திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா? ஒன்றிய அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பும் நூதன போராட்டம்!

viduthalai
1 Min Read

சென்னை. ஜன.22- காவி உடை அணிந்த திருவள்ளுவர் சிலையை ஆளுநர் பயன்படுத்துவதைக் கண்டித்து, தலைநகர் சென்னை மக்கள் இயக்கம் சார்பில் நூதனமான போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளுவர் பிறந்த நாளை தை முதல் நாள் (14.01.2025) என்று கணக்கிட்டு அதை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்ற சூழலில், அனைவரும் இந்திய ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ள வெண்மை ஆடையணிந்த வள்ளுவர் உருவத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டு ஆளுநர், மரபுகளை மதிக்காமல் காவியணிந்த இந்துத்துவ அடையாளத்தோடு உள்ள திருவள்ளுவர் உருவப் படத்தை பயன்படுத்தினார். தமிழ்நாடு அரசு உள்பட இன உணர்வாளர்கள் பலரும் கண்டித்தனர்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயலைக் கண்டித்தும், இந்திய ஒன்றிய அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தையே தமிழ்நாடு ஆளுநர் பயன்படுத்த வேண்டுமெனக்கோரியும் தலைநகர் சென்னை மக்கள் இயக்கம் சார்பில் 20.01.2025 அன்று காலை 10 மணியளவில் வியாசர்பாடி அஞ்சலகத்திலிருந்து ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவர் படத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தலைநகர் சென்னை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எ.த.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சென்னை மாநகராட்சியின் 37ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெ.டில்லிபாபு, மதிமுகவின் 35ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சு.ஜீவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 45ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் இளஞ்சேகுவேரா உள்ளிட்டோரும், காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய குடியரசு கட்சி, அய்க்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *