மைசெனா க்ரோகடா என்பது அய்ரோப்பாவிலும், ஜப்பானிலும் வளரும் ஒரு வகையான காளான். இது, நீளமான காளான் வகைகளுள் ஒன்று. இதற்கு ஒளிரும் தன்மை இருப்பது இதுவரை அறியப்படாத ஒன்று. தற்போது தான் முதன்முதலாக இது ஒளிர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுண்நெகிழிகளால் ஏற்படும் கேடுகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது, மக்களால் பரவலாக உண்ணப்படும் கடல் மீன்களின் உடலில் நுண் நெகிழிகள் இருப்பதை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ட்லாந்து மாநிலப் பல்கலை. கண்டறிந்துள்ளது. இவற்றை உட்கொண்டால் நம் உடல் நலமும் பாதிக்கப்படும் என்கின்றனர்.
சில தாவரங்கள் ஆண் மரம், பெண் மரம் என்று தனித்தனியாக இருக்கும். ஆனால், வால்நட் மரம் பருவத்திற்கு ஏற்ப தன் பூக்களின் பாலினத்தை மாற்றிக் கொள்ளும். இது ஏற்கெனவே அறியப்பட்ட விஷயம் தான் என்றாலும், முதன்முறையாக இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ட்யுலேன் பல்கலை. மேற்கொண்ட ஆய்வில், மாலை வேளைகளை விட காலை வேளைகளில் காபி குடிப்பது, உடலுக்கு பல வகைகளில் நன்மை தரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான உருகுவேயில், விஞ்ஞானிகள் மீசோசர்ஸ் (Mesosaurs) எனும் கடல்வாழ் உயிரினத்தின் தொல்லெச்சத்தைக் கண்டறிந்துள்ளனர். இவை, டைனோசர்கள் போல் ஒருகாலத்தில் வாழ்ந்து அழிந்துவிட்டவை.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டெல் அவிவ் பல்கலை. ஆய்வாளர்கள் அந்த நாட்டில் உள்ள டிம்னா பள்ளத்தாக்கில், 10ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த தாமிர ஆலை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அங்கு தாமிரம் உருவாக்கப்பட்டபோது குறைவான சுற்றுச்சூழல் மாசுபாடு தான் ஏற்பட்டுள்ளதாம்.
திமிங்கிலச் சுறாக்கள் உலகின் மிகப் பெரிய விலங்குகளில் ஒன்று. 60 அடி நீளம் வளரும். சமீபத்தில் மெக்சிகோ நாட்டின் கடற்கரையை ஒட்டி இவற்றை ஓர்கா திமிங்கிலங்கள் வேட்டையாடுவதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். திமிங்கிலச் சுறாக்களை விட அளவில் சிறிய (26 அடி நீளம் மட்டுமே வளரும்) ஓர்கா கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடுகின்றன.
உரம் உள்ளிட்ட பல பொருட்களில் முக்கிய சேர்மானம் அமோனியா. வேண்டிய இடத்தில் காற்றிலிருந்து அறை வெப்பநிலையிலேயே அமோனியாவை உருவாக்கும் கருவியை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை.உருவாக்கி உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 16.6 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர்களின் காலடித் தடங்களைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். டைனோசர் பற்றிய புதிர்களுக்கு இது விடை தரலாம்.
பூமியில் மட்டுமின்றி செவ்வாய் கோளிலும் எரிமலைகள் உள்ளன. அவற்றில் வெளியான சாம்பலை ஆராய்ந்தால், செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.