சென்னை, ஜன 31 நடிகர் பிரகாஷ் ராஜ் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக வெளியான புகைப்படம் போலி என்பது தெரிய வந்துள்ளது. அது ஏஅய் மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்றும், போலி புகைப்படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். சமூக ஆர்வலரான கவுரி லங்கேஷ் கொலைக்கு பின், நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்ட அவர், கடந்த ஆண்டுகளாக சமூக பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி ஜஸ்ட் ஆஸ்கிங் என்று பதிவிடும் பதிவுகள் ஏராளமான முறை ட்ரெண்டாகி இருக்கிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு
பட்டா வழங்க சிறப்பு முகாம்கள்!
சென்னை, ஜன.31 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு பட்டா வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், 1961-ஆம் ஆண்டில் இருந்து பொது மக்களின் நலன் கருதி மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையையும் செலுத்திய பிறகு நடைமுறையில் உள்ள வாரிய விதிமுறைகளின்படி விற்பனை பத்திரம் வழங்கி வருகிறது. விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் மேலான உத்தரவிற்கு இணங்க முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
சிறப்பு முகாம்
இதன் அடிப்படையில் வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இச்சிறப்பு முகாம்களில் ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெற ஏதுவாக துண்டறிக்கை தருதல் செய்தல், வீடு வீடாக சென்று வசிப்பவர்களிடம் உரிய ஆவணங்கள் சேகரித்தல் மற்றும் அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி பட்டா பெற்று கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து பட்டா பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செயலிகள் மூலம் மோசடி
34 விழுக்காட்டினர் பண இழப்பு!
புதுடில்லி, ஜன.31 பணம் செலுத்தும் செயலிகள் மூலமாக, நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் மோசடி நபர்களிடம் பணத்தை இழப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
எப்அய்சிஓ என்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஆன்லைன் மோசடிகள் குறித்து கடந்தாண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் சுமார் ஆயிரம் இளைஞர்களிடமும், 14 நாடுகளைச் சேர்ந்த 11,000 பேரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது குறித்து எம்அய்சிஓஇ நிர்வாக இயக்குநர் தத்து கோம்பல்லா கூறியதாவது:
மோசடி
பணம் செலுத்தும் செயலிகள் மூலமாக நடைபெறும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது முதலீடுகளுக்கு பணம் செலுத்தி 34 சதவீதம் பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மோசடி நபர்கள் அனுப்பும் தகவல்கள் மூலம் 60 சதவீதம் பேர் மோசடியில் சிக்கியுள்ளனர். ரூ.8 லட்சத்துக்கு மேல் அதிகமான மோசடிகளின் சதவீதம் கடந்த 2023-ம் ஆண்டில் 2 சதவீதமாக இருந்தது. இது 2024-ஆம் ஆண்டில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள மோச டியில் சிக்கியதாக 56 சதவீதம் இந்திய நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். மோசடி களில் இருந்து வாடிக்கையாளர்களை பாது காக்க வங்கிகள் மேற்கொண்ட மோசடி தடுப்பு நடவடிக்கைகளை 45 சதவீத வாடிக்கையாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மோசடிகளுக்கும் மத்தியிலும் டஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் இந்திய வர்த்தகத்தில் தொடர்ந்து அதிகரிக்கிறது. இவ்வாறு தத்து கோம்பல்லா கூறினார்.