சென்னை,பிப்.12- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
மகளிர் சுய உதவிக்குழு
முத்தமிழறிஞர் கலைஞர் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வைத்தார்.
மகளிரின் முன்னேற்றத்திற்காக, துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தியதின் காரணமாக பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடித் திட்டமாக விளங்குகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள். மதி அங்காடி, மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம் மற்றும் இயற்கைச் சந்தைகள் என பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக சுய உதவிக் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
மதி அனுபவ அங்காடி
இதன் தொடர்ச்சியாக, “மதி அனுபவ அங்காடி” (MATHI Experience Store) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் 18.11.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களின் தயாரிப்புப் பொருட்களை நியாயமான முறையில் விற்பனை செய்து, வருமானம் ஈட்டுவது மதி அனுபவ அங்காடியின் தனிச்சிறப்பு. இந்த மதி அனுபவ அங்காடியில் தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் கொள்முதல் செய்யப் பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதி அனுபவ அங்காடிக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பினைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மதி அனுபவ அங்காடியினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
இந்த மதி அனுபவ அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிரால் உற்பத்தி செய்யப்படும் “மதி” என்ற வணிக முத்திரையுடன் கைவினைப் பொருட்கள், கைத்தறி துணிகள், தேன். நாட்டுச்சர்க்கரை. சிறுதானிய உணவுப் பொருட்கள். அலங்காரப் பொருட்கள், ஆபரணங்கள், சிலைகள், உணவுப் பொருட்கள், சிறுதானியங்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் உள்பட அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.