‘சமக்ர சிக் ஷா அபியான்’ என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளித்துள்ளது. மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகக் கூறிவரும் நிலையில், பிஎம்சிறீ கல்வித் திட்டத்தில் இந்த விதியை ஏற்று இணைந்தால் மட்டுமே நிதி என்பதில் ஒன்றிய அரசு கடுமையாக இருக்கிறது.
சமக்ர சிக்ஷா அபியான் (SSA) என்ற பெயரில் ஒன்றிய அரசு நாடு முழுவதும் கல்வித்தரத்தை உயர்த்துவது என்றும், கல்விக்குத் தேவையான வசதிகள் வழங்குவதற்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறதாம். பள்ளிக் கல்வியில் சம வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உயர்ந்த கல்வி வழங்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாம். குறிப்பிட்டு சொல்வது என்றால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கென உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டமாம்.
‘சமக்ர சிக் ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய-மாநில அரசுகள் 60:40 சதவீதம் அடிப்படையில் நிதியை ஒதுக்கி பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, மாணவர்களுக்குக் கல்வி உதவி, கல்வியில் சமத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுமாம். இதில் ஒன்றிய அரசு 60 சதவீதம் நிதியினை ஒவ்வொரு ஆண்டும் வழங்கும். மொத்தம் நான்கு தவணையாக நிதியை விடுவிக்கும். மீதி உள்ள 40 சதவீதம் நிதியை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
‘சமக்ர சிக் ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு 2016-2017-ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரத்து 656 கோடி வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசு 60 சதவீதம் நிதியாக ரூ.1,593 கோடியையும், மாநில அரசு 40 சதவீதம் நிதியாக ரூ.1,063 கோடியையும் ஒதுக்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதி கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கப் பட்டு வந்தது. அந்த வரிசையில், 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியாக ரூ.3 ஆயிரத்து 586 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் ஒன்றிய அரசு தன் பங்காக ரூ.2 ஆயிரத்து 152 கோடியும், மாநில அரசு ரூ.1,434 கோடியையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருந்து. ஒன்றிய அரசு தன்னுடைய பங்கு நிதியை 4 தவணைகளாக பிரித்து வழங் குவது நடைமுறையாகும். ஆனால் இந்த முறை வழங்கவில்லை.
இந்த ஆண்டுக்கான முதல் தவணைத் தொகை வழங்குவதற்கு முன்னதாக ‘பி.எம்.சிறீ கல்வித் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இணைய ஒன்றிய அரசு, மாநில அரசிடம் வலியுறுத்தியது. ஆனால் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை ஏற்க ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி உள்ள பி.எம்.சிறீ கல்வித்திட்டத்தை ஏற்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது வரும். அதனால் பி.எம்.சிறீ கல்வித்திட்ட ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட மறுத்தது – கொள்கைப்படி தமிழ்நாட்டின்சட்டப்படி! இதனால் ஒன்றிய அரசு தன் பங்கு நிதியான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தராமல் நிறுத்தியது.
பி.எம்.சிறீ கல்வித் திட்டத்தில் இணைய ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிதியைப் பெறலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பல முறை ஒன்றிய அரசை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்ற போது, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் நிதியை வழங்கிட வலியுறுத்தி இருந்தார். ஆனாலும் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கவே இல்லை. இது ஏற்புடையது தானா? ‘தமிழ்நாட்டுக்குரிய நிதி’ மற்ற மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுமாம்.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை என்பது சட்டப்படியானதாகும்.
இதனை நிராகரித்து ஒன்றிய அரசு, தாங்கள் கூறும் மும்மொழித் திட்டத்தை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவது எத்தகைய எதேச்சதிகாரம்? ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.