பொன்விழா பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை!
வி.சி.வில்வம்
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் 50 ஆவது நிகழ்வு வடசென்னை மாவட்டம், கொளத்தூரில் 9.2.2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கழக மாவட்டங்கள்!
திராவிடர் கழகத்தில் கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், வடசென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், ஆத்தூர், மேட்டூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருச்சி, இலால்குடி, துறையூர், கரூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நீலமலை, திருப்பூர், தாராபுரம், ஈரோடு, கோபி செட்டிப்பாளையம், நாமக்கல், சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம், மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர், இராஜபாளையம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 69 கழக மாவட்டங்கள் உள்ளன!
4 ஆயிரம் மாணவர்கள்!
ரூ.4 இலட்சம் மதிப்புள்ள நூல்கள்!!
கடந்த ஈரோடுப் பொதுக்குழுவில் (13.05.2023) தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பயன்படும் வகையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டும் எனத் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேட்டுக் கொண்டார்கள்! அதனையொட்டி பயிற்சி வகுப்புகள் ‘வரிசை’ எடுக்கத் தொடங்கின. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட 69 இல் 50 நிறைவு பெற்று, பொன்விழாச் சிறப்பைப் பெற்றது. அதுவும் ஒன்றரை ஆண்டுகளில் தொடர்ந்த பணிகள், அடர்ந்த நிகழ்வுகள்! இடையில் பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்காக சில மாதங்கள் நடைபெறவில்லை. தமிழ்நாடு கடந்து மும்பைத் தோழர்களும் இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது குறிப்பிடத்தக்கது!
சற்றொப்ப 4 ஆயிரம் மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்று, 4 இலட்சம் மதிப்புள்ள பெரியார் நூல்களை வாங்கி இருப்பது வரலாற்றுச் சாதனை! ‘‘எதையும் தொடங்குவதில் அல்ல; தொடர்வதிலேயே வெற்றி இருக்கிறது’’, என்பார்கள். அந்த வகையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பெருமிதத்தைப் பெற்றுள்ளது!
வடசென்னை மாவட்டத் தோழர்கள்!
50 ஆவது பொன்விழா பயிற்சிப் பட்டறையை எங்கு நடத்தலாம், யார் அந்த வாய்ப்பைப் பெறப் போகிறார்கள் என்கிறபோது, வடசென்னை மாவட்டம் அதைத் தக்க வைத்துக் கொண்டது. மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் நா.பார்த்திபன், தோழர் த.மரகதமணி உள்ளிட்ட தோழர்கள் உடனடியாக ஒன்றி ணைந்து, ஆக வேண்டியதை அழகுற திட்டமிட்டார்கள்.
அந்த வகையில் 09.02.2025 அன்று, கொளத்தூர் பகுதியில் நடத்துவது என நாள் குறிக்கப்பட்டது. சுற்றிலும் சுவரொட்டிகள், வீதியெங்கும் விளம்பரப் பதாகைகள், காணும் இடங்களில் கழகக் கொடிகள் என அதையும் பிரச்சாரமாய் பிரமாண்டம் செய்திருந்தனர். அதில் ஒரு சுவரொட்டியில், ‘‘பெரியார் யார்? அறிந்து கொள்ள வாருங்கள்!’’ எனப் பளிச்சென்று பெரிய எழுத்துகளில் அழைத்திருந்தனர். மாணவர்களோ குறித்த நேரத்தில் குவியத் தொடங்கினர். எண்பது விழுக்காட்டினர் இருபது வயது உடையோர்! அதனால் எழுச்சிமிகு இனவுணர்வுப் பீறிட்டு எழுந்தது. நெகிழ்ச்சியாய் தொடக்க நிகழ்ச்சியும் அமைந்தது.
தலைப்பும், வகுப்பும்!
முதல் வகுப்பைப் ‘‘பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புகள்’’ எனும் தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ‘‘சமுகநீதி வரலாறு’’ என்கிற தலைப்பில் கோ.கருணாநிதி, ‘‘திராவிடரா? தமிழரா’’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்’’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், ‘‘இந்திய அரசியல் சட்டமும், திராவிடர் கழகமும்’’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், ‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்’’ என்கிற தலைப்பில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ‘‘தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி’’ எனும் தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
நிகழ்வின் நிறைவில், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பங்கேற்ற மாணவர்களைப் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். அதேபோல தமிழ்நாடு முழுவதும் 50 பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளைச் சிறப்பாக நடத்திய, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டது.
மதவெறி மாய்ப்போம்!
மனிதநேயம் காப்போம்!!
