தமிழர்களுக்குப் பெருமிதம் தரும் தைத் திங்களைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக அறிவிக்க ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ஆண்ட்ரூ சார்ல்டன் வலியுறுத்தல்!
அவருக்கும், இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழர் அமைப்புகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்து – நன்றி!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழர்களுக்குப் பெருமிதம் தரும் மாதமான தைத் திங்களை தமிழ்ப் பாரம்பரிய மாதமாக அறிவிக்க ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ஆண்ட்ரூ சார்ல்டன் வலியுறுத்தியுள்ளார். அவருக்கும், இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழர் அமைப்புகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தும், திராவிடர் திருவிழா உலக மயமாக, உலகத் தமிழர்களே ஒருங்கிணைந்து முயற்சியுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழர்களின் நன்றிப் பெருவிழா – திராவிடர் திருவிழாவான தைத்திங்கள் முதல்நாளும், பொங்கல் விழாவும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் பண்பாட்டு அடையாளமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக இக் கொண்டாட்டங்களும், பண்பாட்டு அடையாளமும் பல நாட்டு அரசுகளின் அங்கீகாரத்தையும் பெற்று வருவது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும். கனடாவில் தொடங்கிய இந்த பண்பாட்டு அங்கீகாரம், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும், அந்நாட்டைச் சேர்ந்த தமிழர் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே எழுப்பப்படுவது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.
தமிழர்களுக்குப் பெருமிதம் தரும் மாதமான தைத் திங்களை தமிழ்ப் பாரம்பரிய மாதமாக (Tamil Heritage Month) அறிவிக்குமாறு, ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தில் நியூ சவுத் வேல்சில் உள்ள பரமட்டா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஆண்ட்ரூ சார்ல்டன் கடந்த நவம்பர் திங்களில் கோரியிருந்தார்.
ஆஸ்திரேலிய நாட்டு நாடாளுமன்றத்தில்
ஆண்ட்ரூ சார்ல்டன் எம்.பி., கோரிக்கை
‘‘ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிப்பது, தமிழ் பங்களிப்புகளை மதிக்கவும், நாட்டில் தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான துடிப்பை உறுதி செய்யவும் ஒரு வாய்ப்பாகும்’’ என்றும், “ஆஸ்திரேலியா முழுவதும் தமிழ் பாரம்பரிய மாதத்தை அறிவிப்பது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பண்பாட்டைக் கொண்டாடும் இளைய தலைமுறையினருக்கு அவர்களின் வேர்களுடன் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும். கலை, தத்துவம் மற்றும் மொழிக்கான தமிழ்ப் பங்களிப்புகளைப் பாராட்டப் பரந்த சமூகத்தை அழைக்கும். திருக்குறள் போன்ற பண்டைய தமிழ் படைப்புகளையும் பெருமைப்படுத்தும்” என்றும்,
‘‘இந்த அங்கீகாரம், தமிழ் ஆஸ்திரேலி யர்களின் வணிகம், கல்வி மற்றும் பொது சேவை போன்ற துறைகளில் அவர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டும்” என்றும், இது ஆஸ்திரேலியாவினை வளமான பன்முக கலாச்சார நாடாகக் கொண்டாடவும், தமிழ்ப் பங்களிப்புகளை மதிக்கவும், தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான துடிப்பை உறுதி செய்யவும் ஒரு வாய்ப்பாகும்’’ என்றும் அவர் ஆற்றிய உரை முக்கியமானதாகும்.
பாராட்டு மழைகளை நாம் பொழியக் கடமைப்பட்டுள்ளோம்!
தமிழ்கூறும் நல்லுலகமும், தமிழ்நாடும் மகிழ்ச்சியும், உவகையும் பொங்கும் வகையில் பாராட்டு மழைகளை அவர்மீது நாம் பொழியக் கடமைப்பட்டுள்ளோம்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காலங்காலமாய் நமது வேளாண்மை நாகரிகப் பண்பாட்டின்படி கூறி, அறுவடைத் திருநாளை கொண்டாடி மகிழ்வர்.
புலம்பெயர்ந்தும் அந்நாட்டில் குடியேறி, குடிமை உரிமை பெற்றவர்களும், தமிழ் உணர்வோடு கொண்டாடும் பகுத்தறிவு விழாவான பொங்கல் தமிழர் – திராவிடர் திருவிழாவின் சிறப்பினை மிகத் தெளிவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் எடுத்து விளக்கியது; அழகுக்கு மேலும் அழகு சேர்த்த வரலாற்றுப் பெருமை மிகுந்ததாகும்!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்னும் இது நிறைவேற்றப்படவில்லை எனினும், இவ்வாண்டே ஆஸ்திரேலியப் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழர்களுக்குத் தங்கள் வாழ்த்து களைத் தெரிவித்துள்ளனர் என்ற செய்தி நம்பிக்கை தரும் ஒன்றாகும்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை!
நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ சார்ல்டன் அவர்களுக்கும், இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழர் அமைப்புகள், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் மற்றும் பலரது ஒருங்கிணைந்த ஒத்துழைப்புக்குத் தமிழ்நாட்டு மக்கள் சார்பில், நமது உளங்கனிந்த வாழ்த்துகளை, நன்றிகளைக் கூறுகிறோம். மற்ற நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களும், ஏற்கெனவே அங்கு குடிமக்களாகிய தமிழர் பண்பாட்டுக் கள உறவுகளும் இதுபோன்ற பொங்கல் – தை மாதத்தை, மரபுக்குரிய மாதமாக்கி, மகிழ்ந்து கொண்டாட அந்தந்த நாட்டு அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தும், முயற்சிகளை மேற்கொண்டும், கோரிக்கைகளை வைப்பதும் தலையாய கடமையாகும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை!
காலத்தாலும், கருத்தாலும், சமத்துவத்திலும், நயத்தக்க நாகரிகத்திலும் நமது பொங்கல் திருநாள் – உழைப்புத் திருநாள் மாதம் ஒரு திருப்பமும், உள நிறைவும் செறிந்த மாத மல்லவா?
உலகத் தமிழர்களே ஒருங்கிணைந்து முயற்சியுங்கள்!
அந்த மரபுரிமை உலக மயமாக்க, உலகத் தமிழர்களே ஒருங்கிணைந்து முயற்சியுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
31.1.2025