பூமியில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது திமிங்கலம். இது அதிகமான ஆயுள் கொண்ட உயிரினங்களில் ஒன்று. பொதுவாக இவை 70 முதல் 75 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்று பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று, இவை 130 ஆண்டுகள் வரை வாழும் என்று தெரிவித்துள்ளது.
திமிங்கலத்தின் இறைச்சி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெறுவதற்காக, அவற்றை வேட்டையாடுகிற போக்கு அய்ரோப்பாவில் துவங்கியது. அமெரிக்காவில் 18 – 19ஆம் நுாற்றாண்டுகளில் இது உச்சத்தை அடைந்தது. இதனால், பல்வேறு திமிங்கல இனங்கள் அழிந்துவிட்டன. மனிதர்களின் இப்படியான தவறான செய்கையால், திமிங்கலங்களின் ஆயுளை பற்றி நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல் போனது.
தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா பல்கலைக்கழகம் திமிங்கலங்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 40 ஆண்டுகளாக திமிங்கலங்கள் குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்களை, இது அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது சதர்ன் ரைட் வேல் (Southern right whale) எனப்படுகிற ஒரு திமிங்கலம். இது ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் வாழ்கிறது.
இந்த ஆய்வின் வாயிலாக, இந்த திமிங்கலங்கள் தங்களுடைய நடுத்தர பருவத்தையே 75ஆம் ஆண்டில் தான் அடைகின்றன என்று தெரிந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் பெரும்பாலான திமிங்கலங்கள் 75 வயதை அடையும்போது இறந்து விடுகின்றன.
பத்து சதவீதம் மட்டுமே 132 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. அழிந்து வரும் இந்த உயிரினங்களை பாதுகாக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் துளிகள்
ஆக்டோபஸ் விசித்திரமான உயிரினம். அமெரிக்காவைச் சேர்ந்த சிகாகோ பல்கலை மேற்கொண்ட ஆய்வில், ஆக்டோபஸின் எட்டு கைகளும் தனித்தனி நரம்பு மண்டலத்தால் இயக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அய்ரோப்பாவை பூர்வீகமாகக் கொண்டது எல்டர்பெர்ரி. இதன் சாற்றைக் குடித்து வந்தால், குடல் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரித்து, உடல் எடை குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஆண்டுதோறும் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பாம்பு விஷத்தை முறிக்கும் புரதம் ஒன்றை, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டேவிட் பேகர் உருவாக்கியுள்ளார்.