அரிய வானியல் நிகழ்வு : பெரியார் அறிவியல் மய்யத்தில் விளக்கம்

Viduthalai
2 Min Read

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தில் உள்ள பிர்லா கோலரங்கம், முக்கியமான வானியல் நிகழ்வுகளைக் காட்டி, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பணிகளை செவ்வனே செய்து வருகிறது. இப்போது, புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஒரே பாதையில் வருகின்ற அரிய வானியல் நிகழ்வினை ஜனவரி 22 முதல் 25 வரை அனைவரும் பார்க்கும் வண்ணம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம், சென்னை கோட்டூர்புரம் பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்துடன் இணைந்து ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது. இதைப்பற்றி தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தின் செயல் இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன் அவர்களைச் சந்தித்து பெரியார் பிஞ்சு வாசகர், எழுத்தாளர் அபிநயா நேர்காணல் செய்தார். அதன் விவரம் வருமாறு.

அறிவியல் அரங்கம்

அபிநயா: அய்யா வணக்கம்! இப்போது நடந்துகொண்டிருக்கும் அரிய வானியல் நிகழ்வையும், நீங்கள் பிர்லா கோளரங்கத்தில் தொலை நோக்கி மூலமாக மக்களுக்கு காட்டிக்கொண்டு இருப்பதை பற்றியும் சொல்லுங்கள்.
லெனின்: இந்த வானியல் நிகழ்வு கடந்த 22 ஆம் தேதி முதல் நடந்து கொண்டுள்ளது. இதில் ஆறு கோள்களும் ஒரே வரிசையில் மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரையிலும் பார்க்க முடிகிறது என்பதுதான் இதன் சிறப்பு. ஏனென்றால் சில கோள்கள் பகலிலும் தெரியும். சூரியன் அருகிலேயே புதன் இருக்கிறது. அதனால் அது மறைந்துவிடும். மற்றபடி வியாழன், வெள்ளி, சனி ஆகியன கண்களுக்குத் தெரியும். நெப்டியூன் யுரேனஸ் கண்களுக்குத் தெரியாது. ஆகவே, நான்கு கோள்களை சுட்டிக்காட்டுகிறோம். அதிலும் வியாழன் கோளில் 74 நிலாக்கள் இருக்கின்றன. இதில் கலிலியோ கண்டுபிடித்த நான்கு நிலாக்களை தொலைநோக்கி மூலமாக பார்க்கமுடியும். இதை ”கலிலியன் நிலாக்கள்” என்கிறோம். மற்றவை தெரியாது.

அறிவியல் அரங்கம்

அபிநயா: மக்களின் ஆர்வம் எப்படியிருக்கிறது?
லெனின்: சிறப்பாக இருக்கிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் வருகிறார்கள். அதுமட்டுமல்ல, இதற்கென உள்ள செயலிகளில் இதுதான் வியாழன், இதுதான் புதன் என்று தெரிந்துவைத்துக்கொண்டு வருகிறார்கள். “செலஸ்ட்ரான் 8” தொலைநோக்கி வழியாகப் பார்த்துவிட்டு புத்தகத்தில் பார்த்தது போல் இல்லையே… ஏன் என்று கேட்கிறார்கள். புத்தகத்தில் இருப்பது வரைகலை. அதை அவர்களுக்குப் புரிய வைக்கிறோம்.

அறிவியல் அரங்கம்

அபிநயா: இன்னும் எத்தனை நாட்களுக்கு இதைப் பார்க்கலாம்?
லெனின்: இப்போது சூரியன் மறைந்தவுடனேயே புதன் கோள் மறைந்துவிட்டது. இரவு எட்டு மணியளவில் சனியும், சுக்கிரனும் மறைந்துவிடும். வியாழன் மேலே வரும். அடுத்து செவ்வாய் மேலே வரும். இன்னும் ஒரு 5 மணி நேரத்திற்கு இந்த இரண்டு மட்டும் தான் தெரியும். அடுத்தநாள் காலையில் எல்லாமே மேலே வரும். இதுபோல சுற்றி சுற்றி மேலே வந்துகொண்டிருக்கும். அதனால் சில மாதங்களுக்கு நீங்கள் இதை வீட்டிலிருந்தே பார்க்கலாம்.

அறிவியல் அரங்கம்
பிர்லா கோலரங்கத்தில் நாள்தோறும் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நீண்ட வரிசையில் நின்று கோள்களைப் பார்த்து விட்டுச் செல்கின்றனர். இதுபோன்ற தொலைநோக்கி வழியாக பார்க்க வாய்ப்பு இல்லாதவர்கள், ”ஸ்கை வியூ” என்ற இலவசச் செயலி மூலம் பெரியவர்களின் உதவியுடன் இரவு வானில் தெரியும் கோள்களைக் கண்டு வியக்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *