தொழில் துறையினர்
ஆலோசனை வழங்க வேண்டுகோள்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய வருமான வரி மசோதா குறித்து தொழில் துறையினர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு ஒன்றிய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.
பூந்தமல்லி -போரூர்
மெட்ரோ ரயில் பணி ஜூனில் முடியும்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4ஆவது வழித் தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி -போரூர் இடையே உயர்மட்டப் பாதையில் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும். அனைத்து பணிகளையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயபுரம் – புதுடில்லி இடையே
சரக்கு ரயில் சேவை
சென்னை ராயபுரம் – புதுடில்லி படேல் நகர்க்கிடையே முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுப் பயணம் மூலமாக, குறைந்த பட்சம் ரூ.25 லட்சம் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சரக்கு ரயிலில் வாகன உதிரி பாகங்கள், கைத்தறி, டயர்கள், கூரியர் பொருள்கள் போன்றவை எடுத்துச் செல்லப்படும். இந்த சரக்கு ரயில் ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு 2,195 கி.மீ. தொலைவு சென்றடையும். இதன்மூலம், தென்பகுதியை இந்தியாவின் வடக்குப் பகுதிகளுடன் இணைக்கும் இந்தச் சேவை, பிராந்தியங்களுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கல்லூரிகளுக்கு அறிவிக்கை (நோட்டீசு)
உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் நடைபெறாமல் தடுப்பதற்கான விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிட்டது. இவற்றை பின்பற்றி கல்லூரிகளில் ராகிங்கை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு யுஜிசி உத்தரவிட்டது.
இந்த நிலையில், ராகிங் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததாகக் கூறி, தமிழ்நாட்டில் சென்னை சவீதா, வேலூர் சிஎம்சி ஆகிய 2 கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 18 மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீசு அனுப்பியுள்ளது.
மக்களவையில்
எதிரொலித்த ஆளுநர் விவகாரம்
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநர் ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்கிறார். எனவே, ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
இல்லையெனில் அப்பதவியை நீக்க வேண்டும் என மக்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த J.P.நட்டா, அவரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார்.
குடியிருப்புப் பகுதியில்
மொபைல் கடவுச் சீட்டு சேவை வாகனம்
சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், சென்னை மண்டல கடவுச் சீட்டு அதிகாரி விஜயகுமார் 3.2.2025 அன்று டிசிஎஸ் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ‘மொபைல் பாஸ்போர்ட் சேவை’ வேனை பெற்றுக் கொண்டார்.
இதன் மூலம் நீண்ட தூரம் பயணம் செய்யாமல் தனி நபர்களுக்கு கடவுச் சீட்டு சேவைகளை எளிதாக அணுக இந்த முயற்சி உதவுகிறது. மேலும் இத்தகைய திட்டங்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடவுச் சீட்டு சேவைகள், நடைமுறைகள் மற்றும் கடவுச் சீட்டை அடையாள ஆவணமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிணங்களை ஆற்றில் எறிந்தனர்:
ஜெயா பச்சன்
கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டதாக மாநிலங்களவை உறுப்பினர் ஜெயா பச்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். கும்பமேளாவிற்கு வரும் சாதாரண மக்களுக்கு எந்தவொரு வசதிகளையும் அம்மாநில அரசு செய்யவில்லை என்றும், அரசின் அஜாக்கிரதையால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளானதாகவும் விமர்சித்துள்ளார். உ.பி அரசு கூறுவதை போன்று கோடிக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வரவில்லை.
ரூபாயின் மதிப்பு ரூ.87க்கு கீழே சென்றது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87க்கு கீழ் சரிந்ததால் இறக்குமதியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவில் ட்ரம்ப் விதிக்கும் புதிய கொள்கைகள், இந்திய பட்ஜெட் ஆகியவை ரூபாயின் மதிப்பை தொடர்ந்து கீழ்நோக்கி இழுத்து வருகிறது. இதனால், தங்கத்தின் விலை உயரும், இறக்குமதியாளர்கள் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.