இதில் ‘‘மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்’’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
குறுகிய காலத்தில் அரும்பாடுபட்டு, தோழர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்கள். அரங்கத்திற்கு வந்ததும் அருட்தந்தை பாதிரியார் அவர்கள் என்னை வரவேற்றார். ‘‘மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்’’ எனும் தலைப்பிற்கு, இந்த ஒரு செயலே போதுமானது. நாமோ மதமற்றவர்கள், எந்த மதத்திலும் நமக்கு ஈடுபாடு கிடையாது, நமது வாழ்க்கையே பகுத்தறிவு நெறி கொண்டது. அதேநேரம் மத ஈடுபாடு கொண்டவர்கள் இங்கு நிறைய உள்ளனர். அவர்கள் மீது நமக்கு வெறுப்பு கிடையாது. அவர்களின் கருத்துகளை நாம் மாற்ற நினைக்கிறோம். ஆனால் ஒருபோதும் அவர்களை நாம் அழிக்க நினைப்பதில்லை. ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்குவதே திராவிட இயக்கத்தின் இலக்கு!
பயிற்சிப் பட்டறையின் நோக்கம்!
பழைமைகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள், இழிவான ஜாதி முறை போன்றவற்றை மாற்றுவதே நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் பணியாகும். ‘‘திருந்து அல்லது திருத்து’’ எனப் பெரியார் கூறுவார். மின்சாரத்தைத் தொடக்கூடாது என்போம். காரணம், அது உயிருக்கு ஆபத்து என்பதால்! ஆனால், இங்கே மனிதனைத் தொடக்கூடாது என்றார்கள். எனவே, இந்தத் தவறுகளை நாம் சுட்டிக் காட்டுகிறோம். காரணம் அனைவரும் சமம், அனைவரும் சகோதரர்கள் என்பதை நிலைநாட்ட!
இங்கே 72 மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இதில் ஆண்கள் 56, பெண்கள் 16. மக்கள் தொகையில் சரிபகுதியாக இருக்கும் மகளிர் இன்னும் அதிகமாகப் பங்கேற்க வேண்டும். மாணவிகள் படிப்பிலும், திறமையிலும் சிறப்பாக இருக்கிறார்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்குத் ‘திராவிட மாடல்’ அரசு நிதி உதவி செய்கிறது. முன் காலத்தில் பெண்கள் என்றாலே, எதிர்மறைக் கருத்துகள் இருக்கும். ஆனால், இன்றைக்குப் பெண்கள் படித்தால் குடும்பமே முன்னேறும் என்கிற சிந்தனை வந்துவிட்டது. இங்கே உள்ள 72 மாணவர்களில் 55 பேர் பட்டதாரிகள். படிப்பறிவோடு சேர்த்து, பகுத்தறிவும் முக்கியம் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
மனிதர்கள் மீது வெறுப்புக் கூடாது!
பிற மதங்களை விட ஹிந்து மதத்தில்தான், மனித உரிமை பறிப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் 87 விழுக்காட்டினர் ஹிந்து மதம் சார்ந்து இருக்கின்றனர். ஆனால், அவர்கள் ஒன்றாகி விடக்கூடாது என நினைக்கிறார்கள். சமூகம் சுமூகமாக ஆகிவிடக் கூடாது என்பதும் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கோயில்களுக்கு அருகில் ஏராளமான திராவிடர் கழகக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கோயிலில் இருப்பவர்களை ஒருபோதும் நாங்கள் மாற்றாகவோ, வெறுப்பாகவோ நினைத்ததில்லை. மாறாக மனிதர்களாகவே மதிப்போம்!
கோயில் தொடர்பான விழாக்களில் எவ்வளவோ விபத்துகளும், உயிரிழப்புகளும் நேர்கின்றன. அதை நினைத்து நாங்கள் கவலை கொள்வோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே சமூகத்தில் வாழ்கிறோம். அவர்களும் சிறப்பாக, பாதுகாப்பாக வாழ வேண்டும். அதுதான் ஆறாவது அறிவான பகுத்தறிவின் சிறப்பு. மற்ற மதங்கள் குறித்து அதிகம் பேசுவதில்லையே என சிலர் கேட்கிறார்கள். நம்மை யார் இழிவு செய்கிறார்களோ, அதைத்தான் முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். நாம் கடந்து போகும் பாதையில் தடைகள் இருந்தால், அதைத்தான் சரிசெய்ய வேண்டும். உலகத்திலேயே மனிதனைத் ‘தொட்டால் தீட்டு’ என்று சொன்ன மதம் ஹிந்து மதம்தானே?
ஹிந்துக்களுக்கு எதிரி ஹிந்து மதமே!
பகுத்தறிவுப் பூர்வமான நூல்கள் 50 விழுக்காடு விலையில் இங்கே கிடைக்கிறது. மாணவர்கள் அதை வாங்கிப் படிக்க வேண்டும். பொதுவாக எல்லோரும் படிக்க வேண்டும் என்று நாம் கூறுவோம். ஆனால் ஹிந்து மதம், ஹிந்துக்களையே படிக்காதே என்கிறது; அதுமட்டுமின்றி அடிமையாக இரு என்கிறது. இந்த மதத்தைத்தான் இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். ‘ஹிந்து’ என்பது ஆரிய மதம். அதற்கும், தமிழர்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பதுதான் நமது கொள்கை.
அம்பேத்கர் சொல்வார், ‘‘உலகில் உள்ள மதங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டேன். ஆனால், ஹிந்து மதம் மட்டும்தான், படித்தால் நாக்கை அறுப்போம், கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம்’’, எனச் சொல்கிறது என்பார். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்குப் போனால் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறார்கள். சரி, நாங்களும் சமஸ்கிருதத்தில் மந்திரம் கற்றுக் கொள்கிறோம் என்றால், அதை ஏற்பதில்லை. திராவிடர் கழகக் கொள்கையை ஏற்று நீங்கள் வந்தால், நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம். அதேபோல சமஸ்கிருத மந்திரம் கற்று, கோயிலுக்குப் பூஜை செய்ய போனால் அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். மாறாக மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் செய்வது பிழைப்புவாதம் என்பதை அறிய வேண்டும்.
மனிதர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி!
தமிழர்கள் மீது புகுத்தப்பட்ட மதம்தான் ஹிந்து மதம். அதை ஆரிய மதம் என்றே அழைக்க வேண்டும். ஹிந்து என்கிற சொல் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. ‘‘எங்கள் மொழி சமஸ்கிருதம், நாங்கள் பின்பற்றுவது வேதங்கள், இவற்றையே அனைவரும் பின்பற்ற வேண்டும்’’ என மதவெறியை உண்டாக்குகிறார்கள். ஏற்காதவர்களை அழிக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
‘‘மாட்டுக்கறியைச் சாப்பிடாதே’’ என்கிறார்கள். சவர்க்கார் என்கிற பார்ப்பனர் கூட, பசு மாட்டை வழிபடுவதை எதிர்த்துப் பேசியிருக்கிறார். மாட்டுக்கறியை வைத்து மனிதர்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். அதேபோல மாட்டுக்கறி சாப்பிடுபவர்களைக் கீழ் ஜாதி என்றும் குறிப்பிடுகிறார்கள். ‘‘குப்பையில் இருக்கும் மலம், எச்சில் உள்ளிட்ட அனைத்தையும் கோழி சாப்பிடுகிறது. அதை நீங்கள் உண்கிறீர்கள். புண்ணாக்கு, தவிடு சாப்பிடுகிற மாட்டை சாப்பிடக் கூடாதா?’’, எனப் பெரியார் கேட்டார். ஆட்டுக்கறி கிலோ 1000 ரூபாய், மாட்டுக்கறி ரூ 350. குறைந்த விலையில், சத்தான கறி கிடைப்பதை இவர்கள் ஏன் தடுக்கிறார்கள்? ஆக மனிதனைக் காப்பாற்றுவது இவர்களுக்கு முக்கியம் இல்லை; மாட்டைக் காப்பாற்றுவதே குறிக்கோள்!
பாகன் – யானை உறவு!
மதத்தை மய்யமாக வைத்தே இவர்கள் செயல்படு கிறார்கள். அதனால்தான் ‘‘மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்’’ எனக் கூறுகிறோம். யானைக்குப் பாகன்தான் உணவு கொடுக்கிறார், அன்பாகப் பார்த்துக் கொள்கிறார், பல ஆண்டுகள் கூடவே வாழ்கிறார். ஆனால் அந்த யானைக்கு மதம் பிடித்தால் அடுத்த சிறிது நேரத்தில் பாகனையே கொன்றுவிடுகிறது. ஆக விலங்குகளுக்கே மதம் பிடிக்கக் கூடாது எனும் போது, மனிதர்களுக்கு மதம் பிடிக்கலாமா?
நம்பிக்கைத் தரும் இயக்கம்!
இவற்றையெல்லாம் எதிர்த்துத்தான் திராவிடர் கழகம் மக்கள் இயக்கமாகச் செயல்பட்டு வருகிறது. அர்த்தமுள்ள ஹிந்து மதம் என்பார்கள். ஆனால், அனைவருக்கும் கல்வி கொடுக்க மாட்டார்கள், சமமாக நடத்த மாட்டார்கள், ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதை ஏற்க மாட்டார்கள். அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் மனுநீதியை வைக்கப் பார்ப்பார்கள். எனவே, ஹிந்துத்துவா என்கிற பாசிச கருத்தை வேரோடு அப்புறப்படுத்த வேண்டும். அது நமக்குரியது அல்ல; நமது தத்துவமும் அல்ல. அது நடைமுறைக்கு வந்தால் பேராபத்து!
எனவே மாணவச் செல்வங்களே! உங்களால் எதையும் உருவாக்க முடியும். ‘‘நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாது நம்மால் மட்டுமே முடியும்.’’ இது ஒரு தன்னம்பிக்கைத் தரும் இயக்கம். நிறைய படியுங்கள்! சிந்தியுங்கள்! உங்களுக்குச் சரியெனப்படுவதைத் தைரியமாகச் செய்யுங்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்’’, மேற்கண்டவாறு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை நிகழ்த்தினார்.