சென்னை,பிப்.8- பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.213 கோடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை வரும் பிப்.28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவர்கள் நியமனம்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவ மனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சிஎம்டிஏ நிதியில் இருந்து ரூ.84.17 கோடி நிதியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று வழங்கினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவமனையில் 860 படுக்கை வசதி உள்ளது.
இம்மருத்துவமனைக்கு கூடுதலாக 102 மருத்துவர்கள், 236 செவிலியர்கள், 79 மருத்துவம் சாரா பணியாளர்கள், 20 அமைச்சு பணியாளர்கள், 126 பன்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் 240 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 803 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்து காய சிகிச்சைப் பிரிவு, தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்தவங்கி போன்ற சேவைகள் வழங்கும் வகையில், உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூ.71.81 கோடியில் 3 தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
அதன் தொடர்ச்சியாக மேலும் பல உயர்சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பிரத்யேக இருதயவியல் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 6 தளங்களாக விரிவாக்கம் செய்யப் பட்டு ரூ.54.82 கோடியில் கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி முதலமைச்சரால் ஆணையிடப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் 28ஆம் தேதி ரூ.213 கோடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவ மனையின் புதிய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்து அவர் கூறும்போது, “அரசு மருத்துவ மனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மய்யங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது” என்றார்.