போடிநாயக்கனூர், ஜன. 23- தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மாவட்டக் கழக காப்பாளர் பொறியாளர் ச.ரெகுநாகநாதனின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 19.1.2025 அன்று சிறீகணேஷ் ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. விழாவுடன் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டமாகவும் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட தலைவர் சுருளிராஜ் அனைவரையும் வரவேற்று ரெகுநாகநாதன் செய்து வருகின்ற கழகப் பணிகள், இரத்ததான முகாம், மின்மயான பணிகள், சேவைகள் குறித்துப் பேசினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.குணசேகரன் தொடர வேண்டிய இன்றைய கழகப் பணிகள், கம்பம் மாவட்டத்தில் இல்லம் தோறும் கழக குடும்பத்தை சந்தித்தது – ரெகுநாகநாதன் அவர்களுக்கு துணைவியார் பேபி சாந்தா தேவி எவ்வளவு உறுதுணையாக உள்ளார் என்பதைப் பாராட்டி தந்தை பெரியார் அவர்களுக்கு அன்னை மணியம்மையார் எப்படி உறுதுணையாக இருந்தார்களோ அதேபோல் ரெகுநாகநாதனுக்கு பேபி சாந்தா தேவி இருப்பதாகக் குறிப்பிட்டுப் பொன்னாடை அணிவித்தார்.
கழகப் பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மிக விரிவாக எடுத்து கூறி, வரும் சட்டமன்ற தேர்தலில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கூட்டணி 234 இடங்களையும் கைப்பற்றும், அதற்கு அனைவரும் துணை இருக்க வேண்டும் என நீண்ட கணீர் குரலில் உணர்வுபூர்வமாகப் பேசினார்.
பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், திமுக மேனாள் செயலாளர் காங்கிரஸ் முசாக் மந்திரி, வர்த்தகர் சங்கம் வேல் முருகன், சிபிஅய் சத்தியராஜ், மார்க்சிஸ்ட் பாண்டியன், நகர கழக செயலாளர் முருகானந்தம், தலைவர் பெரியார் லெனின், மாவட்டத் துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன், கருப்புச் சட்டை நடராசன், லோ.முத்துசாமி, கம்பம் செந்தில்குமார், கம்பம் சிவா, ஆண்டிபட்டி ஆண்டிச்சாமி ஓவியர் பிரவீன், சண்முகம் உள்பட நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.