அண்ணா நினைவு நாள் செய்தி! அண்ணா உடலால் மறைந்தார்; தொண்டால் நம்மிடையே வாழ்கிறார்!

Viduthalai
2 Min Read

இன்று (3.2.2025) அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள்!
இது ஒரு வரலாற்றுக் குறிப்பே தவிர, அன்று மட்டும்தான் அண்ணாவின் ஆற்றல்கள் – சாதனைகள் – சிறப்புகளைக் கூறி, மற்ற நாள்களில் வாளா இருப்பது என்பதல்ல.
திராவிடர் எழுச்சியை பறைசாற்றுவன!
திராவிடர் இயக்கம் பழைய நீதிக்கட்சியாகி, பிறகு வளர்ந்து, மக்கள் இயக்கமாகி மாற்றப்பட்ட பிறகும், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பல வகையில் பெருகி, இரட்டைக் குழல் துப்பாக்கியாகி, இன்றும் ‘‘மானமும், அறிவும்’’ வளர்ச்சி பெற்ற சமுதாயமாக திராவிடர் சமுதாயம் முன்னேறி வருவதற்கு அய்யாவுடன் பணிபுரிந்து, பட்டிதொட்டியெல்லாம் பரப்புரை செய்தும், எழுத்து என்ற கருத்தாயுதத்தால் ஆரியத்தின் அடிவேரை ஆட்டி அசைத்திட்ட அண்ணாவின் ஆற்றல்கள்தான் 56 ஆண்டுகளாக ஓர் அரை நூற்றாண்டு திராவிடர் இயக்கம் அடிக்கட்டுமானமும், அதன்மீது எழுந்த பெரும் கட்டுமானமாக திராவிடர் எழுச்சியை பறைசாற்றுவன!

‘‘அண்ணா மறைந்தார்;
அண்ணா வாழ்க!’’
அறிஞர் அண்ணா மறைந்த செய்தி கேட்டு, அறிவு ஆசான் தந்தை ெபரியார் சிறப்பான தலைப்பிட்டு தந்தை, தனயனின் துயர் துடைத்து பாராட்டி வழிய னுப்பும் வேளையில்,
‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!’’ என்று தலைப்பிட்டு எழுதிய அறிக்கை ஒன்றே அய்யாவின் முன்னோக்கை எதிர்காலத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழும்.
திராவிட இயக்கம் ஒரு கண்ணாடிப் பேழையல்ல; மாறாக கடும் உழைப்பால், தொண்டால், தியாகத்தால் எழுப்பப்பட்ட கற்கோட்டை.

சரித்திரம் படைத்த, படைக்கும் சாதனைகள் நாளும் ஊற்றாகி
உலகை உலா வருகின்றன!
தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அவர்களது தொடர்ச்சியான ஆட்சியை மீட்சியாக காத்து, வளர்த்த மானமிகு சுயமரியாதைக்காரர் கலை ஞரும், அவருக்குப் பின்னால் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் உறுதியான மேல்தளம் அமைத்து, திக்கெட்டும் புகழ்பரப்பும் ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், வலிவுடனும், பொலிவுடனும் திராவிடர் இயக்கத்தை எதிர்நீச்சலடித்து சளைக்காது செய்து சரித்திரம் படைத்த, படைக்கும் சாதனைகள் நாளும் ஊற்றாகி உலகை உலா வருகின்றன!
ஆம்! ‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!’’ என்பதன் பொருள் மக்கள் மனதில் காலத்தை வென்று என்றும் நிறைந்தார் என்பதாகும்.
அண்ணா என்ற கேப்டனின் கப்பல், எத்தனை புயல் வந்தாலும், பெரியார் என்ற கலங்கரை வெளிச்சத்தின் துணையோடு, கரை நோக்கிய அதன் பயணத்தை நிச்சயம் வெற்றிகரமாக நடத்தும் என்பதால், மதவெறி, ஜாதி வெறி, ஆரிய மாயையை வென்று இலக்கை அடைவது உறுதி! உறுதி!!
அண்ணா வாழ்க! வாழ்கவே!

சென்னை தலைவர்,
3.2.2025 திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *