தனியார் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தால் உரிமையாளரே இழப்பீடு தர வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு

viduthalai
2 Min Read

சென்னை,பிப்.3- தனியார் பயன்படுத்தும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பலமுறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.

இதையடுத்து, எனது வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டினேன். இந்த கழிவுநீர் தொட்டி நிறைந்துவிட்டால் கழிவுகளை அகற்றுவதற்காக மாநகராட்சியிடம் கோரிக்கை வைப்போம். மாநகராட்சி ஊழியர்களும் கழிவு நீரை அகற்று வார்கள்.

அந்த வகையில் கடந்த 2013 செம்டம்பர் 30ம் தேதி எனது வீட்டின் கழிவுநீர் தொட்டி நிறைந்ததால் மாநகராட்சியை தொடர்பு கொண்டேன். இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் 3ஆவது மண்டல ஊழியர்கள் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முனுசாமி என்ற ஊழியர் கழிவுநீர் தொட்டியில் மயங்கியுள்ளார். மற்ற ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், முனுசாமியை காப்பாற்ற முடியவில்லை.

முனுசாமி தொட்டியில் இருந்த வாயு தாக்கி இறந்துள்ளார். இதையடுத்து, பணியில் இருந்து எனக்கு தகவல் வந்தது. உடனடியாக நான் வீட்டுக்கு சென்று உடனடியாக 3ஆவது மண்டல அதிகாரிக்கு தகவல் கொடுத்தேன்.

மேலும், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடாக கொடுத்தேன். இந்த நிலையில், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குமாறு சென்னை மாநகராட்சி 3ஆவது மண்டல அதிகாரி எனக்கு தாக்கீது அனுப்பியுள்ளார்.
எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப் படாததால்தான் கழிவுநீர் தொட்டி கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு கெட்ட வாய்ப்பானது. அதனால்தான் எனது சொந்த பணத்தை அவரது மனைவியிடம் கொடுத்தேன்.

இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி தாக்கீது அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரியின் தாக்கீதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

பொறுப்பு

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில் வழக்குரைஞர்
ஏ.சி.மணிபாரதி ஆஜராகி, தனியார் கழிவுநீர் தொட்டியில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும்.

மாநகராட்சி அந்த தொகையை தந்துவிட்டால் வீட்டு உரிமையாளர் அந்த தொகையை மாநகராட்சியிடம் தர வேண்டும். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

உரிய விதிகளின்…

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகி யுள்ளார். உரிய விதிகளின் அடிப் படையில்தான் மாநகராட்சி தாக்கீது அனுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்துள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *