‘‘நீட்’’ எதிர்ப்புக்குக் கன்னத்தில் அறை’’ என்று திமிர்த்தனமாக இவ்வார ‘துக்ளக்’ இதழில் (12.2.2025) தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.
இதற்குச் செவுளில் அறையுமாறு நம்மால் பதில் சொல்ல முடியும். ‘நீட்’ தேவை என்பதற்கு என்ன காரணத்தைக் கூறுகிறது ‘துக்ளக்’?
‘மனித இனத்துக்கே பொதுவானது மருத்துவம் என்பதால்தான், அதைக் கண்காணிக்க உலக நாடுகள் WHO அமைப்பை உருவாக்கின. ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்களின் வாழ்வா – சாவா பிரச்சினைக்கு நிவாரணங்கள் கூறும் மருத்துவத் துறையைக் கண்காணித்து, கட்டுப்பாட்டில் வைக்கும் கட்டுமான அமைப்பில், முக்கிய அங்கம் வகிக்கிறது இந்தியன் மெடிக்கல் கவுன்சில். சட்டப்படி அமைந்த அதன் பொறுப்பு – தகுதியும், திறமையும் உள்ள மருத்துவக் கல்வியை உருவாக்குவது. தரமான மருத்துவர்களை உருவாக்க முதல்படி, மருத்துவக் கல்விக்குத் தகுதி அடிப்படையிலான நுழைவுத் தேர்வு தேவை என்பதை நீட்டை எதிர்ப்பவர்கள்கூட எதிர்க்கவில்லை, எதிர்க்கவும் முடியாது’’ என்று எழுதுகிறது துக்ளக்.
‘மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்புக்குத் தேர்வு நடத்தும் உரிமை கிடையாது என்பதை அல் தாமஸ் கபீர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு பளார் என்று கன்னத்தில் அடித்துத் தீர்ப்புக் கூறியதை ‘துக்ளக்’கில் பூணூலை எழுதுகோலாகக் கொண்டு எழுதும் கூட்டம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக மதிப்பெண்தான் தகுதிக்கான அளவுகோல் என்பது கடைந்தெடுத்த பொய்யும் – பசுப்புமாகும்.
1992ஆம் ஆண்டு பீகாரில் லாலு பிரசாத் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மருத்துவ மேல் பட்டப் படிப்புக்காக மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடுக்கு வகை செய்து, ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டோருக்கு – 14%
மலைவாழ் மக்களுக்கு – 10%
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு – 14%
பிற்படுத்தப்பட்டோருக்கு – 9%
பெண்களுக்கு – 3%
என்று இடஒதுக்கீடுக்கு வழி செய்தார் அன்றைய பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத்.
இதனை எதிர்த்து உயர் ஜாதியினர் குறிப்பாகப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.
நீதிபதிகள் எஸ்.சி. அகர்வால், பி.பி. ஜீவன் ரெட்டி, எம்.கே. முகர்ஜி ஆகிய மூன்று நீதிபதிகளும் வழக்கினை விசாாரித்துத் தீர்ப்பினை வழங்கினர்.
“No one will be passed unless he acquires the requiste level of Promotency. Secondly the academic performance is no guarantee of efficiency in practice we have been both in law and medicine that persons with brilliant academic record do not succeed in practise while students who were supposed to be less intelligent come out successful in profession. It is, therefore, wrong to presume that a doctor with good academic record is bound to prove a better doctor in practise it may happen or may not”
‘‘முதலில் தேவையான அளவுக்கு அறிவுத் திறன் இல்லாத எவரும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது. இரண்டாவதாக தேர்வுகளில் காட்டுகிற திறமையை வைத்து, அவர் தொழிலிலும் திறமையாகச் செயல்படுவார் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் கூற முடியாது.
சட்டப் படிப்பானாலும்சரி, மருத்துவப் படிப்பானாலும் சரி, படிப்பில் மிகவும் புத்திசாலித்தனமான மாணவர்கள் என்பதற்கான சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் நடைமுறையில் தொழிலில் கெட்டிக்காரர்களாக இருந்து விடுவது இல்லை.
அதே நேரத்தில் தேர்வுச் சான்றிதழ்களில் குறைந்த புத்திசாலிகள்போல் தோன்றுபவர்கள், தொழிலில் மிகவும் திறமைசாலிகளாகி வெற்றி பெறுகிறார்கள். எனவே, நல்ல மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறும் டாக்டர்கள் எல்லோருமே தொழில் ரீதியாகவும் நல்ல டாக்டர்கள்தான் என்ற உறுதியான முடிவுக்கு வந்து விடுவது தவறு. ‘அப்படி நடக்கலாம், நடக்காமலும் போகலாம்’ என்று நுட்பமான முறையிலும், நடைமுறைக் கண்ணோட்டத்திலும் தீர்ப்பு வழங்கியவர்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தானே!
மார்க்குதான் தகுதி திறமைக்கு அளவுகோல் என்றால்… நீட் தேர்வில் பூஜ்ஜியம் மார்க்கு வாங்கியவர்கள்கூட முதுநிலைப் பட்டப்படிப்புக் கல்வியிலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்வியிலும் தனியார் கல்லூரிகளில் சேரலாம் என்று இருக்கிறதே! நீட்டில் பூஜ்யம் மதிப்பெண் பெற்று தனியார் கல்லூரிகளில் இத்தகைய துறைகளில் பட்டம் பெற்று வந்தவர்கள் எல்லாம் தரத்தில் குறைந்தவர்களா?
தங்க மெடல் வாங்கியவர்கள் தான் திறமையாகப் பணியாற்றுகிறார்கள், குறைந்த மதிப்பெண் பெற்று டாக்டர்கள் ஆனவர்கள் எல்லாம் சிறப்பான வகையில் மருத்துவப் பணியைச் செய்யவில்லை என்பதற்கான தரவுகள் உண்டா? புள்ளி விவரங்கள் உண்டா?
மயிலாடுதுறை அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்று, கல்லீரல் அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்றவராகத் திகழும் டாக்டர் ரேனா தேர்வில் தங்க மெடல் வாங்கியவர் இல்லை என்பது நினைவில் இருக்கட்டும்.
உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் நீதிபதி வி.ஆர். இரவீந்தரன் கூறியதாவது (19.8.2011):
‘‘அம்பேத்கர் அவர்கள் வெறும் 37 மதிப்பெண் களைத்தான் பெற்று இருந்தார். மதிப்பெண்களை வைத்து, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால் இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் கிடைத்திருக்குமா?’’
(குறிப்பு: மெட்ரிக்குலேஷனில் அம்பேத்கர் பெற்ற மதிப்பெண் 750க்கு 282 என்று ‘துக்ளக்’ மொழியில் கன்னத்தில் அறைந்தது போல தீர்ப்பில் கூறியதுண்டே!)
வெறும் மனப்பாடக் கல்வி என்பது பார்ப்பனர்கள் தங்கள் வசதிக்காக ஏற்படுத்திக் கொண்டதாகும். காலம் காலமாக மந்திரங்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்த வகையில் அவர்களுக்கு மரபணு வழியாக கிடைக்கப் பெற்ற திறன். அதனைக் கல்வியின் அளவுகோலாகத் திணிப்பது – அவர்களுக்கே உரித்தான தந்திரமே!.
தகுதி – திறமைப்புரட்டைப் பற்றி தந்தை பெரியாரும், காமராசரும் கூறியதைவிட வேறு யாரால் தான் கூறிட முடியும்?
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் நடந்த மிகப் பெரிய ‘வியாபம்’ ஊழலை மறந்து விட்டு ‘துக்ளக்’குகள் ஊளையிட வேண்டாம்!
‘நீட்’ ‘துக்ளக்கின்’ ஊளை!
Leave a Comment