ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் கனிம வளங்கள் வெட்டி எடுப்பது குறித்து நாடு தழுவிய ஏலத்தை நடத்தியது.
கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு – ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட நான்காவது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்கும் உரிமையைப் பெற்றது
இதன்படி, ஆந்திர மாநிலம் பாலேபாளையம், தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் டங்ஸ்டன் கனிமங்கள் வெட்டி எடுக்கும் உரிமையைப் பெற்றது
தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கு ‘நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதி’ என பெயரிடப்பட்டது.
இதனால், தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தலத்துக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.
அரிட்டாபட்டி மலையை ஒட்டி உள்ள நாயக்கர்பட்டியில் திட்டம் அறிவிக்கப்பட்ட காரணத்தால், அம்மலையின் நான்கு திசைகளிலும் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் மொத்தமாக அழிக்கப்படும் நிலை உருவாகியது.
தமிழ்நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மரபுத்தலமாக உள்ள இடத்தில் டங்ஸ்டன் வெட்டி எடுப்பதற்கான அறிவிப்பு அரிட்டாபட்டி கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது
இதனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். வேதாந்தா நிறுவனத்தால் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பின், 2018இல் அந்த ஆலையை அரசு மூடியது. அந்நிறுவனத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதன் துணை நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு டங்ஸ்டன் எடுக்க அனுமதி வழங்கியது. இதனால் ஒன்றிய அரசினை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்த திட்டமிட்டனர்..
அரிய வகை கனிமங்களை ஏலம் வி்டும் மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தபோது அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆதரித்துப் பேசினார்.
மக்கள் மதுரை சாலைகளில் போராட்டக்களத்தில் இறங்கிய அதே நேரம் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக அனைத்துக் கட்சியின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றியது. இதுதான் திருப்பு முனையாகும்.
சுரங்கத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு கிடைக்காத நிலை மற்றும் மக்களின் போராட்டம் காரணமாக ஒன்றிய அரசு பின்வாங்கியது.
வேறு வழியின்றி நாடகம் நடத்த திட்டமிட்டனர். அதாவது விவசாயிகள் அமைப்பைச்சேர்ந்த தங்களின் ஆதரவாளர்களைப் பொறுக்கி எடுத்து, அவர்களை பாஜகவின் தமிழ்நாடு தலைமை டில்லிக்கு அழைத்துச் சென்றது.
மக்களின் எழுச்சி மற்றும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தால் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது – அதனைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து திட்டத்தை ரத்து செய்ததாக தமிழ்நாடு பாஜக தலைமை நாடகமாடியது.
22.01.2025 அன்று இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படது.
தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டப்பேரவையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு அரிட்டாபட்டி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
25.01.2025 அன்று அரிட்டாபட்டியைச் சேர்ந்த 32 விவசாயிகள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினர்.
அப்போது விவசாயிகள் தரப்பில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட அழுத்தம் கொடுத்த தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு, அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.01.2025 அன்று மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி சென்றார். கிராமத்தின் எல்லையில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாராட்டுப் பெரு விழா நடத்தப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
ஒன்றிய பிஜேபி அரசு மாநில உரிமைகளைப் புறந்தள்ளி தன்னிச்சையாக நினைத்ததைச் சாதிக்கலாம் என்று மனப்பால் குடித்தால் அது தமிழ்நாட்டில் நடக்காது.
மக்கள் சக்திக்கு முன் எந்த சக்தியும் வெற்றி பெற முடியாது என்பது நினைவிருக்கட்டும்!