தீட்சிதர் வீட்டில்….! – அறிஞர் அண்ணா

Viduthalai
14 Min Read

அறிஞர் அண்ணா நினைவு நாள் சிந்தனை – பிப். 3

 

1942இல் ‘திராவிட நாடு’ பத்திரிகை துவங்கிய போது 83 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை – மீண்டும் வெளியிடுகிறோம். கருத்தூன்றிப் படியுங்கள் – பரப்புங்கள்.
– ஆசிரியர்

தீட்சிதர் வீட்டிலே ஆதித் திராவிடருக்குக் கலியாணம்!
நிசமாகவா? எங்கே? எப்பொழுது நடந்தது? என்று என்னைக் கேட்காதீர்கள். தோழர்களே! எனக்குத் தீட்சிதர் வீட்டு வைபவம் எதுவும் தெரியாது. சந்தர்ப்பம் ஏற்பட்டதில்லை. விரும்பினதுமில்லை. பலப்பல கேள்விப் பட்டிருக்கிறேன். நெற்றியில் விபூதி விளங்க மார்பிலே நூலாட, மனத்தில் மமதையாட, தீட்சிதத் திருக்கூட்டம் தெருவில் நடக்கக் கண்டிருக்கிறேன். மேனியின் பளபளப்பு, வாழ்க்கையில் உள்ள சுகத்தைச் சித்திரிப்பதைக் கண்டிருக்கிறேன். முல்லை முறுவலும் திருவிழித் திருகலும், கொண்ட தீட்சிதத் திருமதிகளைக் கண்டுள்ளேன். அவர் களின் ஆடை அணி அலங்காராதிகள், கண்காட்சியாக இருக்கக் கண்டிருக்கிறேன். வேறொன்றுமறியேன் பராபரமே! தீட்சிதர் வீட்டுக்குள் உமாநாதர் இடபாருடராக வருகிறாரோ, மயில் மீதேறி மால்மருகன் வருகிறாரோ, பாரிஸ் மைனர் மோட்டாரில் மருகர் வருகிறாரோ, யாதோ அறிகிலேன். சூதினால் அவர்கள் நிம்மதியான வாழ்க்கையை நடத்திக்கொண்டு நேத்திரானந்த ரூபர்களாக இருக்கக் கண்டுள்ளேன். யாரின் கடைக்கண் கடாட்சமோ யாரறிவார்!

அவை தவிர, வேறு வைபவம் என்ன ஆங்குளதென் பதை நானறியேன். ஆகவே தீட்சிதர் வீட்டிலே ஆதித்திரா விடருக்குக் கலியாணம் என்று நான் சொன்னதும் எங்கே நடந்ததென்று என்னைக் கேட்காதீர்கள். அது என் வாசகமல்ல!

கட்சிப்பணி
தோழர் எஸ்.வி. லிங்கம் தெரியும் உங்களுக்கு, காலமும் கட்சிப் பணியாற்றியதால் உண்டான கஷ்டமும் சேர்ந்து கரியநிறத்தையும், கவலை உள்ளத்தையும் காலில் சக்கரத்தையும், தரப்பெற்று, தமிழகத்தில் மாநாடு விழா நாள் அறிக்கை வெளியிடுதல் முதலியவற்றைச் செய்வதிலே தனிருசியுடன் விளங்கும் தோழர் – அவர் சொன்னார் தீட்சிதர் வீட்டிலே ஆதித்திராவிடருக்கு கலியாணம் என்று!

தோழர் லிங்கம் பேச்சு அலாதியானது! சரளமான ஹாஸ்யம், சமயத்திலே வீரம் சுருக்கென்று தைக்கும் சொல்லம்பு, இவற்றுடன் அபூர்வமான வியாக்யானங்களைச் சில சமயம் கூறுவார் தோழர் லிங்கம். அவருடைய ஹாஸ்யம், சிரிப்பை வர வைக்கவேண்டுமென்பதற்காகச் சிலர் சொற்றொடர்களை வைத்தடுக்கிக் காட்டுகிறார்களே, அது போன்றதல்ல. திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைக்கூறி, அதிலே உள்ள ஹாஸ்யத்தைப் பொதுமக்கள் கண்டுகொள்ள வில்லையே என்று கவலைப்படும் பேச்சல்ல. சிரிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே, சிரமப்பட்டு சில கூற முற்படுபவரல்லர் லிங்கம். சகசமாக, இயற்கையாக வரும் அந்த ஹாஸ்யம், சினிமாவிலே தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் எங்ஙனம் ஹாஸ்யத்தை அரியமுறையில் வெளிப்படுத்தக் காண்கிறோமோ, அதுபோல் தோழர் லிங்கம். அவரது பேச்சின் ருசி வரவரக் குறைகிறதோ என்று அஞ்சவேண்டிவருகிறது. அதற்குக் காரணம் அவரல்லவே. இயக்கம் அவரைச் சரியாகப் பயன்படுத்தாததுதானே என்பதை எண்ணும்போது வருத்தமும் பிறக்கிறது. நமக்கோ, அஞ்சவும் வருந்தவும் முடிகிறதே தவிர, ஆறுதல் கூறவோ, குறைகளையவோ, சக்தியில்லை மனம் இருக்கிறது மார்க்கம் இல்லை!

சுயமரியாதை மாநாடு
சிதம்பரத்தில் 11, 12ஆம் தேதிகளில் ஜஸ்டிஸ் சுயமரியாதை மாநாடுகள் மிக விமரிசையாக நடைபெற்றன. வந்தனம் கூற வந்தார் லிங்கம். மாநாட்டின் அருமை பெருமைகளைச் சீர்சிறப்புகளை, முக்கியத்துவத்தை விளக்க அவர் முக்கால்மணி பேச முற்படவில்லை. மூதுரை, சிறுகதை ஓதவில்லை. நாலே வார்த்தையில் நகைச்சுவையும் பொருட்சுவையும் அடைத்து வீசினார், மாநாட்டிலே.

சிதம்பரத்திலே, ஜஸ்டிஸ் சுயமரியாதை மாநாடு நடப்பதென்றால், அது தீட்சிதர் வீட்டிலே ஆதித்திரா விடருக்குக் கலியாணம் நடப்பதுபோன்றது என்றார். ஆனந்தமும் ஹாஸ்யமும் அழகிய கருத்தும் அந்த ஒரு டசன் பதங்களிலே எவ்வளவு சமணீயமாகப் பொதிந்துள்ளன பாருங்கள்! அய்ந்தாறு நிமிடங்களாயின கரகோஷம் அடங்க!!

இத்தகைய முடிவுரையின், முன்னுரை, இலேசானதல்ல!
இரண்டாண்டுகளுக்கு முன்பு, வடாற்காட்டிலே வடசேரியிலே, வாலிபவீரர் தோழர் சபாரத்தினம் நடாத்திய ஜஸ்டிஸ் மாநாட்டிலே தலைமை வகித்துவிட்டுப்பிறகு, வெளிக்கிளம்பாமல் இருந்து வந்த தோழர் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்களின் தலைமையிலே ஜஸ்டிஸ் மாநாடு நடைபெற்றது. என்றால் அதில் சர்.கிரிப்சிடம் பேசிவிட்டு வந்த நமது இயக்கத் தூது கோஷ்டியில் ஒருவரான பாண்டியனாரின் தலைமையில், வைதிகக் கோட்டையிலே மேற்படி மாநாடு நடப்பதென்றால், இலேசான காரியமென்று கூற முடியுமா!

தில்லை மூவாயிரவர் தலத்திலே திராவிடர் அய்யாயி ரவருக்கு மேலாகவே கூடி, ஆரியவேதமோதிடும் வீதிகளிலே தமிழ் வீரமுழக்கம் செய்துகொண்டு, நடராசர் நடனமாடும் பதியிலே நாட்டுத் தலைவர்கள் பாட்டு மொழியிலேபரணியுரைத்தனரெனில் அஃது இலேசானதாகுமா!

சிதம்பரம் மாநாடு கூடும் அத்தினம் காலைவரையிலே காங்கிரஸ் உலகமே களிப்பெனும் கடலிலே மூழ்கிக்கிடந்தது பிற்பகலில்தான், அக்கடலிலே செய்திச்சுறா கிளம்பி, அவர்களைச் சிதைத்தது பத்திரிகைகளிலே முழுப்பக்க முந்திரிக் கொட்டை எழுத்தலங்காரங்களென்ன, முறுவலும் கண்சிமிட்டலுமென்ன, முகமனும் முரசுமெவ்வளவு, அடடா, ஆனந்தத் தாண்டவமாடினர் காங்கிரசார். . மானாட, மழுவாட, மங்கை சிவகாமியாட என்று பாடுவார்களே அதுபோல் டில்லி நிருபர்கூற, மித்திரன் இந்து எடுத்தோத, அக்கிரகாரம், ஒலிபரப்ப, அடியார்கூட்டம் தமுக்கடிக்க, அற்புதமான சுயராச்யம் வந்துவிட்டது கிரிப்ஸ், நாம் கோரிய வரத்தைக் கொடுத்தேவிட்டார் என்ற மங்களம் பாடினர் காங்கிரசார். ஜவஹர் ராணுவமந்திரி! ஆச்சாரியார் அடுத்த மந்திரி! மாகாணங்களிலே மந்திரி சபைகள்! இனி ஆட்சி காங்கிரசாரிடந்தான்! என்று கூறினர். ஆடினர். இனிமேல் லீகும், ஜஸ்டிசும் என்னசெய்யும் என்று இரங்கினவர் போல் கேட்டனர். தலையங்கங்கள்கூட வெளிவந்துவிட்டன.

அக்ரகாரத்தின் கேலி
இந்தா விபீஷணா இலங்காபுரி ராச்யம், இந்தா, இந்தா, இந்தா! என்று கிரிப்ஸ்துரை, காங்கிரசாரிடம் பாடி, முடிசூட்டிவிட்டார் என்று முற்றுமுணர்ந்தவரெனக் கூறிடும் முத்தண்ணாக்கள் மோனம் பாடினர். இந்நிலையில், சிதம்பரம் ஜஸ்டிஸ் மாநாடு ஆரம்பமாயிற்று.

இதுகளுக்கு மாநாடு ஒரு கேடாக்கும். கிரிப்ஸ் சுயராச்யம் கொடுத்தான பிறகு இதுகள் கூச்சலிட்டு வறளுவானேன் என்று அக்கிரகாரம் கேலிசெய்தது. எல்லாம் எதுவரையில்? பிற்பகல் 2 மணிவரை! 2 மணிக்கு வந்தது இழவோலை. அமங்கலகீதம், ஒப்பாரி! கிரிப்ஸ்திட்டம் கை கூடவில்லை துரை கப்பலேற வேண்டியதுதான் பாக்கி, என்று ரேடியோ தெரிவித்தது மோகனம், முகாரியாகி, ஆனந்தபாஷ்யம் கண்ணீராகி, காங்கிரஸ்காரர் களிப்பை இழந்து, தலை கவிழ்ந்தது. எதிரேவரும் ஜஸ்டிஸ்காரரைக் காணவெட்கி, வீடு சென்ற விசாரத்துடன் வீழ்ந்துவிட்டனர். ஜவஹர், ஆச்சாரியார் ஆகியோருக்கு ராணுவ உடை போட்டு, இவர்கள் மனத்திலே சித்தரித்த உருவங்கள் அழிக்கப்பட்டுப் போய்விட்டன. சிரித்த முகத்தோடு வெளி வந்து கொண்டிருந்த கிரிப்சின் படங்கள், சிந்தனையில் ஈடுபட்ட முகமுடைய போட்டோவாக மாறி வெளிவந்துவிட்டன.
சுற்றிவந்த சித்தப்பா – சோறிருந்தால் போடு அப்பா என்றானாம் ஒரு ஆண்டி மற்றோர் ஆண்டியைப் பார்த்து. வந்த ஆண்டி சொன்னானாம், சுற்றிவந்தேன் முத்தப்பா சூனியங் கண்டேன், போடாப்பா என்று சோகித்துக் கூறினானாம், அந்த ஆண்டி. உலகம் கெட்டே போச்சப்பா! உறங்குவதே மேல் நடந்திடப்பா என்றிருவரும கூறிக்கொண்டு, சாவடி சென்றனராம். அதுபோல காங்கிரஸ் தலைவர்கள், கிரிப்சின் பங்களாவை, வலமாகவும் இடமாகவும் சுற்றி, வாழ்த்தி வரங்கேட்பதுகண்ட வாலர்கள், இனி அடிக்கும் பிரைஸ் என்று எண்ணிப் பூரித்தனர்., கிரிப்ஸ் தந்ததிலே தமக்கென்ன கிடைக்குமெனக் கேட்க, ஆவலுடன் இருக்கும் வேளையில், வெறுங்கையுடனும் விம்மலுடனும், வீடுவந்து சேர்ந்துவிட்டனர் காங்கிரஸ் தலைவர்கள். அலுத்த ஆட்டியன் கதை போலாயிற்று அவர்கள் விஷயம் சேச்சே! இந்தப் பிரிட்டீஷார் ரொம்ப கெட்டவர்கள்! ஏன் இப்படி ஆசையைக் கிளப்பவேண்டும் பிறகேன், அவர்களின் மனமுடையச் செய்யவேண்டும். பரிதாபமாக இல்லையா! அதிலும் இந்த சர். சிரிப்ஸ், இளையாளிடம் கொஞ்சும் நரைத் தலையன் போல் காங்கிரசாரிடம் கொஞ்சினார். அவர் தமது சொக்குப்பொடியில் சிக்கிவிட்டார் என்ற காங்கிரசார் நம்பிவிட்டனர். கடைசி நேரத்தில் கைவிட்டாரே அவர். இது எவ்வளவு பரிதாபம் பாருங்கள்!

பெரியார் வந்தார்
எம்பிரான்கள் ஏமாந்தது இரண்டு மணிக்கு – நாம் கூடியதோ காலையிலே. அந்த நேரம், வருகிறது வரிசை, வாரி முடித்துக்கொள் சடையை என்று காங்கிரசார் தமது மனமெனும் மங்கைக்குக் கூறிக்கொண்டிருந்த சமயம். இரண்டுமணி நேர ஊர்வலம், தலைவர் பாண்டியனின் சட்டையை ஈரமாக்கிவிட்டது. மேலே இருந்த சாயம்போன சாயத்துணியை இழுத்துப் போர்த்துக்கொண்டு, பாண்டியனார், கிரிப்சிடம் சென்றதில் நமக்கொன்றும் அனுகூலமேற்படவில்லை என்று தமது தலைமையுரையிலே கூறிவிட்டார். ஆனந்தம் அங்கே! விசனம் இங்கே!! வெற்றி, நூலணிவோர்க்கு! வீழ்ச்சி நம்மவருக்கு!! என்று மாநாட்டில் கூடிய நமது தோழர்கள் எண்ணிக்கொண்டனர். இத்தகைய சுற்றுச்சார்பு, மாநாட்டின் சோபிதத்தையோ சுறுசுறுப்பையோ கெடுக்கவில்லை. வெளி ஜில்லாக்களிலிருந்ததும் பல தோழர் கள் வந்திருந்தனர். சோர்வடைய ஒட்டாதபடி, இனிய கீதங்கள் கிளம்பின. மாநாட்டைத் திறக்க வரவேண்டிய பெரியார் வரத் தாமதமாகவே, வாலிபத் தோழர், இஸ்லாமிய ஏறு தோழர் திருப்பூர் மொய்துன், மாநாட்டைத் திறந்துவைத்தார். ஆதிலட்சுமி அம்மையார் கொடிஏற்றுவித்து, குனிந்த உள்ளத்தையும் நிமிரச்செய்தார்! பாண்டியனார், தமது தலைமையுரையில் பல கூறினார், பரணியே அது!
பெரியாரும் வந்துவிட்டார். வேகமாக நுழைந்தால் கொட்டகையில், தாகத்தோடிருந்த தோழர்களுக்குச் சொற்பொழிவுச் சாற்றைத் தந்தார். பருகினர், பூரித்தனர்.

எது வந்தாலென்ன! எது போனாலென்ன!
மெய்க்காதல் ஒன்றிருக்கும்போது
என்று ஓர் பாடல் உண்டு, சினிமாவில். அதுபோல், கிரிப்ஸ் எதைத் தந்தாலென்ன, தாராமற் போனாலென்ன, தடிதாங்கிய தலைவர் இருக்கும்போது நமக்கென்ன குறை என்று தோழர்கள் எண்ணி மகிழ்ந்து, கைதட்டிக் களித்து, காவல்புரிவோம் திராவிடக் கோட்டையை என்று உறுதி உரைத்திருந்தனர்.

கிரிப்சால் பயன் ஏற்படவில்லை! காங்கிரசார் கோரியது அவர்களுக்கு கிடைத்துவிட்டது, என்ற நிலையிலும், நம்மவர் நெஞ்சில் இவ்வளவு ஆர்வம் இருக்கிறதென்றால், வெற்றியுங் கண்டால், எங்ஙனமிருக்கும் அவர் தம் உணர்ச்சி என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். எதிர்கால வாழ்க்கையை இன்னொருவர் சித்தரிப்பானேன், நாமிருக்கையில், பயமேன்! என்று உள்ளத்தில் திடங் கொண்ட தோள் வலிமைத் தோழர்களை நமது இயக்கம் பெற்றிருக்கிறது.
1000 மைல்களுக்கு அப்பால், டில்லி நகரிலே ஆரியர்கள், தமது இயல்பை, குரோதத்தை, விஷமத்தை மாற்றிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்பது, என்ற தலைமையுரையில் வெளிப்பட்டது. பாண்டியனார் கூறினார். அவ்வளவு தொலைவிலே வடநாட்டார் என்ற பாகுபாடு மட்டுமே இருக்கும் என்று எண்ணினேன். ஆனால், அங்கே இருந்த பார்ப்பனருக்கு, ஆரிய உணர்ச்சியும் அகம்பாவமுமே இருக்கக் கண்டேன் என்றுரைத்தார்.

சர்.கிரிப்சின் மாளிகையில், போட்டோக்காரர்கள் தங்கி யிருந்தனராம். கிரிப்சைக் காண யார் வந்தாலும், உடனே போட்டோ எடுத்துப் பத்திரிகைகளுக்கனுப்பும் பணி அவர் களுடையது. சிரிப்பு, கைகுலுக்குதல், காரில் ஏறுதல், இறங்குதல், முதலிய பலகாட்சிகளைப் படம் பிடித்துவந்த அந்த போட்டாக்காரர்கள், பெரியாரும் அவரது சகாக்களும், மாளிகைக்குள் நுழைந்ததும் ஓடிவந்தனராம்! கண்டனராம், உடனே படமெடுக்காது, பழையபடி தமது தங்குமிடத்துக்கே சென்றுவிட்டனராம்.

ஆரிய மனப்போக்கு
இதனைப் பாண்டியனார் கூறினார். ஆத்திரத்தால் தோழர்கள் துள்ளினர் எவ்வளவு குரோத மனப்பான்மை பாருங்கள் அந்த போட்டோக் காரர்களுக்கு! ஏன் அது பிறந்தது எனில் அவர்கள் பரப்பிரம்ம சொரூபிகள், பார்ப் பனர்கள், ஆரியர்கள். ஆகவே, நமது தலைவர்களின் உருவைக்கண்டு உதாசீனம் செய்யத் துணிந்தனர். இத்தகைய குரூரமான மனப்பான்மை ஆரியருக்கிருப்பதை, நமது கோடரிகள், கோணங்கிகள், மரமண்டைகள், தெரிந்து கொள்ளாது இருக்கின்றனவே.
இதனை பாண்டியனார் கூறினார். ஆத்திரத்தால் தோழர்கள் துள்ளினர் எவ்வளவு குரோத மனப்பான்மை பாருங்கள் அந்த போட்டோக்காரர்களுக்கு! ஏன் அது பிறந்தது எனில் அவர்கள் பரப்பிரம்ம சொரூபிகள், பார்ப்பனர்கள், ஆரியர்கள், ஆகவே, நமது தலைவர்களின் உருவைக்கண்டு உதாசீனம் செய்யத் துணிந்தனர். இத்தகைய குரூரமான மனப்பான்மை ஆரியருக்கிருப்பதை, நமது கோடரிகள், கோணங்கிகள், மரமண்டைகள், தெரிந்துகொள்ளாது இருக்கின்றனவே.
பெரியார் தமது சொற்பொழிவிலே இதுபற்றி வேடிக்கை யாகக் கூறினார். எனது தாடியையும், பாண்டியனின் கரிய நிறத்தையுங் கண்டதும், பறந்தேவிட்டனர், அந்தப் பார்ப்பனர்கள் என்றார்.

தலைவரே தாம் கூறியதுகேட்டு, நாங்கள் சிரிக்க மறுக்கிறோம். சீற்றம் எம்மைப் பிரியமறுக்கிறது. அவர்களின் இறுமாப்பின் இடுப்பொடிவது எந்நாளோ என்றே ஏங்குகிறோம். எவ்வளவு துவேஷமிருக்கிறது அந்த சவுண்டிகளுக்கு! படமெடுக்காது ஓடிய அந்தப் பார்ப்பனர்கள், கூளம் பறப்பதுபோல் தமிழரின் படைதிரண்டால், திக்கெட்டும் பறந்து போவாரல்லவா! குப்பைமேட்டுக்குப் போய்ச் சேரவேண்டியதைக் கூடத்திலே வைத்திருந்தால், வீட்டுக்கு அழகாகுமா! அதுபோல், பிச்சைபுகவேண்டிய நச்சுக் கூட்டத்தை நாடாளும் இடத்திலே அண்டவிட்டதால், இந்த அனர்த்தமும் வரும், இதற்கு மேலும் வரும். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு வண்டுருட்டும் பக்கமே நாடிச்செல்லுமாம். அதுபோல், இந்தச் சோற்றுக்காகச் சுற்றித்திரியும் சொரூபிகளை, டில்லி மாளிகையில் வைத்தாலும், உடம்போடு உண்டான குணம் மாறுமா! பேய்ச்சுரைக்குத் தேன்பெய்தும் பயனென்ன!! அதுபோல் ஆரியருக்கு நாம் எதுசெய்து என்ன? அவர்கள், சமயத்தில் நமது இனத்தைக் கெடுக்கவே துணிவர் என்று மாநாட்டில் இருந்த தோழர்களில் பலர் கொதித்துக் கூறினர்.

திராவிட நாடு
ஆரிய ஏடுகள் என்ன செய்தும் ஆரியத் தலைவர்கள் காரியக் கூத்தாடியும், கண்டபலன் சூன்யமே என்பது பிற்பகல் விளங்கிற்று. கிரிப்ஸ் திட்டம் தோற்றுப்போனது கேட்டு இம்மாநாடு வருந்தவில்லை என்ற துர்மானத்தைப் பெரியார் பிரேரேபிக்க, தோழர் அண்ணாத்துரை ஆதரித்துப் பேசிய பிறகு, திராவிட நாட்டுப் படத்தைத் திறந்துவைத்தார்.
திராவிட நாடு தனிநாடாக அமைந்துவிட்டால், தீட்சிதர் வீட்டுக்கு இன்றுள்ள மகிமையும், ஆரியத் திருக்கூட்டத்துக்குள்ள திமிரும், அக்கிரகாரத்துக்குள்ள ஆணவமும் இருக்க முடியுமா? போரில் சிக்கிக்கொண்ட தமிழகத்திலே, இன்று காணப்படும் கோழைத்தனம் இருக்குமா? எதிரிக்கு உளவுகூறும் உலுத்தர்களாம், வம்பர்களும் விலுவாயர்களும், பீதி கிளப்பும் பேதையரும், இருக்கமுடியுமா? போர் புரளும் நேரத்தில் அரசியல் பேரமாநடக்கும்! கும்பாபிஷேகமும் கோயில் குதர்க்கமுமா இருக்கும்! படை ஒலியன்றோ கேட்கும்! பட்டாளத்தில் சேர, இளையோரும், அவரை இடித்துத் தள்ளிக் கொண்டு முன்வரிசை எமக்கு என்றுரைக்கும் முதியோரும், படைக் கலத்தை எடுத்துத தந்திடும் பதுமையரும், நிரம்பியவோர் நற்காட்சியன்றோ இங்கிருக்கும். காட்டரணும் கடலரணும் பதியரணும் இருப்பதுடன், மனை அரணும் மன அரணும் இருந்திருக்கும். இன்றுள்ள விதியும், சதியும், இருக்குமா! சிங்கங்கள் கிளம்பிவிட்டால், நரிக்கூட்டம் நிற்குமா! புலிபாய்கையில் பூனையா தடுக்கும்!திராவிடர் கிளம்பிடின், ஆரியரோ ஆர்ப்பரிப்பர்! திராவிடநாடு ஆரியரின் வீடாக இருத்தலால், நமது தலைவர்கள், வடநாடு சென்ற காலையும், செள்ளையர் முன்னிலையிலும் அவமதிப்பா, ஆரியர்களால் நடத்தப்படுகின்றனர். அதனை நமது தலைவர்கள் நமக்குக் கூறுகின்றனர், நாம் கேட்கிறோம், நமது செவிகள் அறுக்கப்படவில்லை!

வெஞ்சமர்
தமிழரைத் துச்சமாகப் பேசினர் கனகவிசயன் எனும் ஆரிய அரசர், என்று பாணர் கூறக்கேட்ட சேரன் செங்குட்டுவன் படைகடலெனத் திரட்டி மலை பல கடந்து, மாநதிகள் தாண்டி, காடுபலகடந்து வீடு மறந்து வெஞ்சமர் புரிந்து, ஆரிய அரசரை முறியடித்து அவர் தம் தலையிலே கல்லைச் சுமந்து வரச்செய்தான், என்றுரைக்கும் சிலப்பதிகாரத்தைச் சுமை தாங்கிபோல் சுமந்துகொண்டிருக்கும் நாம், டில்லி நகரில் ஆரியர் திராவிடத் தலைவர்களை, ஒரு பெரியாரை, ஒரு சிற்றரசரை, மற்றோர் மிராசுதாரை, மற்றோர் மலை காடு மண்டலம் படைத்த மன்னர் வழிவந்தோரை மதியாது நடந்த மமதையைக் கேட்கிறோம். இனி நமகேன் சிலப்பதிகாரம்! செந்தமிழர் எனும் பெயர் ஏன்?

இவை போன்ற இன்னலும் இழுக்கும் இனியும் நமக்கில்லமற்போக வேண்டுமாயின், சிதம்பர மாநாட்டிலும், அதுபோன்ற மாநாடுகளிலும் நாம் கூடுவதும் பேசுவதும், பிரிவதுமாக இருக்கும் முறை மாறி, கட்டுப்பாடுண்டாக்கி, கருமமே கண்ணாகி, கோட்டைகள், கட்டும் பணியில் இறங்கியாகவேண்டும். இல்லையேல் வாழ்வு இல்லை. தோழர்கள் கே.கே.நீலமேகம், ஏ,கே.தங்கவேலர், கே.ஆர்.ஜி.பால், நீடாமங்கலம் ஆறுமுகம், மன்னார்குடி பாபு செட்டியார், வேலூர் சின்னராஜி, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலப்பலர் பேசினர் மாநாட்டில். தீப்பொறி பறந்தன! தேன் மொழி வழிந்தது பயன் என்ன? தென்னாற்காட்டில் இந்த ஆண்டு முடிவதற்குள் எத்தனை ஆயிரம் அங்கத்தினர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேருகின்றனர். என்பதைப் பொறுத் திருக்கிறது, பயன். வரவேற்புக் கழகத்தலைவர் கோபாலகிருஷ்ணப் பிள்ளை, கடலூர் தெய்வசிகாமணி, நெசனூர் ராமசாமி செட்டியார், குச்சிபாளையம் துரைசாமி ரெட்டியார், விழுப்புரம் கோவிந்தராஜலு நாயுடு, விருத்தாசலம் முனுசாமி, புவனகிரி நமசிவாயம், ராமலிங்கம், சிதம்பரம் கலியாணசுந்தரம் அன்பழகன், மற்றம் பலப்பல வீரர்கள், மாநாட்டுக்காகப் பலநாள் உழைத்து, வெற்றிகரமாக நடத்தினர். இவர்களின் உழைப்பு கட்சியின் உருப்படியான வேலைகளுக்காகவும் இருப்பின், நமது நிலை எவ்வளவு உயரும் என்பதை எண்ணிப் பாருங்கள். திராவிடர், தீரமற்றவர்கள், திறமற்றவர்களா! கூனிய உள்ளமும் குனிந்த வாழ்வும் கொண்டவர்களா! தனமற்றவர்களா, வகையறியாதவர்களா! எல்லாம் உண்டு. ஒன்றுதானில்லை. தொடர்ந்து பணியாற்றுவதில்லை. அது இருப்பின், நம்மை வெல்பவர் யாருமில்லை, ஜஸ்டிஸ் மாநாட்டிலும், மறு தினம் நடந்த சுயமரியாதை, யுத்த ஆதரவு மாநாடுகளிலும், எவ்வளவு உத்வேகம்! காட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறதே, அணைகோலி அமைப்பு ஏற்படுத்துவதைத் தானே காணோம். அது தானே, ஆரியருக்கு இன்னமும இடந்தர ஏதுவாகிறது. என்று தணியுமிந்தச் சோகம்! எவர் போக்குவார் இந்தப் பரிதாபத்தை!!

சுயமரியாதை மாநாட்டிலே தோழர் அழகிரிசாமி தலைமை தாங்கி இரண்டு மணிநேரத்துக்குமேல் ஆற்றிய ஆவேச உரையை, என்னென்பது! சுயமரியதைச் சுடரொளிபறக்க, வீரம் வீறிட்டெழ, நகைச்சுவை நடனமாட, அறிவுத் தென்றல் அனைவர் உள்ளத்தையும் கவர, அழகுவழிய, உவமையும் கதையும், மேற்கோளும் மதுரையும், கம்பன் கவிதையும் வள்ளுவன் குறளும் துள்ளிட, தோழர் அழகிரிசாமி, வறுமை, வாட்டம், வாழ்க்கையில் சுமை ஆகிய பட்டம் பதவிகள் மட்டுமே பெற்ற அழகிரி, அன்று பேசியதையோ, வியாபார உலகிற்காணும் நடுக்கமான கருத்துடன், வாழ்க்கைக் கல்லூரி தரும் பாடங்களுடன், சேர்த்துரைத்த தோழர் தங்கவேலரின் உரையாடலையோ, இறந்தது என் மனைவி, கட்சிப்பற்றல்ல, என்று மார்தட்டி நின்ற குடந்தைத் தோழர் கே.கே.நீலமேகத்தின் முழக்கத்தையோ, கேட்டவர் தில்லைத் தீட்சிதரின் திருப்பாதந்தாங்கிகளாகத் தமிழர் கூட்டம் இருப்பதை இனிக் காணவே சகியார்! தமிழரின் கோட்டை எழத்செய்வர் என்பது திண்ணம்.

மூடச்சடங்குகளை ஒழி! கோயில் வருவாயைப் பொதுப் பணிக்கெனச் செலவிடு! ஆரியத்தை அழிக்க முற்படு! இவைகள் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள்! இவை நாட்டு நடப்பிலே காணப்பட்டுவிட்டால், இடரும் இழிவும், நமக்கேன் இருக்கும்! தமிழர் அதைக் கவனித்து ஆவன செய்தல் வேண்டும், இன்றே செய்யத் தொடங்குதல் நன்று என்பேன்.

வேலையைத் தொடங்க வேண்டும்
தீட்சிதர் வீட்டுக்குள் ஆதிதிராவிடருக்குக் கலியா ணம் நடப்பதுபோல், வைதீகக் கோட்டையில், நமது மாநாடுகள் நடைபெற்றுவிட்டன, ஆனால் மாநாடு, முதல் அத்தியாயமே தவிர, முடிவுரையல்ல என்பது தென்னாற்காட்டுத் தோழர்களுக்கும், தமிழர் யாவருக்கும் நினைவிலிருக்கவேண்டும்.

ஜஸ்டிஸ், சுயமரியாதைக்காரர்கள், கனவுலகவாசி களல்லர், கற்பனாலோகத்தில் குறட்டை விடுபவரல்லர். நாடு இன்றுள்ள நிலை அவர்களுக்குத் தெரியும். ஆபத்துச் சூழ்ந்திருப்பதை அவர்கள் அறிவர். எதிரிகள் எக்காளமிடுவதை அவர்கள் மறக்கவில்லை. இன்று மக்கள் மனத்தை மருட்டும் போர்பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளாமலில்லை. போரில் நாம் வெற்றி பெற்றால்தான், எதுவும் ஈடேற வழிபிறக்கும் என்பதையும் மறக்கவில்லை. எனவேதான், யுத்த ஆதரவு மாநாடு, தோழர் முத்தையா முதலியார் தலைமையில் ஆங்கு நடைபெற்றது. அண்ணாமலப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பி.வி.நாராயணசாமி நாயுடு திறப்புவிழாவாற்றினார். சர்.கே.வி.ரெட்டி நாயுடு அவர்கள் சர்.செல்வத்தின் படத்தைத் திறந்து வைத்தார். நேசநாடுகள் வெற்றிபெற வேண்டும் அதற்கான உதவிகளை மக்கள் செய்யவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேறின. எனவே, போர் சம்பந்தமாக நமது கருத்தென்ன, நாட்டு அரசியல் சம்பந்தமாக நமது எண்ணம் யாது, சமுதாய சம்பந்தமாக நமது திட்டம் என்ன, என்ற இம்மூன்றையும் மூன்று மாநாடுகள் மூலம் விளக்கி விட்டனர் நமது தோழர்கள். இனி, வேலை துவங்க வேண்டியதுதான்! நீங்கள் செய்யப்போவது என்ன? சொல்லுங்கள், கேட்போம்.”

– திராவிட நாடு, 12.4.1942

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *