பெரியார் குறித்த விவாதங்கள் தீவிரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பெரியாரை ஆய்வுநோக்கில் உற்றுநோக்கும் ஒரு வாய்ப்பைப் பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது.
பெரியார் பல்கலைக்கழகத்தில், ‘தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இருக்கை’, ‘பேரறிஞர் அண்ணா இருக்கை’, ‘முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு’ மய்யம் ஆகியவற்றின் சார்பில், ‘திராவிட இலக்கியம் – இதழியல்’ என்ற தலைப்பில், தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களிடமிருந்து திராவிட மானுடவியல், திராவிடத் திரைக்கலை, திராவிட இலக்கியக்கலை, திராவிடப் பேச்சுக்கலை, திராவிட நாடகக்கலை, திராவிட இதழியல் உள்ளிட்ட 20 பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்பட்டுள்ளன.
விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் ஆய்வுச் சுருக்கத்தையும், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் முழு கட்டுரையையும் [email protected] முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கருத்தரங்கப் பதிவுக் கட்டணமாக ஆய்வறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ரூ.1,500, ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ரூ.1,000, முதுநிலை மாணவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் குறித்த தகவல்கள் 05.03.2025-க்குள் தெரிவிக்கப்படவுள்ளன. 2025 மார்ச் நான்காவது வாரத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கிற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்று பெரியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலதிக விவரங்களுக்கு முனைவர் இரா.சுப்பிரமணி, கவுரவ விரிவுரையாளர் முனைவர் இரா.சிலம்பரசன் ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.
– நன்றி: முரசொலி, 1.2.2025