11 வயது சிறுமி நவீனாவின் ஆங்கிலக் கவிதை நூல் – தமிழர் தலைவர் வெளியிட்டார்
சென்னை, ஜூலை 17 லண்டனில் வசிக்கும் மருத்துவர் மு. வெங்கடேஷ் – மருத்துவர் சந்தனா இணையரின் 11 வயது மகள் நவீனா அவர்கள் எழுதிய ஆங்கில கவிதை தொகுப்பு சென்னையில், 15.7.2023 அன்று மாலை அய்ந்து மணி அளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டது.
விழாவில், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூல் ஆசிரியரின் தாத்தா, பாட்டி மருத்துவர் முத்துக்கிருஷ்ணன், மருத்துவர் ருக்மணி, சந்திரகுமார், மருத்துவர் மீனாம்பாள், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், மருத்துவர் சீனிவாசன் பரமசிவம், ஆடிட்டர் ராமச்சந்திரன், ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேஷ், பெரியார்திடல் மேலாளர் சீத்தாராமன், சுதா அன்புராஜ் மற்றும் சான்றோர்கள் திரளாக வந்திருந்தனர்.
நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நூல் ஆசிரியர் சிறுமி நவீனாவின் திறமைகளை பாராட்டி வியந்தார். நவீனாவின் பள்ளிஆசிரியர், நவீனாவின் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்திய விவரத்தையும், நவீனாவின் பெற்றோர் அளித்த ஆதரவையும் பெருமையாக எடுத்துக் கூறினார். நவீனா தன்னுடைய முதல் கட்டுரையை பெரியார் பிஞ்சு இதழில் வெளியிட்டதையும் நினைவு கூர்ந்தார். ஏ.எஸ். பன்னீர்செல்வம், சுப. வீரபாண்டியன் ஆகியோர் நூல் ஆசிரியரின் புலமையை கண்டு வியந்து மேலும் இது போன்ற நூல்களை வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தந்தை மருத்துவர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்கிட, தாயார் சந்தனா நன்றியுரை கூற, நூலாசிரியர் நவீனா ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை கட்டட வடிவமைப்பாளர் யாழினி ராமச்சந்திரன் தொகுத்து வழங்கினார். விருந்தினர்கள் அனைவருக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆங்கிலக் கவிஞர் நவீனாவுக்கும், பெற்றோருக்கும் கழகத் தலைவர் ஆசிரியர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். நூலாசிரியர் நவீனாவின் தாயார் மருத்துவர் சந்தனா நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சிக்கு ரூ.10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். நூலாசிரியர் நவீனா தனது ஆங்கிலக் கவிதை நூலின் அய்ந்து பிரதிகளை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார்.