சென்னை,ஜன.27- ரேஷனில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பருப்பு, பாமாயில் விநியோகத்தை நிறுத்த அரசு முடிவு என சமூக வலைதளங்களில் வதந்திகள் உலா வருகின்றன. ஆனால், வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானவை என உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், “கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது” என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் பொய்யான செய்தி. இச்செய்தி கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியானது. ஆனால், தற்போதுவரை ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நடைபெற்றே வருகிறது. அரசாணையின்படி ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டமானது நீட்டிக்கப்படும். தற்போது 30.6.2025 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தப் போவதாகப் பரவும் தகவல் பொய்யானவை என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.