கோவை, ஜூலை 16 ஒன்றிய அரசின் பிடிவாத போக்கால் மூடுவிழாவை நோக்கி ஜவுளித்தொழில் நகர்ந்து வரு வதாக சைமா, குற்றச்சாட்டி உள்ளது.
தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் ரவிஷாம், பொதுச்செயலாளர் செல்வராஜ், அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கோவையில் (15.7.2023)செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் முதுகெலும்பாக ஜவுளித் தொழில் உள்ளது. அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மட்டுமே 40 சதவீதம் ஜவுளித்தொழில் உள்ளது. பாரம் பரியமான இந்த ஜவுளித்தொழில் தற்போது படுவேகமாக சரிவு நிலையை சந்தித்து வருகிறது. டெக்ஸ்டைல் மில்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருள், பஞ்சு. இதன் விலை அபரிமிதமாக உயர்ந்துவிட்டது. பன் னாட்டு அளவில் ஒப்பிடும்போது, இந்திய பஞ்சு விலை, ஒரு பொதிக்கு
ரூ.2 ஆயிரம் அதிகமாக உள்ளது. உள்நாட்டில் போதிய அளவில் உற் பத்தி இல்லாத காரணத்தாலும், தரம் குறைவாக இருப்பதாலும், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இப்படி இறக்குமதி செய்து, தயாரிக்கும் நூல்களை விற்க முடியாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இது, பஞ்சாலைகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, பருத்தி விலைக்கும், நூல் விலைக்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது. இத்தொழிலில் ஏற்பட்டுள்ள தொடர் நசிவு காரணமாக, பல பஞ்சாலைகள் அடிமட்ட நிலைக்கு தள்ளப் பட்டு விட்டன. பஞ்சு மீதான இறக்குமதி வரி 11 சதவீதம் என்பது, இத்தொழிலுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்குகிறது. இவ்வளவு வரி செலுத்தி, பஞ்சு இறக்குமதி செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது. எனவே, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். ஆனால், ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை.
எனவே, ஜவுளித் தொழில் சீரடைய வேண்டு மென்றால், ஒன்றிய அரசு, பருத்தி மீதான இறக்குமதி வரி 11 சதவீதத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும். வங்கிக்கடன் காலத்தை, மேலும் 2 ஆண்டு காலம் நீடித்து தர வேண்டும்.
“இ.சி.ஜி.எல்.எஸ்’’ என்ற வங்கிக் கடன் விதிகளையும் மேலும் 2 ஆண்டுகாலம் நீட்டித்து தர வேண்டும். இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம். மாநில அரசும் மின்கட்டணத்தில் சில சலுகை அறிவித்தால், இத்தொழில் மீண்டு வர உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, “பீக் ஹவர்’’ கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.