கோவை,ஜன.26- தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு வைக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கோயம்புத்தூர் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கல்விசார் குழு சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, விருதுகளை வழங்கினார்.
மேலும் கடந்தாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு களில் 100 சதவீதம் தேர்ச்சி பெறக் காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பள்ளி முதல்வர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசிய தாவது: ஒன்றிய அரசே நம்மை பாராட்டுகிறது. பள்ளி இடைநிற்றல்கள் குறைவதற்கு தனியார் பள்ளிகளும் காரணம்.
பல்வேறு விதமான பின்னணிகளில் இருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அப்படி வரும் எல்லா பிள்ளைகளும் அறிவாளியாக இருக்க முடியாது.
நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்யாமல், எல்லா பிள்ளைகளையும் ஏற்றுக் கொண்டு தயார் செய்கின்றோம் என தனியார் பள்ளிகள் சொல்ல வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என இருவரும் சேர்ந்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.