சென்னை,ஜன.29- சென்னை கோடம்பாக்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர்நீதிமன்ற வழக்குரைஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் வெளியே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியே காரில் சென்ற அகில பாரத இந்து அமைப்பின் நிர்வாகி மாயாஜி (வயது 47) அந்த பெண் வழக்குரைஞர் நின்ற இடத்துக்கு அருகே காரை நிறுத்தியுள்ளார்.
பெண் வழக்குரைஞரிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அவர், “ஈசிஆர் போறேன்.. வருகிறாயா?” என ஆபாச தொனியில் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வழக்குரைஞர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த பெண் சத்தம் போட்டு அருகில் இருப்பவர்களை அழைத்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் மாயாஜி. இதனையடுத்து அந்த பெண் வழக்குரைஞர், இது தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். கார் எண் மூலம் சம்பந்தபட்ட நபரை காவல் துறையினர் தேடினர். அவர், அகில பாரத இந்து அமைப்பின் மாநில நிர்வாகி என்பது தெரியவந்தது.
அவரது அலைபேசி எண்ணை வைத்து அவர் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்ததைக் கண்டு பிடித்தனர். பின்னர் அங்கு சென்று அவரை கோடம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பெண் வழக்குரைஞரிடம் அத்துமீறிய நபர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கைதாகியுள்ள இந்த நபர் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு பிரியாணி கடையில் மாமுல் கேட்டு தகராறு செய்த வழக்கு உள்ளது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்திருந்த நிலையில் தான் பெண் வழக்குரைஞரிடம் அத்துமீறி தற்போது மீண்டும் சிறை சென்றுள்ளார்.