டில்லி உயர்நீதிமன்றத்தில் சமூக அநீதி!

Viduthalai
3 Min Read

டில்லி உயர்நீதிமன்றத்தில் பணியாணைகளுக்கான அறிவிப்பு 14.07.2023 அன்று வெளியானது. 16 பேருக்கான இந்த பணியாணைகளில் பொதுப்பிரிவு 3, தாழ்த்தப்பட்ட வகுப்பார் 7, பழங்குடியினர் 6 என்ற எண்ணிக்கையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீட்டின் விதிகளின் படி  பணியாளர் நியமனத்தில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு கொடுக்கப்பட வேண்டும்

 ஆனால் டில்லி தலைநகரின் ஆளுமைக்குள் வரும் டில்லி  உயர் நீதிமன்ற பணிகளுக்கான வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகங்களிற்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்பட்டுள்ளது.  ஆனால், டில்லி உயர்நீதிமன்றம் அரசமைப்புச் சட்டம் தந்த இடஒதுக்கீட்டை கணக்கில் கொள்ளாமல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை தவிர்த்து விட்டு வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 ஆகவே ஒன்றிய அரசு இதில் தலையிட்டு தற்போது வெளியிட்டுள்ள இந்த பணியாணைகளை ரத்து செய்து விட்டு அரசமைப்புச்சட்டப்படி இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் சேர்த்து புதிய அறிவிப்பை வெளியிடவேண்டும், இதன் மூலம் டில்லி உயர்நீதிமன்றத்தின் பணியிடங்களில் அனைத்துப் பிரிவினருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இது ஏதோ அறியாமையினால், மறதியினால் நடைபெற்ற நிகழ்வு அல்ல.

ஊருக்கெல்லாம் நீதி வழங்குவதாகக் கூறப்படும் ஓர் உயர்நீதிமன்றத்தில், நாட்டின் பெரும்பாலான மக்களாகிய (மண்டல் குழுப் பரிந்துரை ஆவணத்தின்படி 52 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோருக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதானது  எந்த வகையிலும் நியாயமானதோ, நீதியானதோ அல்ல!

இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து (1950 சனவரி 26) 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட் டோருக்கு வெறும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு   வழங்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 340 பிரிவின்படி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிற்படுத்தப்பட்டோரின் நல னுக்காக ஒன்றிய அரசு ஆணையம் அமைத்து அதன் பரிந் துரைகளின் அடிப்படையில்  இடஒதுக்கீடு உள்பட பிற்படுத்தப் பட்டோரின் நலன்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் பரிந்துரை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

எடை போட்டு எந்தப் பழைய காகிதக் கடையில் விற்றார்களோ, நாமறியோம்!

இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பி.பி. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் அளிக்கப்பட்டும், 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியதோடு; அனைத்திந்திய அளவில் சமூக நீதியாளர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டதன் விளைவாக வராது வந்த மாமணியாக வி.பி. சிங் பிரதமராக வந்த போது 1990இல் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 

27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அதிலும் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வில்லை. 2006இல் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற முறையில் கல்வியில் இடஒதுக்கீடு அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசில் (ஹிறிகி) கொண்டு வரப்பட்டது.

இவ்வளவுத் தடைகள் பிற்படுத்தப்பட்டோருக்கு  – இதுவரை 27 விழுக்காடு நிறைவு பெற்றதா என்றால் அதுதான் இல்லை. 15 விழுக்காட்டைக்கூட எட்ட முடியாத கையறு நிலை.

அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீட்டில்கூட உச்சநீதிமன்றம் வரை சென்று கதவைத் தட்டியபின்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது.

இன்றைக்கு இருக்கக் கூடிய பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸின் இடஒதுக்கீடு எதிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றக் கூடியது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், அதனைப் பொருட்படுத்தும் ஆட்சி ஒன்றியத்தில் இல்லை.

இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மைப் பகுதி யினரான  பிற்படுத்தப்பட்டோருக்கு விழிப்புணர்வு வராதவரை இழப்புகளைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

2024இல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சமூகநீதி சக்திகள் – இவர்கள் தான் மக்கள் தொகையில் பெரும் பாலானோர் – பிஜேபிக்கு தக்க பாடம் கற்பிக்கத் தயாராக வேண்டும் – கரணம் தப்பினால் மரணமே – எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *