திருப்பரங்குன்றம் கோயில் மலையில் அமர்ந்து, அசைவ உணவு சாப்பிட்டதற்காக மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான நவாஸ் கனி நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில், மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சினையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து, சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டதாகவும், கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்குச் சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் மலையில் அமர்ந்து, மதநல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு உண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் செயல்பாட்டை கண்டிப்பதாகக் கூறியுள்ள ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன், இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வது சமூகத்தின் அமைதியை நிச்சயம் சீர்குலைக்கும் என்று எச்சரித்துள்ளார். (24-01-2025)
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்ட காலந்தொட்டு, மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்துவதில்லை. அவற்றைப் பற்றியெல்லாம் எந்தவிதக் கவலையும் அதற்கு இல்லை.
அவர்கள் கையில் எடுத்துக் கொள்வதெல்லாம் – மதவாதம்தான் – ஹிந்துத்துவம் தான். மக்களிடத்தில் இருக்கும் பக்தி என்ற மூடநம்பிக்கைதான் பா.ஜ.க. சங்பரிவார்களின் கை முதலாக இருந்து வருகிறது.
சாப்பிடும் விடயத்தில்கூட மதவாத மூக்கை நுழைப்பது எத்தகைய பிற்போக்குத்தனம்!
இவர்கள் சொல்லுவதைப் பார்த்தால் இந்துக் கடவுள்கள் எல்லாம் மரக்கறி சாப்பிடும் பட்டியலில் வருகிறார்களா? மாமிச உணவு சாப்பிடுபவர்கள் – இந்தக் கோயில்களுக்குச் செல்லக் கூடாதா?
காரைக்கால் வட்டம் அம்பகரத்தூரில் ஆண்டுதோறும் கிடா வெட்டு நடந்ததே! அது எப்படி?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களின் தலைமையில் போராட் டம் நடத்திதானே அது தடை செய்யப்பட்டது.
கடவுள்களிலும் ‘பிராமண’ – சூத்திரக் கடவுள் என்ற பேதம் உண்டா?
திருப்பதி ஏழுமலையானுக்கும், திருப்பரங் குன்றம் சுப்பிரமணியனுக்கும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தங்கத்தினாலான பூணூலை அணிவித்ததையும் கணக்கில் கொண்டால், இந்துக் கடவுள்களிலும் ஜாதி வேறுபாடு உண்டு. அப்படித்தானே!
கடவுள் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பார்ப்பனர்கள் கூறுவதாகத் தானே பொருள்.