ஆ.திராவிடமணியே என்னை ஆளாக்கிய ஆசிரியர்!

Viduthalai
16 Min Read

அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழுக்கு நிதி அளித்த மேடைதான் என் முதல் மேடைப் பேச்சு!
அந்த மேடையில், தந்தை பெரியாருக்குமுன் எனது முதல் பேச்சு – அறிஞர் அண்ணா பாராட்டு!
1943 ஆம் ஆண்டுதான் தந்தை பெரியாரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு!
அதனைத் தொடர்ந்து சிறுவன் வீரமணியாக வெளியூர்களில் பேசத் தொடங்கினேன்!
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் அன்புடன் ஆனந்தி –
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் நேர்காணல்!

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, 7.12.2024 இல் பேட்டி கண்ட
திருமதி ‘அன்புடன் ஆனந்தி’ அவர்களைப்பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்:
திருநெல்வேலி தமிழர். 24 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் வாழ்கின்றார். தனியார் நிறுவனத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றுகின்றார். தமிழ் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். பல்வேறு தமிழ்ப் பணிகளை எழுத்து, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, புத்தகங்கள், கவிதைகள், குழந்தை இலக்கிய பணிகள் என்று 15 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றிப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். திருச்சி நாகம்மையார் இல்ல குழந்தைகள் கல்வியில் மிகவும் அக்கறை காட்டி வருபவர்.

சென்னை, பிப்.7 ஆ.திராவிடமணியே என்னை ஆளாக்கிய ஆசிரியர் என்றும், அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழுக்கு நிதி அளித்த மேடைதான் என் முதல் மேடைப் பேச்சு என்றும், 1943 ஆம் ஆண்டுதான் தந்தை பெரியாரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில்
கழகத் தலைவரிடம் நேர்காணல்!
அன்புடன் ஆனந்தி: அனைவருக்கும் அன்பின் வணக்கம்.
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
அன்னைத் தமிழுக்கு முதல் வணக்கத்தைச் சொல்லி, பெரியார் பன்னாட்டமைப்பு, அமெ ரிக்கா நடத்தக்கூடிய இந்த சிறப்பான இணைய வழி நேர்காணல் நிகழ்ச்சிக்கு – எனக்கு இந்த வாய்ப்பினைக் கொடுத்த பெருமதிப்பிற்குரிய டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும், நண்பர் இளமாறன் அவர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம்.
92 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணக்கூடிய வீரமணி அய்யா அவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்திருந்தாலும், நேர்காணல் செய்திருந்தாலும், இன்றைக்கு அய்யாவை நேர்காணல் செய்யப் போகிறோம் என்றதும் எனக்குள் ஒரு பதற்றம், ஓர் ஆர்வம், நெகிழ்ச்சி, மகிழ்ச்சிபற்றி வாய் வார்த்தைகளால் அவற்றைச் சொல்லிவிட முடியாது!

இன்றைக்கு ஒரு முக்கியமான நாள்!
நம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களை அனைவரது சார்பிலும் வருக, வருக என வரவேற்று மகிழ்கின்றோம்.
இன்றைக்கு ஒரு முக்கியமான நாள் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கழகப் பணியிலும், கட்சிப் பணியிலும் கண்ணும் கருத்துமாய் காலமெல்லாம் களைப்பின்றி உழைத்துவரும் அய்யா அவர்களுக்கும், தொய்வின்றி அவர் பணியைத் தொடர தூணாய்த் துணை நிற்கும் மோகனா அம்மையாருக்கும் இணையர் தின வாழ்த்துகளை இன்பமாய்த் தெரிவித்து மகிழ்கின்றோம்.
இன்று (டிசம்பர் 7) ஆசிரியர் அய்யா அவர்களுடைய 66 ஆம் ஆண்டு மணநாளாகும். இந்த அற்புதமான நாளில் ஆசிரியர் அய்யாவை நேர்காணல் செய்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்றைக்கு என்னுடைய கணவருடைய பிறந்த நாளும்கூட! ‘‘ஹாட்ரிக் வெற்றி’’ என்று சொல்வதைப்போல, மூன்று விதத்தில் எனக்கு மகிழ்ச்சி.
ஒரு மைல்கல்லாக இந்த நாள் எனக்கு அமைந்தி ருக்கிறது.

மிக்க மகிழ்ச்சி அய்யா!
அய்யாவை அவருடைய மணநாளில் நேர்காணல் செய்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இங்கே குழந்தைகள் மிக அழகாகப் பாடினார்கள்! தமிழ் உச்சரிப்பும் மிக அழகாக இருந்தது!! ஆசிரியர் அய்யாவிற்குப் பொருத்தமான வரிகள், வார்த்தைகளுடன் பாடல் மிகச் சிறப்பாக அமைந்தது.
என் அன்பின் வாழ்த்துகள்!
நாம் நேர்காணலுக்குச் செல்வதற்கு முன்பாக, அண்மையில், டாக்டர் சரோஜா அம்மையார் அவர்கள் மூலமாக, பூண்டி இரா.கோபால்சாமி அய்யா அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதை மிகவும் ரசித்துக் கேட்டேன்.
உங்களுடைய உச்சரிப்பு, சிம்மக் குரலில் நீங்கள் பேசியது; அதில் சில முத்தாய்ப்பான விஷயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்று நான் இங்கே சொல்கிறேன்.

நன்றி என்பதற்குத்
தந்தை பெரியார் சொல்லும் இலக்கணம்!
பெரியார் அடிக்கடி சொல்வார் என்று நீங்கள் சொன்னீர்கள், ‘‘பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே நன்றி; உதவி செய்தவர்கள் நன்றியை எதிர்பார்த்தல் சிறுமைக்குணம்” என்று மிக அழகாகச் சொன்னீர்கள்.
இன்றைக்கு அப்படித்தான் நடக்கிறது. ஏதோ ஒரு சிறிய உதவியைச் செய்துவிட்டு, அவன் என்னை மனதில் வைத்துக் கொள்ளவில்லை; அதற்குப் பதில் அவன் எதுவுமே செய்யவில்லை என்கிற காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன்னொரு செய்தியையும் நீங்கள் சொன்னீர்கள், ‘‘ஒரு நூலைப் பெற்றுக்கொள்வதைவிட, அதைக் கற்றுக்கொள்வதே சிறப்பு” என்று.
‘‘ஆயிரம் பேர் நூல்கள் கொடுப்பார்கள்; அதை நீ வாங்கி, வாங்கி வீட்டில் அடுக்கி வைத்தால் மட்டும்போதாது; அதில் ஒரு நூலையாவது எடுத்து ஒழுங்காகக் கற்றுக்கொள்; உன்னை உயர்த்திக் கொள்’’ என்று சொன்னீர்கள். அதை நீங்கள் சொல்லும்பொழுது, உங்களையே பார்த்து நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.
இன்னொரு விஷயத்தையும் சொன்னீர்கள், ‘‘எங்கெங்கோ இருந்தோ ஆயிரம் ஆயிரம் வானவில் போல அமைப்புகள் வந்துகொண்டே இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் வந்த சுவடு தெரியாமல் போய்விடுகின்றன. ஆனால், நம்முடைய திராவிடர் அமைப்பு வந்தது மாறாமல், தொடக்கத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே வளர்ந்து இருக்கிறது’’ என்று சொன்னீர்கள். ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும்விதமாக, ஆட்சி நடத்தக்கூடிய தலைவரையும் சரி, மக்க ளைப்பற்றிப் பேசும்பொழுதும் சரி, ஓர் உதாரணம் சொன்னீர்கள் அய்யா, “பந்தயக் குதிரையைப்போல” என்று.

‘‘பந்தயக் குதிரைக்கு எந்தப் பதற்றமும் இருக்காது; அதன் மேல் பணத்தைக் கட்டியவனுக்குத்தான் பதற்றம் இருக்கும்” என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள். அது மிகவும் சிறப்பாக இருந்தது.
இயக்கத்தைப்பற்றி பேசும்பொழுது சொன்னீர்கள், ‘‘அரசியல் தர்மம் – அது ஒரு துறவறம் என்று சில பேர் சொல்வார்கள்; துறந்துவிட்டால் ஆபத்து, தொண்டறம் மக்களுக்கு வேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும்’’ என்று சொன்னீர்கள். அவையெல்லாம் மிகச் சிறப்பாக இருந்தன அய்யா!
அய்யாவிடம் சில கேள்விகளைக் கேட்டு, இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கின்றோம்:
உங்கள் ஆசிரியர் ஆ.திராவிடமணிபற்றி…
அன்புடன் ஆனந்தி: உங்களுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்களைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லுங்களேன்?
தமிழர் தலைவர்: உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! உங்களை இதுவரையில் நேரிடையாக சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு இல்லை. அய்யா (பெரியார்) அவர்களால், அம்மா (மணியம்மையார்) அவர்களால் தொடங்கப்பட்ட “ஆதரவற்ற குழந்தைகள் (அனாதை) இல்லம்” என்று முதலில் சொல்லப்பட்டது.

அதற்குப் பிறகு, தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த பகுத்தறிவு, அவர் தந்த புத்திப்படி, அவர்களுக்கு ஆதரவாக நாம் இருக்கும்பொழுது, உலகம் முழுவதும் நமக்குத் தோழர்கள் இருக்கும்பொழுது, நம் குடும்பம் ‘கொள்கைக் குடும்பமாக’ இருக்கும்பொழுது, கொள்கை உறவுகள் இருக்கும்பொழுது, அவர்கள் எப்படி ‘‘ஆதரவற்ற குழந்தைகளாக” இருப்பார்கள்?
ஆகவே, பேராதரவுப் பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக- நாமெல்லாம் எங்கோ பிறந்து, எப்படியே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அந்தக் குழந்தைகள் நம்முடைய குழந்தைகள் – நம்முடைய இல்லத்துக் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய பெரும் உள்ளத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் திகழ்கிறீர்கள்.
அதற்கு நான் ஒரு தொண்டன் என்ற முறையில், தந்தை பெரியாருக்குப் பிறகு, அன்னை மணியம்மை யார் அவர்களுக்குப் பிறகு, அந்தக் குழந்தைகளை – சகோதரக் குழந்தைகளாக, நம் குடும்பத்துப் பிள்ளைகளாக, அதன்மூலம் மகிழ்ச்சியை நாம் அடைகின்ற ஒரு சுயநலத்திற்கும் அவர்களைப் பயன்படுத்தக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பாகப் பார்க்கின்ற நேரத்தில்,
தொலைதூரத்தில் இருந்துகொண்டு எல்லைகள் நம்மைப் பிரித்தாலும், அன்பு நம்மை எப்போதும் இணைக்கும்.
‘‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்பதற்கிணங்க, நீங்கள் எங்களுக்குச் செய்கின்ற உதவிகளுக்கு முதற்கண் நன்றி! பாராட்டு!! மகிழ்ச்சி!!!

‘‘நான் இந்த அளவு வளர்ந்ததற்குக் காரணமே என் ஆசிரியர் திராவிடமணி தான்!’’
நான் இந்த அளவிற்கு வளர்ந்ததற்குக் காரணமே, என்னுடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள்தான்.
சென்னைக்குப் பக்கத்தில் பொன்னேரி என்ற ஒரு பகுதி உண்டு. அங்கே ஆசானபுதூர் என்ற ஊரிலிருந்து வந்தவர் அவர்.
எட்டாம் வகுப்பு வரையில் உள்ள – தனியார் நடத்திய ஓர் இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தில் அவர் தலைமை ஆசிரியராக இருந்தார். அதற்கு முன்பு அவர் போர்ட்டிரஸ்ட் அதிகாரியாக ஒரு பொறுப்பில் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் நம்முடைய நாட்டில் இ.எஸ்.எஸ்.எல்.சி. பாடத் திட்டம் உண்டு. பிறகு அதனை மாற்றிவிட்டார்கள்.
ஊருக்கு எல்லையில் இருந்த அந்த இஸ்லாமிய பள்ளியில் அவர் தலைமையாசிரியாக இருந்தார்.
என்னுடைய தந்தையார் ஒரு தையற்காரர். அந்தப் பள்ளியின் உரிமையாளர்கள் ஜவுளிக்கடை வைத்திருப்பவர்கள் என்பதால், என் தந்தையாருக்கு அவர்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு.
எனவே, அந்தப் பள்ளிக்கூடத்தில் என்னை சேர்த்துவிட்டனர். அப்பொழுதுதான் எனக்கு ஆசிரியர் திராவிடமணி அவர்களோடு அறிமுகம்.

‘பள்ளி நாடகத்தில் நடித்தேன்!’
நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும்பொழுது, பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில், ஒரு நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘‘ஒரு குழந்தை யாருக்குச் சொந்தம்’’ என்ற கதையை நாடகமாக்கி இருந்தார்கள்.
குழந்தையை இரண்டாக வெட்டிக் கொடுங்கள் என்று அரசர் கட்டளையிட்டபொழுது, ‘‘அய்யோ, வேண்டாம்; அந்தக் குழந்தை அங்கேயே இருக்கட்டும்” என்று உண்மையான தாய்தான் சொல்வார்.
அதைக் கேட்டு, அரசர், அந்தக் குழந்தையின் தாய் யார் என்பதைக் கண்டுபிடித்தார்.
அந்த அரசரின் பாத்திரத்தை இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த எனக்குக் கொடுத்து, அந்த வசனங்களைப் பேசி நடிக்கச் சொன்னார். அப்படியே நான் நடித்தேன். அதற்காக எனக்குப் பரிசு கிடைத்தது.
குரல் வளம், துணிச்சல் இருக்கக்கூடிய பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு வியா ழக்கிழமையும், பள்ளிக்கூடம் முடிந்ததும், எங்களுக்குப் பயிற்சி அளிப்பார்.

அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரில், நான் உள்பட 5 பேரைத் தேர்ந்தெடுத்தார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வாரம் ஒருமுறை மாலையில் பயிற்சி – பாடப் பயிற்சி முதலில்; பிறகுதான் கொள்கைப் பயிற்சி.
ஆசிரியர் திராவிட மணி அவர்களுடைய குடும்பம் சென்னையில் இருக்கவில்லை, சொந்த ஊரில் இருந்தனர். இவர் தனியேதான் இருந்தார். கடலூரில், ராமலிங்க பக்த ஜனசபையில் உள்ள இடத்தில் இவர் மட்டும் தங்கியிருந்தார்.
ஆகவே, ஆசிரியர் திராவிடமணி அவர்கள் என் ‘வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே’ ஆகிவிட்டார்.
அந்தக் காலகட்டத்தில், என் பெற்றோர்களோ, மற்ற மாணவர்களது பெற்றோர்களோ படித்தவர்கள் அல்ல. நான்தான் என்னுடைய குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி! எஸ்.எஸ்.எல்.சி. தாண்டியதும் நான் ஒருவன்தான் எங்கள் குடும்பத்தில். என்னுடைய அண்ணன்கள் எட்டாம் வகுப்போடு நின்றுவிட்டார்கள்.

இலவசமாக அவர் படிப்பை மாலையிலும் (பிரை வேட் டியூசன்) சொல்லிக் கொடுக்கிறார் என்றதும், எங்களைப் போன்ற மாணவர்களை அவரிடத்தில் சேர்த்துவிட்டனர் – பெற்றோர்கள்!
பள்ளிப் பாடத்தோடு பகுத்தறிவுப் பாடத்தையும் ஊட்டி வளர்த்தார்!
பிள்ளைகள் நல்வழிப்படுத்தப்படுகிறார்கள் என்று எண்ணினார்கள். அதோடு படிப்பறிவுடன் பகுத்தறிவுப் பாடத்தையும் சேர்த்து ஊட்டிக் கொண்டிருந்தார் ஆசிரியர் திராவிடமணி அவர்கள். அதைப்பற்றி பெற்றோர்களும் கவலைப்படவில்லை.
‘குடிஅரசு’, ‘திராவிட நாடு’, ‘விடுதலை’ போன்ற ஏடுகளை எங்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். பெரியார், அண்ணா, புரட்சிக்கவிஞர் ஆகிய வர்களைப்பற்றி எடுத்துச் சொல்வார்.

‘அண்ணா கலந்துகொண்ட கூட்டத்தில் நானும் பேசினேன்!’
1943 இல், அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழ் தொடங்கி ஓராண்டு ஆகியிருக்கும். அதற்காக நிதி உதவி கோரி வேண்டுகோள் விடுத்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில், எங்களுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் நிதி திரட்டி 106 ரூபாய் திரட்டினார். அந்த நிதியைக் கொடுப்பதற்காக கடலூர் முதுநகரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அண்ணா அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்தார். பொன்னம்பலனார் போன்றவர்களும் பங்கேற்றனர்.
அந்தப் பொதுக்கூட்டத்தில் மேசை மீது ஏறி நிற்க வைத்து, ஆசிரியர் திராவிடமணி அவர்கள் எழுதிக் கொடுத்ததை நான் மனப்பாடம் செய்து, உரையாற்றினேன். அதுதான் என்னுடைய முதல் அரங்கேற்றம் – 1943 ஆம் ஆண்டு.
அப்பொழுதுதான் நான் முதன்முதலாக அண்ணா அவர்களைப் பார்த்தேன். அதற்கடுத்து சில மாதங்களில், அய்யா, அண்ணா ஆகியோர் பங்கேற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிட மாநாடு நடை பெற்றது.
ஆசிரியர் திராவிடமணி அவர்கள் வாங்குகின்ற சம்பளத்தையெல்லாம் இயக்கத்திற்காகவே செல வழிப்பார். பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாவலர், பேராசிரியர் போன்றவர்களை எல்லாம் அழைத்துப் பொதுக்கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
சிதம்பரத்தில் இருந்து கடலூர் வருவதற்கு தொடர் வண்டி கட்டணம் (டிக்கெட்) எட்டணாதான். எல்லா பணிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதற்கு ஆசிரியர் திராவிடமணி அவர்கள்தான் காரணம்!
இப்படி எங்களுக்குப் பயிற்சி கொடுத்து, பயிற்சி கொடுத்து, பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்து, அவர் நேரிடையாக வராமல், நல்ல அடிக்கட்டுமானமாக இருந்தார்கள். அவருடைய பிறந்த நாளும் டிசம்பர் 2 ஆம் நாள்தான்!

திராவிடர் கழகத்திற்கு அண்ணாவும் – ஆ.திராவிடமணியும்
மாநில செயலாளர்கள் ஆனார்கள்!
எப்படி என்னுடைய மணநாளும் – உங்களுடைய வாழ்விணையரின் பிறந்த நாளும் எதிர்பாராமல் ஒரே நாளில் இருக்கின்றனவோ, அதுபோல, என்னுடைய பிறந்த நாளும், என்னை தயாரித்த ஆசிரியர் திராவிடமணி அவர்களுடைய பிறந்த நாளும்
டிசம்பர் 2 என்பது எதிர்பாராத ஒரு நிகழ்வு.
அவருடைய கடும் உழைப்பு, அவருடைய ஈடுபாடு, உறுதிப்பாடு இவற்றையெல்லாம் கண்டு, 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டவுடன், தந்தை பெரியார் அவர்களே, ‘‘உங்களுடைய ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ‘குடிஅரசு’ அலுவலகம் அமைந்துள்ள ஈரோட்டிற்கு வாருங்கள்” என்று சொல்லி அழைத்துக் கொள்கிறார்.
நீதிக்கட்சி சேலத்தில் திராவிடர் கழகமாக மாறியபோது, திராவிடர் கழகத்திற்கு இரண்டு செய லாளர்களை நியமித்தார் அய்யா அவர்கள்.
ஒருவர் அறிஞர் அண்ணா அவர்கள்; இன்னொருவர் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள்.
‘மத்திய செயலாளர்களாக’ இருந்தார்கள். பொதுச்செயலாளர் என்ற வார்த்தையை அன்றைக்குப் பயன்படுத்தவில்லை.
அதற்குப் பிறகு அவர் சென்னையில் ‘விடுதலை’யி னுடைய மேலாளராகவும் இருந்தார். இப்படி நீண்ட வரலாற்றை உடையவர்.
நான் இன்றைக்கு இந்த அளவிற்கு வந்தி ருக்கின்றேன் என்றால், அந்த ஆசிரியர்தான் காரணம். தனித்தமிழ் உணர்வோடு இருக்கவேண்டும் என்ப தற்காக, சாரங்கபாணி என்ற என்னுடைய பெயரை, வீரமணியாக ஆக்கினார்.
பாலவேலாயுதம் என்பதை ‘இளவழகன்’ என்று பெயர் மாற்றினார்.

தோழர் ராமையா, ‘அன்பழகனாக’ ஆன காலகட்டம்; நாராயணசாமி ‘நெடுஞ்செழியன்’ ஆன காலகட்டம்; சோமசுந்தரம், ‘மதியழகன்’ ஆன காலகட்டம். ஆக, இப்படிப்பட்ட ஒரு பெரிய வரலாறு, ஒரு பண்பாட்டு அமைதிப் புரட்சி தமிழ்வழி நடந்துகொண்டிருக்கின்ற காலகட்டத்தில், நாங்கள் எல்லாம் ஒரு சிறு துரும்புகள் போன்று இருந்தாலும், அவருடைய பயிற்சியி னால்தான், இன்றைக்கு அந்த உணர்வோடு இருக்கி றோம்.
கடைசி வரையில், நான் வளர்ந்த பிறகும்கூட, ‘விடுதலை’யின் நிர்வாகியான பிறகு, அவர் ஒதுங்கி தனியே இருந்தபொழுதுகூட, பெருமைப்பட்டு, மகிழ்ச்சியடைந்து வந்து, என்னை வாழ்த்தினார்.
ஆசிரியர் திராவிடமணி அவர்களுடைய துணைவி யாரும் என்னைப் பாராட்டுவார்கள். எனது ‘குருபக்தி’ என்றும் மாறாதது!
ஆகவே, எனக்கு நல்லாசிரியர் திராவிடமணி அவர்கள் கல்வி அறிவு ஆசிரியர்; எனக்கு அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.
அந்தப் பெரியாரை, ஒரு பாடத் திட்டமாக வைத்து, முதலில் எனக்குப் பயிற்சி கொடுத்தவர் ஆ.திராவிடமணி.
ஆ என்பது அவருடைய தந்தையாருடைய பெயர் அல்ல. ஊர்ப் பெயரை முதலில் வைத்துக்கொள்வது அவர்களுடைய மரபு. ஆசானபுதூர் அவருடைய சொந்த ஊர்.

(ஆற்காடு) ஏ.ராமசாமி முதலியார் என்று அழைப்பதுபோல!
அன்புடன் ஆனந்தி : உங்களுடைய பதில் மிகவும் சிறப்பாக இருந்தது. அன்றைக்கு அவர் விதைத்த விதை, இன்றைக்கு ஒரு விருட்சமாக எங்கள்முன் எழுந்து நிற்கிறீர்கள். அழகாகச் சொன்னீர்கள், மேசை உயரம் கூட இல்லாத உங்களை, அதன்மீது ஏற்றி உங்களைப் பேச வைத்தார்கள் என்று சொன்னீர்கள். எத்தனையோ மாணவர்கள் இருந்தாலும், உங்களை அவர் தேர்ந்தெடுத்து அந்த நாடகத்தில் உங்களை நடிக்க வைத்தார் என்று சொன்னீர்கள்.
அவருடைய கண்டெடுப்பு, பட்டை தீட்டிய வைரமாக அய்யா அவர்கள் எங்கள்முன் இன்றைக்கு அமர்ந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியோடு நீங்கள் அவரை நினைவு கூர்ந்து, நிறைய நிகழ்ச்சிகளைச் சொன்னீர்கள். தனித்தமிழில் அவர் பெயர் வைத்ததையும் சொன்னீர்கள்.
அய்யாவினுடைய இயற்பெயர் என்னவாக இருக்கும் என்று எல்லோரும் நினைப்பார்கள். எப்படி கி.வீரமணி என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கே அந்தக் கேள்வி இருந்தது. அதற்கும் சேர்த்து இன்றைக்கு முத்தாய்ப்பாக நீங்கள் விடையைச் சொல்லிவிட்டீர்கள்.

மிக்க மகிழ்ச்சி அய்யா!
இந்த நேரத்தில், உங்களை எங்களுக்குத் தந்த, கழகத்திற்குத் தந்த ஆ.திராவிடமணி ஆசிரியர் அய்யா – ஏனென்றால், ‘‘ஆசிரியர் பணி அறப்பணி – அதற்கு உன்னை அர்ப்பணி” என்று சொல்வார்கள்.
ஏனென்றால், நம் பெற்றோர்களோடு இருக்கக்கூடிய நேரத்தைவிட, ஆசிரியர்களோடு நாம் பள்ளியில் இருக்கக்கூடிய நேரம்தான் அதி கம். அந்த நேரத்தில், நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன முன்னேற்றங்கள் நடக்குமோ, அதற்கு அத்துணைப் பெருமையும் அந்த ஆசிரியர்ப் பெருமக்களுக்கே என்றும் உண்டு!
உங்களுக்கு அமைந்த நல்லாசிரியர், சிறப்பாக உங்களை வடிமைத்திருக்கிறார். அது மிகவும் சிறப்பு.
அதற்கடுத்தபடியாக, நாம் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய நம் தந்தை பெரியாரை, முதன்முதலாய் நீங்கள்

சந்தித்த அனுபவத்தைப்பற்றி சொல்லுங்கள்?
தந்தை பெரியாருடன் முதல் சந்திப்பு!
தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்கான பதிலை ஏற்கெனவே சில நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.
1943 ஆம் ஆண்டு நிகழ்விற்குப் பிறகு, சில மாதங்களில் – முன் சொன்ன பதிலில் இதற்குத் தொடர்பு இருக்கிறது.
தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு வந்த அய்யா அவர்கள் திருப்பாதிரிபுலியூரில் கடலூர் புதுநகர் (என்.டி.) சத்திரம் ஒன்றில் தங்கியிருக்கிறார்.

என்னுடைய அந்த சிறிய வயதில் அய்யாவைப்பற்றி ஏடுகளில் படித்திருக்கிறேன். அப்படிப்பட்ட பெரியாரை நாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற பரபரப்பு என் மனதிற்குள்!
காலையிலேயே அய்யா தந்தை பெரியார் அவர்களை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்தார்கள்.
‘டார்பிடோ’ ஏ.பி. ஜனார்த்தனம் எம்.ஏ. மிகச் சிறந்த பேச்சாளர். அவர் ஏற்கெனவே என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்களால் எனக்கு அறிமுகமானவர். அவர், ‘‘வா, உன்னை பெரியார் அய்யாவிடம் அறிமுகப்படுத்துகிறேன்” என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
அன்னை மணியம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் செயலாளராக அன்றைக்கு வந்திருந்தார் (1944, ஜூலை).
நான் அரைக்கால் சட்டை அணிந்திருந்தேன். அய்யாவை சந்தித்தோம்.
‘யார் இந்தப் பையன்?’ என்று அய்யா கேட்டார்.
அய்யா, இந்தப் பையன் நம் திராவிடமணியினு டைய மாணவர். இயக்கப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார் என்றார் டார்பிடோ ஜனார்த்தனம்.

அப்படியா? என்ன படிக்கிறீங்க? என்று அய்யா கேட்டார்.
அதைக் கேட்டவுடன், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், நான் சிறிய பையன்.
அய்யா கேட்ட அந்த முறையைப் பார்த்து என்னால் பேச முடியவில்லை.
அதுதான் அய்யாவுடனான முதல் சந்திப்பு.அதற்குப் பிறகு, மாலையில் மாநாடு நடைபெற்றது. ‘‘செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும்” என்ற கவிஞர் கருணானந்தத்தின் அந்தக் கவிதை உருவாகக் காரணம். அந்த செருப்புப் போட்ட நிகழ்வு நடந்தது. அய்யா வந்த ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு வந்தது எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது.

அன்புடன் ஆனந்தி: மிகவும் அருமை அய்யா!
நீங்கள் சொன்னீர்கள், பெரியாரை சந்திக்கும்பொழுது பரபரப்பாக இருந்தது என்று.
இன்றைக்கு வீரமணி அய்யாவை நேர்காணல் செய்யப் போகிறோம் என்றவுடன், கடந்த ஒரு வாரமாகவே எனக்கு அந்தப் பரபரப்பு இருந்தது!
சிறிய வயதில், மேசைமீது ஏறி உங்களுடைய முதல் ‘அரங்கேற்றம்’ நடந்தது என்று.
இப்பொழுது நான் கேட்பது, பெரியார் அவர்களை சந்தித்த பிறகு, கழகம் சார்ந்து உங்களுடைய முதல் மேடை பேச்சு எந்த வயதில் தொடங்கியது? அதை யார் தொடங்கி வைத்தார்கள்?
தமிழர் தலைவர்: என்னுடைய சொந்த ஊரான கடலூரில், 1943 ஆம் ஆண்டு அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு நிதி கொடுக்கின்ற பொதுக்கூட்டத்தில் மேசை மீது ஏறி உரையாற்றினேன், 3, 4 நிமிடங்கள். அவ்வளவுதான். எழுதித் தந்த உரை – வரப்படுத்திப் பேசினேன்.
அதற்குப் பிறகு நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில், அண்ணா அவர்கள் எனக்குப் பின் உரையாற்றுகிறார். இடையில் என்னை பேச விட்டார்கள்.

மாநாட்டில் அய்யாவிற்குப் பெரிய எதிர்ப்பு. அய்யா அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்று பார்த்தோம், மெய்சிலிர்த்தது!
அண்ணாவின் பாராட்டு!
மேசைமீது ஏறி நான் பேசினேன் – 5, 7 நிமிடங்கள்.
அதற்கடுத்தாகப் பேசிய அறிஞர் அண்ணா அவர்கள், என்னைப்பற்றி பேச ஆரம்பித்தார்:
‘‘எனக்கு முன் பேசிய இந்தச் சிறுவன் என்று ஆரம்பித்து, “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை ‘இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக’ ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான்” என்று பாராட்டிப் பேசினார்.
அன்றைக்குப் பேசியதுதான் அய்யா முன் பேசிய முதல் பேச்சு – மாநாட்டில் பல நூற்றுக்கணக்கானவர்கள் முன்!
அதற்குப் பிறகு தோழர்கள் என்னை பொதுக் கூட்டத்திற்கு அழைத்தார்கள். ‘‘10 வயது பகுத்தறிவுச் சிறுவன்” என்று போட்டு விளம்பரம் செய்தார்கள்.

‘வெளியூர்களில் பேச எனக்கு அழைப்பு!’
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கெல்லாம் கூட்டத்தில் பங்கேற்க சென்றோம். அவரது விடுமுறை நாள்களில் மட்டும் என்னை அழைத்துச் செல்வார் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள்.
அவர் வர முடியவில்லை என்றால், என்னுடைய மூத்த சகோதரர் கோவிந்தராஜன் அவர்கள் இந்தக் கொள்கையில் ஊறியவர். அவர் என்னை அழைத்துச் செல்வார்.
(நாளை தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *