எடுத்துக்காட்டான முதலமைச்சர் திண்டிவனத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே மக்களிடம் குறைகளை கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

viduthalai
2 Min Read

திண்டிவனம்,ஜன.28- விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்று, மக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று (27.1.2025) வருகை தந்தார்.
திண்டிவனத்தில் நேற்று மாலை, நடந்த மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓங்கூர் சுங்கச் சாவடி அருகே மாவட்ட ஆட்சியர் பழனி புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

முதலமைச்சருக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட பொறுப் பாளர்கள் சேகர், பொன்.கவுதம சிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு மாலை 6:40 மணிக்கு வந்த முதலமைச்சர், காரில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கை கொடுத்தும், வணக்கம் தெரிவித்தபடியும் நடந்து சென்றார்.

அப்போது பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்ற முதலமைச்சர், அவற்றில் சில மனுக்களை படித்துப் பார்த்து, தனது உதவியாளரிடம் கொடுத்தார். விழுப்புரத்திற்கு வரும் வழியில், திண்டிவனம் அடுத்த ஒலக்கூரில் உள்ள வட்டார

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
பணியாளர்களின் வருகைப் பதிவேடு, நோயாளிகள் சிகிச்சை விவரப் பதிவேடுகள், மருந்துகள் இருப்புப் பதிவேடுகளைப் பார்வையிட்டு, அதன் விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கான நிதி, ஊட்டச் சத்து பெட்டகங்களை உரிய நேரத்தில் வழங்குவதை மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்; சுகாதார நிலையத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும், நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தாமதமின்றி வழங்கிடவும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின், இரவு 10.00 மணிக்கு, மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், முதலமைச்சரின் திட்ட அறிவிப்புகள், சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *