அமைச்சர் ரகுபதி கேள்வி
சென்னை, பிப்.6 சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்‘ தள பதிவில் கூறி யிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் அவை மரபுகளைப் பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?
தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை.
பேரவை மாண்பை மதிக்காமல்…
ஆளுநரோடு முரண்பட்ட போதிலும், பேரவை நாகரிகம் கருதி முதலமைச்சர், ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற பேரவைத் தலைவர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால், நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையைப் படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
சட்டப்படி மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். அதைத் தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர்
ஆர்.என்.ரவி அவர்களே? என தெரிவித்துள்ளார்.