அறிஞர் அண்ணா
1942இல் ‘திராவிட நாடு’ பத்திரிகை துவங்கிய போது 83 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை – மீண்டும் வெளியிடுகிறோம். கருத்தூன்றிப் படியுங்கள் – பரப்புங்கள்.
– ஆசிரியர்
தோழன்:- சித்தார்த்தரே! உமக்கென்ன குறை? நீரோ, கீர்த்தி வாய்ந்த மன்னனின் மகன் – சாம்ராஜ்ய சித்திரயம்; உமக்கு மனோ ரம்மியமான மாளிகை இருக்கிறது; சிங்காரத் தோட்டமிருக்கிறது; அதோ பாரும் – நீலப் பட்டாடை அணிந்த மயிலாள் பச்சைச் சம்பளிமீது நடனமாடுகிறாள்; குயில் கூவுகிறது; மயிலின் சாயல் – குயிலின் இனிய குரல் – தென்றல் போன்ற குணம் கொண்ட தர்மப் பத்தினியும், செல்வக் குழந்தையும் உமக்கு உள்ளனர்; இவ்வளவும் இருக்க, நீர் ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறீர்? சந்திரனுக்கும் களங்கம் உண்டு – உமக்கு அதுவும் இல்லை; ரோஜாவில் முள் உண்டு – உமது வாழ்க்கை, முன் இல்லாத ரோஜாவாயிற்று; சுருதியுடன் சேர்ந்த சங்கீதம் போன்றுள்ள உமது வாழ்க்கையில் வசீகரம் இருக்கக் காரணமிருக்கிறதே தவிர, விசாரத்துக்குக் காரணமில்லையே; அரண்மனை உம்மை அழைக்கிறது; மணிமுடி உமக்குச் சித்தமாக இருக்கிறது. கொலு மண்டபத்திலே மந்திரிப் பிரதானிகள். இளவரசர் என்றையத் தினம் சிம்மாசனம் ஏறுவார் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்; வலிய அணையும் சுகத்தைப் பெற்றும் வாட்டம் உமக்கு ஏன்?
விடுதலை பெறவேண்டும்
சித்தார்த்தர்:- நண்பா! என் சிந்தனையைக் கெடுத்துவிட்டாய்; நீ விரித்த வசீகரங்கள், என்னை வாத்சல்யத்துடன் வரவேற்கின்றன; குதூகலமூட்டப் பலருண்டு; ஆனால், சந்திரனைக் கருமேகம் பிடித்து மறைந்திருப்பதுபோல, என் வாழ்க்கை வசீகரத்தை ஒரு வாட்டம் வதைக்கிறது; சந்திரன், மேகத்தை விரட்டி அடித்துவிட்டு மினுக்கிக் கொண்டு வரக் கண்டிருக்கிறேன்; ஆனால் நானோ, வாட்டத்தினின்று விடுதலை பெறுவது முடியாத காரியம்!
தோழன்:- இளவரசே – சோகத்தின் காரணம் என்ன? மன்னிக்க வேண்டும்; மதனனின் கணைகள் . . .
சித்தார்த்தர்:- சீச்சி! என் மனைவியின் அன்பு எனும் கேடயத்தின் முன் அக் கணைகள் கூர் மழுங்கிக் கீழே விழும்; என்னை வதைப்பது அதுவல்ல!
சித்தார்த்தர்:- மல்லிகையும் – மனோரஞ்சிதமும் தூவித்தான் இருக்கிறது – பஞ்சணையின்மீது தென்றல் வீசுகிறது: நிலவு நடனமாடுகிறது; யாழ் ஒலிக்கிறது; ஆம் – இவ்வளவையும் நுகர்ந்து இன்பத்தில் ஈடுபட ஆவலோடு பஞ்சணைக்கு அருகில் சென்றால், மலரணைமீது மங்கை இல்லை – சீறும் நாகம் இருக்கிறது; என் வாழ்க்கைப் பஞ்சணையில் சீறும் நாகத்தை நான் கண்டேன்; கலக்கம் ஏற்படாதோ – கூறு!
தோழன்:- சீறும் நாகம் எங்கே?
சித்தார்த்தர்:- எங்கேயா? எங்கும் அதனைத்தான் காண்கிறேன்; சுகம் – போகம் – ஆட்சி – அன்பு – இவைகள் தவழும் வாழ்க்கைப் பஞ்சணையில் படுத்துக் கொண்டிருக்கிறது. வறுமை – மப்பு – நோய் – மரணம் எனும் நான்கு தலைகள் கொண்ட நாகம்; அதனைக் கண்ட பிறகு, எனக்கு வாழ்க்கைப் பஞ்சணையில் படுக்க மனமில்லை!
புது வழி
தோழன்:- இதைத்தான் கூறினீரா? நன்று, நன்று; பால் போல் காயும் நிலவும் சில நாள் தேயும். இருளும் ஒளியும், இன்ப துன்பமும் இயற்கைதானே? இதனை மாற்ற நாமா அதிகாரிகள்? சுகம் கிடைக்கும்போது அதனை நுகருவது – துக்கம் நேரிடுங்காலையில் சகித்துக் கொள்வது – என்பதைத் தவிர, வேறு வழி ஏது?
சித்தார்த்தர்:- புது வழி காண்பேன்; போகங்களைத் துறந்து – அரசவை விட்டு நீங்கி – அலைந்து திரிந்து – இன்பமும் துன்பமும் பிணைந்துள்ள முடியை அவிழ்த்துவிடும் வித்தையைக் கற்பேன்; அந்தப் புரத்து அலங்காரியும் வேண்டாம் – அரச போகமும் வேண்டாம்; உண்மையை உணரும் வேலையில் ஈடுபடுவேன்; உத்தமர்களை நாடுவேன்; யோகங்களைப் புரிவேன்; தவசிகளை அடுப்பேன் – அவர்தம் கருத்துகளைச் செவிமடுப்பேன்; நாலு தலை நாகத்தை நசுக்குவேன்!
புத்தருக்கும் – அவரது தோழருக்கும், மேலே தீட்டியுள்ளது போன்ற பேச்சு நடந்திருக்கக்கூடும்!
துறவுக் கோலம்
இளவரசர் துறவியாவதற்கு முன்னர், தமது தோழருடன் கலந்து பேசியிருப்பார்; இல்லையேனும் – அவருடைய மனத்திற்குள்ளாகவேனும் இத்தகைய கருத்துப்போர் நடைபெற்றுத்தானிருக்கும்!
இறுதியில் சித்தார்த்தர், துறவுக்கோலம் பூண்டார் – புத்தரானார்!
கருணை ததும்பும் பார்வையால் அவர், கசடர்களின் கல் மனத்தையும் கரைத்தார்; புன்சிரிப்பால் – புரோகிதரின் பொச்சரிப்பைப் பொசுக்கினார்!
அன்பினால் – ஆரியப் புரட்டர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தார்! கொலையை, வேள்வி என்றும் – குருட்டுத்தனத்தை, சாத்திரம் என்றும் – ஆபாச ஆட்டங்களை, ஆண்டவன் பணி என்றும், ஜாதி சனியனை, கடவுள் கட்டளை என்றும் கூறி மக்களைச் சிறைப்படுத்திய பார்ப்பனீயத்தைப் புத்தரின் புரட்சி, மூலைக்கு விரட்டிவிட்டது! புத்த மார்க்கம் வஞ்சக வர்க்கத்தவரை வீழ்த்திற்று; ஆனால் . . .
ஆரிய அரவம்
இந்தியாவில் தோன்றிய புத்த மார்க்கம், இந்தியா வில் இல்லை – சீன நாட்டில் இருக்கிறது!
புத்தரின் மறைவுக்குப் பிறகு புதருக்குள் மறைந் திருந்த ஆரிய அரவம் வெளிக் கிளம்பி மீண்டும் தனது விஷப் பல்லுக்கு வேலை தேடிக் கொண்டது.
புத்த மதம் இந்தியாவிலே இடம் பெற்றிருந்திருப் பின், நாட்டு நிலையும் – மக்கள் நிலையும் இப்போ திருப்பதைப்போலவா இருந்திருக்கும்?
சுதேசமித்திரன் (மார்ச் 1-ஆம் தேதி) எழுதுகிறது – பாரதத் தாய் ஈன்றெடுத்த புத்த பகவான் உபதேச மொழிகளே சீனா பின்பற்றும் மதம். என்று!
கோபாலகிருஷ்ணரின் பிருந்தாவன லீலைகளுக்கு மதிப்புத்தரும் மித்திரனுக்கு இந்த வாசகத்தை எழுதும்போது, துக்கமோ – வெட்கமோ ஏற்பட்டிருக்காது; பெருமையும் பூரிப்பும்தான் ஏற்பட்டிருக்கும்.
புத்தரின் புரட்சி வேகத்தை நாடு கடத்தியவர்கள் நமது மூதாதையர் என்ற எண்ணம் ஆசிரியருக்குப் பூரிப்பையும் – பெருமையையும் அளிக்கும்; ஆனால், பார்ப்பனீயத்தால் பாழான நமக்கோ – படிக்கும்போது வெட்கமும், துக்கமும் பிறக்கிறது!
ஆரியச் சேற்றில் செந்தாமரை
ஆரியச் சேற்றில் ஒரு சீரிய செந்தாமரை பூத்தது; அது, சீனச் சீமைக்குச் சென்றுவிட்டது! பூத்த இடத்தில், மீண்டும் ஆரியச் சேறே இருக்கிறது!
புத்த மார்க்கம் காட்டிய வழி செல்ல மறந்தோம்! வெட்கம்! துக்கம்!
புத்தர், தமது அரசைத் துறந்தவர் மட்டுமல்லர்; அவரது மார்க்கமும், அவரைப் போலவே இந்தியாவை விட்டு வெளியேறிச் சீனம் சென்றுவிட்டது!
இன்று, பாரதத் தாயின் பிள்ளையான புத்தர் தந்த பொன் மொழியைச் சீனர், போதனையாகக் கொண்டு வாழ்கின்றனர் என்று கூறும் மித்திரன், அந்தப் பொன்மொழிகள், பிறந்த நாட்டிலே ஏன் நிராகரிக்கப் பட்டுவிட்டன என்பதற்குக் காரணம் கூறுமா?
காசிக்கு அருகே சாரநாத் என்ற இடம் இருக்கிறது; அழகிய பாட்டை; வழியில் பெரும் பகுதியில் ஒரு வேப்பமரம்; அதன் பக்கத்திலே ஒரு மாமரம்; உலகில் கசப்பும் – இனிப்பும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு நிற்பதைப் புத்தர் கண்டாரல்லவா?
இன்பமும் துன்பமும்
சாரநாத்தில் உள்ள புத்தர் தோட்டத்திற்குச் செல்லும் பாட்டையில், இதனை நமக்கு எடுத்துக் கூறுவதுபோல் வேம்பும் – மாவும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக நின்று காட்சி தருகின்றன!
கோட்டத்தை நெருங்குகையில், வேம்பு இல்லை – மாமரங்களே உள்ளன; சித்தார்த்தர், இன்பமும் – துன்பமும் கலந்த வாழ்க்கைப் பாதையைக் கடந்து அறிவு உதயம் பெற்றதும், துன்பம், துடைக்கப்பட்டு, ஈடில்லா இன்பம் பெற்றார் என்ற கூறுகிறார்களே – அதைச் சித்தரிப்பதுபோல, புத்தர் கோட்டத்தை அணுகும்போது பாட்டையில் இனிய மாமரங்கள் மட்டுமே உள்ளன!
புத்தர் கோட்டத்திலே, ஜப்பான் அரசு தானாகவே தந்த மணி தொங்குகிறது!
கோட்டத்தை அடுத்தாற்போல், சீனச் செல்வர் ஒருவர் புத்தர் கோட்டம் ஒன்று புதிதாக அமைத்துக் கொண்டிருக்கிறார்; அங்கு புத்த விக்கிரகம்,
சீன உருவத்துடன் காணப்படுகிறது!
சாரநாத்தில் சாந்த புத்தர், போதனை பல புரிந்தார்; ஆனால், இன்று சாரநாத், பக்தகோடிகள் தேடிச் செல்லும் இடமாக இல்லை; அதை அடுத்துள்ள காசியே புண்ணிய ஷேத்திரமாக இருக்கிறது!
பாரதத் தாய் ஈன்றாள் – பராமரிக்கவில்லை; நான் வேறு வீடு சென்றேன் என்று சாரநாத்திலுள்ள புத்த உருவம் கூறுவதுபோல் – இந்த அநீதியைக் கேட்க ஆண்மை இல்லையே உங்களுக்கு என்று கேலி செய்வது போல் – புன்னகை புரியக் கண்டேன்!
பார்ப்பனீயத்தின் வைரி
அரச குடும்பத்தினர் நீர் – புத்தரானீர்; உம்மையே இப்பாடுபடுத்திற்றே பார்ப்பனீயம் – என்னை அது என்ன செய்யுமோ? என்று புத்தரிடம் கூற எண்ணினேன்!
பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் என்னுடன் இருந்தார்; நேரமாகிவிட்டதை உணர்ந்து, தமது கைத் தடியைக் கீழே தட்டினார்; சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் விழித்துக்கொண்டேன்; காற்று அடித்துக்கொண்டிருந்தது; அந்த வெண்ணிறத்தாடி அசைந்துகொண்டிருந்தது!
மீண்டும் புத்தரை நோக்கினேன் – உம்மைப் பார்ப்பனீயம் நாடு கடத்தி இருக்காது; ஆனால் அன்று நீர் மூட்டிய புரட்சியை அடியோடு ஆரியம் ஒழித்துவிடவில்லை; இதோ பாரீர் – பார்ப்பனீயத்தின் வைரி என்று புத்தரிடம் பெரியாரைப் பற்றி நான் கூறவில்லை – என் மனத்தில் எண்ணிக்கொண்டேன்!
அதையும் அறிந்து, நன்று; நீதி நின்று வெல்லும் – ஆனால், நிச்சயம் வெல்லும் என்று என்னை நோக்கிச் சாரநாத் புத்தர் கூறியது போலிருந்தது – அந்தப் புன்னகை!
(திராவிடநாடு – 15.03.1942)
புத்தரை நோக்கினேன் – உம்மைப் பார்ப்பனீயம் நாடு கடத்தி இருக்காது;
ஆனால் அன்று நீர் மூட்டிய புரட்சியை அடியோடு ஆரியம் ஒழித்துவிடவில்லை;
இதோ பாரீர் – பார்ப்பனீயத்தின் வைரி என்று புத்தரிடம் பெரியாரைப் பற்றி
நான் கூறவில்லை – என் மனத்தில் எண்ணிக்கொண்டேன்