சென்னை,ஜன.29- கிராம தொழில் முனைவோர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநில பங்கு நிதி ரூ.4.16 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார். உத்தரவு விவரம் வருமாறு:
கிராம அளவில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தனித் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒன்றிய அரசு 60 சதவீத பங்கு நிதியையும் மாநில அரசு 40 சதவீத பங்கு நிதியையும் அளிக்கிறது. நிகழ் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கு ஒன்றிய அரசின் பங்கான ரூ.2.50 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகையான ரூ.1 கோடியே 66 லட்சத்து 66 ஆயிரத்து 667 கோடி என மொத்தம் ரூ.4 கோடியே 16 லட்சத்து 66 ஆயிரத்து 667-அய் விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் கேட்டுக் கொண்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.4 கோடியே 16 லட்சத்து 66 ஆயிரத்து 667 விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ், கிராம தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் சிறு சிறு தொழில்களைத் தொடங்கி தொழில் முனைவோராகத் துடிக்கும் இளைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மானியங்களை அளித்து ஊக்கம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டத்தின் கீழ் மானியங்களை வழங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.