சென்னை, பிப்.7 கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மறைந்த மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசி வன்முறையை தூண்டியதாக சீமான் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றச்சாட்டுக் களுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட நபர்களை தூண்டும் விதமாக சீமான் கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், இதுபோல பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்குமாறு சீமான் தரப்பு வழக்குரைஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும் என்றும் தொடர்ந்து 4 முறை நீதிமன்ற படி ஏறினால் தான் சீமானுக்கு நிதானம் வரும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சீமானை விடுவிக்க மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது