அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோயைக் கண்டறியும் சிடிஸ்கேன் வசதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

viduthalai
1 Min Read

சென்னை, ஜன. 24- சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக் கான ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறியும் சிறப்பு முகாம், அரசு எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையில் தாய் சேய் இணை சிகிச்சை பிரிவு மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைப் பிரிவு ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி நேற்று (23.1.2024) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், புகையிலையினால் ஏற்படுகிற வாய் புற்றுநோய் போன்ற ஆரம்ப நிலை புற்றுநோய்களை கண்டறிவதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.300 கோடி செலவில், மும்பையில் உள்ள மகாத்மா காந்தி புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத்தை போல் பிரம்மாண்டமான புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

விழிப்புணர்வு

அதற்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஓராண்டு காலத்தில் இந்த பணிகள் நிறைவு பெற்று அண்ணா பெயரால் புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் செயல்படவுள்ளது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சார்பில், நடமாடும் மருத்துவ வாகனத்தின் மூலம் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் முதன்முறையாக அரசு எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையில், ரூ.1 கோடி செலவில் தாய் சேய் இணை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை பிரிவில் நல குறைவான, எடை குறைவான, குறைமாதமாய் பிறந்த குழந்தைகள் தங்கள் தாயுடன் 24 மணி நேரமும் இணைந்து இருப்பதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து மாவட் டங்களிலும் உள்ள அரசு மருத்துவ மனைகளிலும் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் பி.இ.டி.சி.டி. ஸ்கேன் வசதியை கொண்டு வர பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *