சிவகங்கை, பிப். 2- சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி செட்டி ஊருணி கரை இடையே தரை மேற்பரப்பில் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வேணாடு சேரர் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கையில் தொல்நடைக்குழு நிறுவனர் காளிராஜா கூறியதாவது:
சங்க காலம் தொடங்கி 16ஆம் நுாற்றாண்டு வரை இன்றைய தமிழ்நாடு பகுதிகளில் சேரர் ஆட்சி நடந்தது. இன்றைய கரூரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்துள்ளனர். 12 முதல் 16ஆம் நுாற்றாண்டு வரை கன்னியாகுமரியையும் சேர்த்து வேணாடு அமைந்தது. வேணாட்டை ஆட்சி செய்தவர்கள் பல்வேறுபட்ட காசுகளை வெளியிட்டுள்ளனர். வீர கேரளன், கோதைரவி உதயமார்த்தாண்டன் போன்ற அரசர்கள் நாகரி எழுத்துப்பொறித்த காசுகளை வெளியிட்டனர். பூதல வீரராமன், பூதல, சேரகுலராமன் ராமாராஜா போன்ற தமிழ் எழுத்துப்பொறிப்பு உள்ள காசுகளும் கிடைக்கப்பட்டுள்ளன.
மனித உருவம்
ச என்ற ஓரெழுத்து மட்டுமே பொறிக்கப்பட்ட காசுகளும், மா, செ என்ற ஓரெழுத்துகள் மட்டும் பொறிக்கப்பட்ட காசுகளும் இவர்களால் வெளியிடப்பட்டுள்ளன. சிவகங்கையில் கிடைக்கப்பெற்ற காசின் இரண்டு பக்கங்களிலும் மனித உருவம் காணப்படுகிறது. ஒரு பக்கம் நின்ற நிலையில் மனித உருவம் காணப்படுகிறது. வலது கை பக்கத்தில் ஆறு புள்ளிகளும் இடதுகை பக்கத்தில் சில புள்ளிகளும் காணப்படுகின்றன.
மற்றொரு பக்கத்தில் அமர்ந்த நிலையில் மனித உருவமும் இடது பக்கத்தில் ச என்ற தமிழ் எழுத்தும் கீழ்பகுதியில் பத்து புள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. நாணயம் செம்பால் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 2.5 கிராம் அளவுள்ளதாக உள்ளது. வேணாட்டு சேரர்கள் 12 முதல் 16ஆம் நுாற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். மன்னர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள காசுகளைத் தவிர மற்ற காசுகளில் மன்னர் பெயர் காலம் தெரியவில்லை. இவை வேணாடு சேரர் காசு என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறது.
நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளிலும் இவ்வகை காசுகள் கிடைத்துள்ளன. இவ்வகை காசுகள் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. சேர நாட்டு பகுதியில் இருந்து பல நுாற்றாண்டுகளுக்கு முன் வணிகத்தொடர்பாக இக்காசு இப்பகுதிக்கு வந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.