கே இருக்கிறது?” என்ற கேள்வி கேட்கப்பட்ட பொழுது அண்ணா கூறினார்: ‘நாட்டின் தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கிறது’ என்று பளிச் சென்று பதில் சொன்னார். கேட்டவர்கள் வாயடைத்துப் போனார்கள். தற்போது திராவிடம் என்பது கருத்தியல் சார்ந்தது.

மனுஸ்மிருதியில் திராவிடர்கள்

மனுஸ்மிருதியின் 10ஆம் அத்தியாயத்தில் 48ஆம் சுலோகத்தில், ‘ஜாதி ஒழிந்தவர்கள்’ (ஜாதி முறையை கடைப்பிடிக்காதவர்கள்) திராவிடர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறப்பின் அடிப்படையில் பேதம் இல்லை; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனக் கூறும் திருக்குறள் என்பது மனுஸ்மிருதி கூறும் நிலைக்கு மாறானது. நேர்மறையானது.

திராவிடம் என்பது கட்சியின் அடிப்படையிலானது அல்ல; இனம், பண்பாடு சார்ந்தது. மனிதனுக்கு உயிரை விட மானம் பெரிது. ஜாதி மறுப்பில்தான் சமத்துவம் நிலவிட முடியும். சம உரிமையை பெற்றுத் தருவது திராவிடம். அதற்காகவே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பாடுபட்டனர். இன்றைக்கு ஆசிரியர் அவர்கள் பாடுபட்டு வருகிறார். மூடநம்பிக்கையும் ஒழிக்கப்பட வேண்டும். அதுகுறித்த மக்கள் விழிப்புப் பணியிலும் ஆசிரியர் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆசிரியர் பெருந்தகை அவர்களையும் மற்றும் கருத்தரங்கில் உரையாற்றிட உள்ள அறிஞர் பெருமக்களையும் வரவேற்று மகிழ்கிறேன்.
இவ்வாறு கல்லூரியின் முதல்வர் தமது உரையில் குறிப்பிட்டார்.

பேராசிரியர் பெ.ஜெகதீசன்

தமிழ்நாடு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பெ.ஜெகதீசன் தமது தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:
100 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப் பணி ஆற்றிவரும் ராணிமேரி பெண்கள் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள திராவிட தத்துவத்தின் உரைகல்லாக விளங்கிடும் ஆசிரியர் அவர்கள் உரையாற்றிட உள்ளார். தந்தை பெரியாருக்கு, ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள்தான். பெண்கள் மாநாட்டில்தான் அளிக்கப்பட்டது. உண்மையான வரலாறு, திராவிட கருத்தியலின் தனித்தன்மை குறித்து ஆய்வு நோக்கில் பணிகள் நடைபெற வேண்டும் என ஆசிரியர் அவர்கள் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தினை அமைத்து அதற்குப் புரவலராக விளங்கி வருகிறார். இந்த அனைத்து வித பொருத்தப்பாடுகளோடு இன்றைய நிகழ்ச்சி ராணி மேரிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

மதமும், அரசியலும் கலக்கப்படுகிறது. 1817ஆம் ஆண்டில்தான் ‘இந்தியா’ என்பது புழக்கத்திற்கு வருகிறது. Indian Ocean என்ற ஆங்கிலப் பெயர் ‘இந்தியப் பெருங்கடல்’ என்பதை விட, ‘இந்து மகா சமுத்திரம்’ என மதத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்படுகிறது. வரலாறு என்பது மதம் சார்ந்து குறிப்பாக வடபுலம் சார்ந்தே எழுதப்படுகிறது. வரலாற்று அறிஞர்களும் வடபுலத்தவர்களாகவே இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. தென் புலத்திற்கும் உரிய பங்கு உள்ளது என அமைக்கப்பட்டதுதான் தென்இந்திய வரலாற்றுப் பேரவை. அதில் முதன் முதல் தலைவராக இருந்தவர் பேராசிரியர் கே.கே.பிள்ளை அவர்கள். அவருக்கும் உரிய மரியாதை – தலைவர் என்ற நிலையில் அளிக்கப்படவில்லை. வரலாற்று உண்மைகள் மறக்கப்படுகின்றன. ‘சதி’ வழக்கத்தின் தடைக்குப் பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய், சமஸ்கிருதக் கல்விக்கு எதிராக இருந்தார். ஆங்கிலக் கல்விக்கு ஆதரவாக இருந்தார் என்பது வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட செய்தி. உண்மை வரலாறு எழுதப்பட வேண்டும் என்தே வரலாற்றியல் பெருமக்களின் விருப்பம் ஆகும்.

இவ்வாறு முனைவர் பெ.ஜெகதீசன் தமது உரையில் குறிப்பிட்டார்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி

தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அ.அருள்மொழி தமது உரையில் குறிப்பிட்டதாவது:
பெண்கள் அறிவியல் கருத்துகளை, உண்மைகளைக் கற்றுக் கொள்வதுடன் அறிவியல் மனப்பாங்கு உடையவர்களாக மாற வேண்டும். இத்தகைய முன்னேற்றப் போக்கு பெண்களுக்கு சமுதாயத்தில் உள்ள சமநிலை அற்ற நிலையினை போக்கிட உதவும். பெண்கள் அடிமை நிலையிலிருந்து விடுபட முடியும்.

பழைமைவாத சமுதாயத்தில் திருமணமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணை தள்ளி வைத்துவிட்டு இரண்டாம் தாரமாக பெண்ணை மணந்து கொள்ளும் வழக்கம் நிலவியது. தற்பொழுதும் ஆண் குழந்தை காரணமாக, பெண்களை திட்டித் தீர்த்திடும் வழக்கமும் உள்ளது. அறிவியல் அடிப்படையில் குழந்தை பிறப்பதற்கு ஆண், பெண் இருவரின் சேர்க்கை அவசியம். மரபணு அடிப்படையில் ஆண்களின் உடலில் ‘XY’ எனும் இரட்டை குரோமோசோமும், பெண்களில் உடலில் ‘XX’ எனும் குரோமோசோமும் உள்ளது.
இனப்பெருக்க உயிர் அணுக்களில் ஆணுக்கு ‘X’ என்றும், ‘Y’ என்றும் இரு நிலையும், பெண்களின் இனப்பெருக்க உயிர் அணுக்களில் ‘X’ என்ற ஒரே தரப்பட்ட நிலையும் உள்ளது. இந்த இரண்டு வகை இனப்பெருக்கம் ஆண் பெண் சேர்க்கையில் வரும்பொழுது அதன் விளைவு ‘XY’ என்ற ஆண் குழந்தை பிறப்பதற்கும், ‘XX’ என்ற பெண் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு. ஆண் குழந்தை பிறப்பதற்கு ‘Y’ என்ற இனப்பெருக்க உயிர் அணுவை தரவல்லவர்கள் ஆண்கள் மட்டுமே, பெண்கள் அல்ல. இந்த அறிவியல் உண்மையை அறிந்து கொண்டால், ஆண் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு பெண்கள் காரணமல்ல; ஆண்கள்தான் என்ற உண்மை நிலை தெரியவரும். எனவே இவை போன்ற அறிவியல் செய்திகளை அறிந்து அறிவியல் மனப்பாங்குடன் வாழ்ந்திட மாணவியர் முன்வர வேண்டும்.
இவ்வாறு வழக்குரைஞர் அ.அருள்மொழி தமது உரையில் குறிப்பிட்டார்.

பேராசிரியர் ராமு.மணிவண்ணன்

தமிழ்நாடு

அரசியல் அறிவியல் துறை மேனாள் தலைவர் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசு மற்றும் நிறுவனப் பணிகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க ஆணை பிறப்பித்தார். அதற்காகவே பிரதமர் பதவியை இழந்தார். பதவியை இழந்தவுடன் வி.பி.சிங் அவர்களிடம் 343 நாட்கள் மட்டும் பிரதமராக இருந்துள்ளீர்கள் என்ற விமர்சனம் வைக்கப்பட்ட பொழுது எத்தனை நாள்கள் பதவியில் இருந்தோம் என்பதை விட என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் முதன்முறையாக ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்த வகையில் அவர்களையும் நாட்டை ஆட்சி செய்திடும் அதிகாரத்தில் பங்கேற்க வைத்து, நாட்டின் எதிர்கால மக்கள் ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தேன்’ என பதிலுரைத்தார். இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறத்திடும் சமூக நீதியைக் காத்திட்ட காவலராக சுதந்திரம் பெற்ற பின்னர் முக்கியப் பணியினை முடித்தார் அந்தப் பெருமகனார்.
இவ்வாறு பேராசிரியர் ராமு மணிவண்ணன் தமதுரையில் குறிப்பிட்டார்.

பேராசிரியர் அ.கருணானந்தன்

தமிழ்நாடு

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் அ.கருணானந்தன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக் காலத்தில் கல்வி என்பது ஒரு வகுப்பினரான உயர் ஜாதியினருக்கே என்ற நிலையினை மாற்றியது மெக்காலே பரிந்துரையில் நடைமுறைக்கு வந்த அனைவருக்குமான கல்வி முறையே.

தமிழ்நாடு

கடந்த காலத்திற்கு புனிதம் கற்பித்ததால் கல்வி முறை அனைவருக்கும் ஆனதாக இல்லை. இதிலிருந்து மீட்சி பெற, பழைமைச் சிந்தனையினை போக்கிட திராவிடக் கருத்தியல் பெருக வேண்டும். ஆங்கில ஆட்சியில் முன்னேற்றம் என்பது Proclamation என்ற நிலையில் இருந்தது. இன்று விடுதலை பெற்ற நாட்டில் Legislation எனும் சட்டமியற்றும் நிலை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு உண்மையில் முன்னேற்றம், சமத்துவ நிலை ஏற்படும் வகையில் தங்களது பணியினை தொடர்ந்திட வேண்டும். இவ்வாறு பேராசிரியர் அ.கருணானந்தன் உரையாற்றும்பொழுது குறிப்பிட்டார்.

கலந்துகொண்டவர்கள்

தேசியக் கருத்தரங்கின் ஏற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தவர்கள். ராணிமேரிக் கல்லூரி ஆசிரியப் பெருமக்கள் முனைவர் மேகலா, முனைவர் சுஜா, சீதாலட்சுமி, முனைவர் கற்பகம், முனைவர் தமிழரசி, பார்வதி மற்றும் வரலாற்றுத் துறை, ஆங்கிலம், பொருளாதாரம், தமிழ்த் துறை மாணவியர்கள்.

தமிழ்நாடு

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் முனைவர் திலகவதி, பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னரெசு பெரியார், பேராசிரியர் டி.இராமசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு

நிகழ்வு இறுதிவரை மாணவியர் கட்டுப்பாடு காத்து கருத்தரங்க நடைமுறைகளைக் கேட்டு குறிப்பெடுத்தது பாராட்டுதலுக்குரியதாக இருந்தது.

தொகுப்பு: வீ.குமரேசன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *