கருப்பினப் பெண்ணின் குமுறல்!

Viduthalai
3 Min Read

ஜெய்ப்பூரில் நடந்த பன்னாட்டு இலக்கியத் திருவிழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற கருப்பினப் பெண் எழுத்தாளர் இந்தியாவில் நடக்கும் சமூக அநீதிகள் குறித்து எழுத்துகளில் அதிகம் பேசப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பேசும் போது,
‘‘பல ஆயிரம் தலை முறையினரின் உழைப்பைச் சுரண்டி, வேலைவாய்ப்புகளைப் பறித்து, கல்வியை மறுத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு அநீதியை இழைத்துவிட்டு, ஒரு தலைமுறைக்கு வேலையையும், கல்வியையும் கொடுத்து விட்டு, அதற்கும் இதற்கும் சரியாகப் போய்விட்டது – ‘இனி சலுகைகள் தேவையில்லை, அனைவருக்கும் சமமான போட்டி வேண்டும், இட ஒதுக்கீடு தேவையில்லை’ என்று பேசுவதுதான் உலகின் ஆகப் பெரும் சமூக அநீதி ஆகும்’’ என்று ஜெய்ப்பூரில் நடந்த பன்னாட்டு இலக்கியத் திருவிழாவில் புகழ்பெற்ற அமெரிக்க கருப்பின எழுத்தாளர் ஜினோ ஆலூ தனது சிறப்புரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவில் சமூகநீதிக்கு எதிராக திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறும் சமூகஅநீதியை ஒரு கருப்பினப் பெண் எழுத்தாளர் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக் கிறார் என்பதைவிட குமுறியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.
இன்னும் எத்தனைக் காலத்திற்கு இடஒதுக்கீடு என்று கேட்கும் அதிமே(ல்)தாவிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
இந்தக் கேள்வியில் நியாயமிருப்பதுபோல யாரேனும் கருதுவார்களேயானால் அவர்களைவிட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
எத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக, பிறப்பின் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களும், உரிமை மறுக்கப்பட்டவர்களும் இருந்து வந்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டால், இந்தக் கேள்வி என்பது அசல் ஏமாற்றும் பஞ்ச தந்திரம் என்பது சற்றெனவே புலப்பட்டு விடும்.
ஏதோ இந்தியாவில் மட்டும்தான் இந்த இடஒதுக்கீடு ஏற்பாடு இருப்பதுபோல பம்மாத்து செய்கின்றனர்.
உண்மை என்னவென்றால் உலகின் பல நாடுகளிலும் ஆதிக்கக் கூட்டமும், உரிமை மறுக்கப்பட்ட அடிமைப்பட்ட மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வளர்ந்த நாடாக வெளி உலகுக்குக் காட்டப்படும் அமெரிக்காவிலும் இடஒதுக்கீடு உண்டு – அதுவும் தனியார்த் துறைகளிலும் கூட உண்டு.

11 பேர்களுக்கு மேல் பணியாற்றும் எந்த நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் கறுப்பர்கள் எத்தனைப் பேர்? அவர்களில் பெண்கள் எத்தனைப் பேர்? என்பதை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். எந்தப் பிரிவினராவது தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் வழக்குத் தொடரலாம். அமெரிக்காவில் நிலவும் இந்த சட்டத்திற்குப் பெயர் Affirmative Action என்பதாகும்.
இங்கிலாந்தில் இருக்கும் இத்தகைய சட்டத்திற்குப் பெயர் Equality Act என்பதாகும். கனடாவில் Employment Equity Act என்றும், சீனாவில் Affirmative Minority Nationality Act என்றும் அழைக்கப்படுகிறது.
உலகம் சுற்றும் உயர் ஜாதி படித்த கூட்டத்திற்கு இந்த உண்மைகள் எல்லாம் புரியாதா – தெரியாதா?
இந்தியா குடியரசாகி அரசமைப்புச் சட்டம் செயல்படத் தொடங்கி 50 ஆண்டுகள் வரைகூட மக்கள் தொகையில் பெரும்பாலரான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 340ஆவது பிரிவின்படி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஆணையம் அமைக்கப்பட்டு, அது கூறும்பரிந்துரைகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலப் பணிகளைச் செய்ய வேண்டும்.
ஆனால் இந்தியாவில் என்ன நடந்தது?
காகாகலேல்கர் தலைமையிலான ஆணையம் 1953 ஜனவரி 29ஆம் தேதி அமைக்கப்பட்டது. 1955ஆம் ஆண்டு மார்ச்சு 30ஆம் தேதி ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும், இதன் பரிந்துரைகள் என்ன, அவற்றில் செயல்பாட்டுக்கு வந்தது எவை என்று யாருக்காவது தெரியுமா?

பி.பி. மண்டல் அவர்களின் தலைமையிலான குழு 1979 ஜனவரியில் அமைக்கப்பட்டது.
நாடாளுமன்ற அவையில் அறிக்கையின் நகலை வைத்து விவாதிக்கவே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது.
வாராது வந்த மாமணியாம் வி.பி. சிங் பிரதமராக வந்த நிலையில்தான் 1990 ஆகஸ்டு 7இல் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக அவர் பதவியைக் கவிழ்த்த கூட்டம்தான் இன்றைக்கு ஒன்றிய ஆட்சிப் பீடத்தில் கொலு வீற்றிருக்கிறது.
வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட தேயன்றி, கல்வியில் இடஒதுக்கீடு அதற்கு 18 ஆண்டு களுக்குப் பிறகே அளிக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்குரிய சட்டப்படியான விழுக்காட்டில் இடங்கள் அளிிக்கப்படுவ தில்லை.
இந்த நிலையில் இன்னும் எத்தனை ஆண்டுக்கு இட ஒதுக்கீடு என்று கேட்பதில் உள்ள ஆதிக்கக் குரலைத்தான் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பன்னாட்டு இலக்கியத் திருவிழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினப் பெண் எழுத்தாளர் ஜினோ ஆலு எதிரொலித்தார்.
அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் குமுறல், இந்தியா வில் உள்ள உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக் களுக்கு உறைக்கவில்லையா? கிளர்ந்து எழ வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவில்லையா? சிந்திப்பீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *