ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.13.37 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு

viduthalai
2 Min Read

சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கு ரூ.11.63 மற்றும் இரத்த மய்யத்தினை மேம்படுத்துவதற்கு 1.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை

“சென்னை ராயபுரத்தில் 74 படுக்கைகளுடன் 1880ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்.எஸ்.ஆர்.எம்.) மருத்துவமனை வறுமை நிலையிலுள்ள பெண்களுக்கு சேவை செய்வதில் முதன்மையாக உள்ளது.
வடசென்னையிலுள்ள பெரும்பாலான மக்களும் மேலும் அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் போன்ற பகுதிகளிலுள்ள மக்களும் சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங் களில் வசிக்கும் மக்களும் இந்த மருத்துவமனையின் சேவைகளால் பயனடை கின்றனர்.

குடும்ப நல மருத்துவ சிகிச்சைகள், குடும்பக் கட்டுப்பாடு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் நடை முறைகள் உள்ளிட்ட முழு அளவிலான சேவைகளை இம்மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது.

கடந்த சில ஆண்டு களில் குறைந்த மகப்பேறு இறப்பு விகிதம், குறைந்த பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் கொண்ட முன்னணி மருத்துவமனையாக இம்மருத்துவமனை உள்ளது.

இம்மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 12 ஆயிரம் மகப்பேறுகள் நடைபெறுவதன் மூலம் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட வட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறது.

ரூ.13.37 கோடி நிதி ஒதுக்கீடு

இம்மருத்துவமனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் செயல் திறனை அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் கட்டட சீரமைப்பு, மின்சார கருவிகள் மற்றும் மின்தூக்கி பணிகளுக்காக 11.63 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த மருத்துவமனையின் தரம் மேம்படுகிறது.

610 படுக்கைகளிலிருந்து 810 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு இந்த நிதியானது மேலும் வலு சேர்க்கும்.

மேலும், இம்மருத்துவமனையில் உள்ள இரத்த மய்யத்தை முழு அளவிலான இரத்தக் கூறுகள் பிரிப்பு பிரிவு மய்யமாக மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு 1,74,20,197/- ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கு தேவைப்படும் இரத்த சேவை உடனுக்குடன் வழங்குவதற்கு பேருதவியாக இருக்கும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *